Tuesday, 22 October 2024

எல்லையில்லா ஆனந்தம்! (Bliss Beyond Boundaries) - மதிபாலன்

 நண்பர்களே!      
வணக்கம். 

இது ஒரு கட்டுரைக்கதைத் தொடர். இதில் செய்தியும் கதையும் பின்னி பிணைந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால்,இதில் நீங்கள்,நான், மற்றும் நமக்குத் தெரிந்த யாவும் இருக்கும்.

அத்தியாயம்- 1
பிரபஞ்சத்தின் விதை

  அது இடமும் பொருளும் இல்லாத ஒரு நிலை. ஆனாலும் ஏதோ ஒன்று அங்கு இருந்தது. அது எங்கிருந்தது எப்படி உருவானது என்னும் கேள்விக்கெல்லாம் இடமில்லை. அதை பார்ப்பதற்கு யாரும் இல்லை அதை உணர்வதற்கு எதுவும் இல்லை.

அது தானே தன் இருப்பை உணர்ந்து கொண்டது. தான் ஆற்றலாக இருப்பதை புரிந்து கொண்டது. தான் பொருளாக மாறமுடியும்,உருவம் கொள்ள முடியும் என்னும் விதை அதற்குள் இருந்தது.

தன்னுணர்வால் தன்னை ஒருங்கிணைத்து., ஒரு சிறு புள்ளியாய் உருவெடுத்தது. ஆற்றலின் திரண்டுருண்ட வடிவமாய் அது இருந்தது. அதனைச் சுற்றி திரளாத அடர்த்தியற்ற ஆற்றல் சூழ்ந்திருந்தது.

 வெளிப்புற சக்தியை உள்வாங்கி, மெதுவாக அடர்த்தியை அதிகரித்துக் கொண்டே சென்ற அந்தப் புள்ளி தன் சுற்றளவை சற்றே பெருக்கிக் கொண்டது. மீண்டும் தன் அடர்த்தியை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது சுற்றளவை நிலையாக வைத்துக் கொண்டு ஆற்றலின் அடர்த்தியை கூட்டியது.

முடிவிலியாய்  உயர்ந்த அடர்த்தி அதற்கு மேல் தாங்க முடியாத நிலையை எட்டி சட்டென்று வெடித்துப் பரவியது.
 தான் ஆற்றலாக இருந்து பொருளாக உருமாற்றம் பெறுவதை தானே உணர்ந்தது. 

ஆற்றல் அடர்ந்து அழுத்தம் கூடி வெடித்து பரவுகையில் வெப்பம் ஒளியென இரண்டாக மாற்றம் கண்டது. அவ்விரண்டிலும் பருப்பொருள் துகள்கள் அடங்கியிருந்தன.

வெப்பமும் ஒளியும் அளவற்ற வேகத்தில் ஆற்றல்  கோளமாய்  விரிந்து பயணித்தன. விரியும்போது தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டன.
அவை,  தாம் உருவாக்கிய வெற்றிடத்தில்  தாமே பரவி நிறைந்தன. 

ஆம்..  பிரபஞ்சத்தின் ஒரு துளி பிரசவமானது. 
அதற்குள் நீங்களும் நானும் கூட இருந்தோம்!

 (தொடரும்)

3 comments:

  1. வித்தியாசமான புதிய செய்தி.
    தொடரட்டும்..👍

    ReplyDelete
  2. நன்றி... மகிழ்ச்சி 👍

    ReplyDelete