Friday, 25 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-4 அறிவுக்குத் தெரிந்தது மிகவும் சொற்பம்!


பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய புத்தகம். அதில் மனிதன் படித்தது ஐந்து சதவீதம் கூட இல்லை. மீதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் வரை மனிதன் இருப்பானா என்றே தெரியவில்லை.

கண்ணுக்கு தெரிவதைப்பற்றி மட்டும் தான் மனிதன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறான். 

சூரியன், அதைச் சுற்றும் கோள்கள், நிலா மற்றும் நட்சத்திரங்கள் இவற்றைப் பற்றி மேலோட்ட அறிவே மனிதனின் அறிவு. 

 இத்தனை அறிவியல் ஆய்வுக்குப் பிறகும் மனிதன் அறிந்தது ஐந்தே சதவீதம் என்றால் மீதி உள்ளவை மர்மத்திலும் மர்மம். அவற்றை இருட்பொருள் என்றும் இருளாற்றல் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது. என்னவென்று அறியும் அறிவை மனிதன் இன்னும் எட்டவில்லை.

தாத்தா பாட்டியை பெரும்பாலும் தெரியும். கொள்ளுத் தாத்தாவை பார்த்தவர் மிகச் சிலர். எள்ளுத் தாத்தாவை எவருக்கும் தெரியாது.

 நான்காம் தலைமுறையே தெரியாத மனிதன்தான் "நான்தான்" எல்லாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறான்.

தாவரங்களும் மனிதனும் ஒரே இனம்தான். ஏனெனில் இருவருக்கும் மூதாதையர் ஒருவரேதான். அது ஒரு செல் உயிரி. இது கூட மனிதனின் அனுமானம்தான். உறுதியாய் சொல்ல ஒரு ஆதாரமும் இல்லை.

உயிருள்ளவை எல்லாம் இயங்குகின்றன. உயிரற்றவை எதுவும் இயங்குவதில்லை என்று பெரும்பாலோர் நினைக்கிறோம்.

பிரபஞ்சத்தில் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும்தான். 

எப்படி?
கல், மண், மரம், மனிதன் எல்லாம் அணுக்களால் ஆனவை என்று தெரியும். எல்லாமே எலக்ட்ரான் புரோட்டான்  நியூட்ரான் தொகுப்பு. இதில் எலக்ட்ரான்கள் எல்லாம் இயக்கத்தில் உள்ளன. மனிதனில் மட்டுமல்ல மற்றவற்றிலும்தான். இப்போது சொல்லுங்கள் இயக்கம் என்பது வெளியில் மட்டுமா? இல்லை. உள்ளுக்குள்ளும் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 தெரிந்தவை மட்டும்தான் முடிவா என்றால் இல்லை.இயற்கை அனுமதித்ததை மட்டுமே மனிதன் அறிந்து கொண்டிருக்கிறான்.

அறிவியலால் அனைத்தும் படைத்தேன் என்பவன், எந்த ஓர் அணுவையாவது படைத்தானா? அணுவின் உட்பொருளை ஆற்றலை இயக்கத்தை மனிதன் படைத்ததாய் மார்தட்ட முடியுமா?

 இயற்கை...

கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டம். இவன் கண்ணுக்கும் தெரியாத உயிர்ப் பிண்டம்!

2 comments:

  1. தெரிந்தவை மிக சிறியது.
    தெரியாதது.. அளவற்றது.
    👏👌👍

    ReplyDelete