Showing posts with label #கட்டுரைக் கதை. Show all posts
Showing posts with label #கட்டுரைக் கதை. Show all posts

Thursday, 7 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- அத்தியாயம் 14- முழுமையை உணர்தல்!

எல்லையில்லா ஆனந்தம் என்பதை மனிதன் தான் பெற்றுள்ள பொருட்கள் மற்றும் வசதிகளை வைத்து அடைய முடியாது.

 வெளிப்புறப் பொருட்களால் கிடைக்கும் இந்த வசதி அல்லது இன்பம் நிலையானது அல்ல. அவை இருக்கும் வரை தரும் மகிழ்ச்சி அதை விட்டு விலகும் போது இல்லாமல் போய்விடுகிறது. அல்லது ஒரு வெறுப்பு ஏமாற்றம் வந்து விடுகிறது.

 எல்லையில்லா ஆனந்தம் என்பது ஐம்புலன் உணர்ச்சி நுகர்வுகளால் கிடைக்கக்கூடியது அல்ல. பின் எப்படி உருவாகும்?

 எல்லையற்ற இறைவன் நம்மோடு இருக்கிறார்.தான் இறைவனின் ஓர் அம்சம் இன்று மனிதன் உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் ஏற்படுகிறது.

 இறைவனோடு இணைப்பு  ஏற்படும் போது தானும் இயற்கையும் இறைவனும் வேறல்ல என்று முழுமையாக உணர்ந்து கொள்ளும் போது அந்த பேரானந்தத்தின் கதவுகள் திறக்கின்றன.

   உடலுக்குள் அடைபட்டுள்ள   இந்த உயிர் வாழ்க்கை முடிந்தாலும் தனக்கு முடிவில்லை. தான்  முடிவற்ற  ஓர் ஆன்மா என்பதை உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் சூழ்ந்து பரவுகிறது.

 தான்  என்பது ஒரு தனித்த அடையாளம் என்பதை மறந்து உருவமற்ற இயற்கை சக்தியில் கலக்கும் போது அதே சமயம் தான் இருக்கிறோம் என்பதை உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் அதுதான் என்பது உணரமுடியும்.

 வரம்புகள் இல்லாத பிரபஞ்ச வெளியின் எல்லையிலும் நாம் இருக்கிறோம் என்று உணரும் போது பேரானந்தம் முகிழ்க்கிறது.

  ஆனால் இந்த நிரந்தர ஆனந்தம் கிடைப்பதற்கு எது தடையாக இருக்கிறது ?

   மனிதன் தனது ஆசைகள் பிரச்சனைகள் கவலைகள் இவற்றுக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால்தான் இந்த பேரானந்தத்தை  உணர முடியாமல் இருக்கிறது.

 மனிதன் தன் அறிவால்   எல்லாவற்றையும் சாதித்து விடலாம்  என்று நினைக்கும் அறியாமையை விடவேண்டும்.

 எல்லையற்ற பேரறிவின் மூலமே இந்தப் பிரபஞ்சமும் தானும் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எல்லையில்லா ஆனந்தம் வளர்கிறது.

 தான் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும் போது தன்னால் எல்லாம் முடியும் என்று நினைக்கும் போது தன் அறிவை விட மேலானது ஒன்றும் இல்லை இன்னும் அறியாமையில் இருக்கும் போது இந்தப் பேரானந்தம் கிடைப்பதில்லை.

 பிரபஞ்ச சக்தியில் அல்லது இறைசக்தியின் முன்பு நாம் அணுவுக்கும் சிறிதானவர்கள் என்னும் புரிதல் விளையும்போது   இறை சக்தியின் முன்பு ஒரு முழு சமர்ப்பித்தல் மனிதனுக்கு ஏற்படுகிறது.

  அப்போது தான் அடையும் உலகியல் துன்பங்களுக்கு ஒரு முடிவு தன்னால் கிடைக்கக்கூடியது அல்ல என்னும் நிதர்சனம் புரிந்து விடுகிறது.

 தன் அறிவால்  எட்டமுடியாத பிரச்சனைகளுக்கான தீர்வை இறைவன் வழங்க முடியும் என்னும் தெளிவு பிறக்கும் போது  எல்லையில்லா ஆனந்தம் ஆரம்பமாகிறது.

 உலகம் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நின்றாலும் இறைவன் யாருடன் இருக்கிறாரோ அவருக்கு அச்சம் ஏற்படுவதில்லை. இயற்கையின் பாதுகாப்பு தன்னைச் சுற்றி இருக்கிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணரும்போது கவலைகள் எதுவும் இல்லாமல் போகின்றது.

 இவ்வுலகில் ஒவ்வொரு நிகழ்வும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை. இந்த மனித குலத்தை நல்வழிப்படுத்தவும் துன்பங்களிலிருந்து விடுபடவும்  துன்பங்கள் இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து வாழ்க்கை நடத்தவும் இறைவன் அல்லது இயற்கை சில பாதைகளை காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 அந்தப் புரிதல் எளிதில் கிடைத்துவிடாது. பிரச்சனை மற்றும் துன்பங்களுக்கு தனது அறிவால் உழைப்பால் முயற்சியால் தீர்வு கிடைக்காத போது மனிதன் இறைவனை நாடுகிறான்.

 தனக்கு மேலான எல்லையற்ற இறையாற்றலின்  பேரறிவு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்   என்பதை ஒரு மனிதன் காணும்போது பேரானந்தம்  உள்ளுக்குள் நிறைகிறது.

 உலகப் போராட்டங்களால் இருந்த உள்ளத்தின் கொந்தளிப்பு மறைந்து போகிறது. இறப்பைப் பற்றிய கவலையும் பயமும் இல்லாமல் போகிறது. இதைத்தான் விடுதலை அல்லது முக்தி என்கிறோம். இந்த உலகில் உயிருடன் இருக்கும்போதே  இந்நிலையை அடைவது மிகவும் சிறப்பு.

 நான் நிரந்தரமானவன் என்பதை உணர நிரந்தரமான எல்லையற்ற  பிரபஞ்ச சக்தி உதவுகிறது.

அதுதான் கடவுள் என்று எனக்குப் புரிகிறது!
உங்களுக்கு?