Thursday, 31 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-9 -வாழ்வின் அர்த்தம் புரிந்ததா?

வாழ்வில் ஓடி ஓடி களைத்துப் போன ஒருவன் மலை அடிவாரத்தில் தங்கி இருந்த ஒரு ஞானியைப் பார்க்கப் போனான்.

அது மரங்கள் அடர்ந்த பகுதி. சிறியதாய் ஒரு தெள்ளிய நீரோடை மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. ஓலை வேய்ந்த ஒரு குடிசையின் அருகில் ஒரு காட்டு மரத்தடியில் அமர்ந்திருந்தார் ஞானி.

 அவன் மிகவும் பணிவாய் குனிந்து வணங்கினான். அவர் கைகாட்ட எதிரில் அமர்ந்தான்.

 "ஐயா நான் ஒரு நெசவாளி. வயது 40க்கும் மேல் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மகன் ஒரு மகள்.

 மகளுக்கு திருமணமாகி அவள் கணவன் குடிகாரனாகிப் போனதால் வாழா வெட்டியாக என் வீட்டில் இருக்கிறாள். 

மகன் நகரத்து நெல்மண்டியில் உதவியாளனாக இருக்கிறான். அவன் ஊதியத்தில் அவனைப் பார்த்துக் கொள்ளவே அவனால் முடியவில்லை.

என் மனைவியோ நோயாளி.படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். வீட்டு வேலையோடு சேர்த்து அவளையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 நான் நெசவு செய்து வரும் வருமானம் வாய்க்கும் கைக்குமே போதவில்லை. துன்பத்தின் எல்லையில் துவண்டு போய் கிடக்கிறேன். நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்" என்றான்.
 
ஞானிஅவனை நிமிர்ந்து பார்த்தார். 
"நீ நூல் துணி நெய்வதை விட்டுவிட்டு, பட்டு நெசவுக்கு மாறினால் என்ன?" என்றார்.

 "அது என்னால் எப்படி முடியும் ஐயா? பட்டு நெசவு  செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லையே!". சங்கடத்துடன் தலைகுனிந்தான் அவன்.

 ஞானி சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்தார்.  "சிறிது கடன் வாங்கி முதலீடு செய். அதோடு, செல்வத்தின் நடமாட்டம் எங்கு அதிகம் உள்ளதோ அங்கு சென்று விற்பனை செய். அல்லது லாபம் வரக்கூடிய வேறு தொழில் செய் !"

 "இல்லை ஐயா. எனக்கு வேறு எதுவும் தொழில் தெரியாதே!"

 "தெரியாது என்றால் இப்போது கற்றுக்கொள்."

 "இந்த வயதுக்கு மேல் புதுத் தொழிலை என்னால் கற்றுக் கொள்ள முடியுமா  ஐயா "

 ஞானிகளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது. "முடியும் என்று நினைத்தால் முடியும். முதலில் உன் மனதை அதற்கு தயார் செய்துகொள். முயற்சி செய். மீண்டும்  பிறகு வா!" 

 வணங்கி விடை பெற்றான் நெசவாளி.
 அதன் பிறகு ஞானி சொன்னதைப் போல் செய்தான். ஊர் செல்வந்தரிடம் கொஞ்சம் கடன் வாங்கி 
பட்டு நெசவுக்கு  மாறினான். பட்டு வேட்டிகள், சேலைகள் நெய்தான்.

 உள்ளூரிலேயே விற்பனை செய்வதை விட்டுவிட்டு  பக்கத்து நகரத்தில் கொண்டு போய் விற்றான். வருமானம் அதிகரித்தது.

 தன் மனைவிக்கு உயர் மருத்துவம் பார்த்து அவளை குணப்படுத்தினான். தன் மகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டான். 

செல்வந்தரிடம் வாங்கிய கடனை சில மாதங்களில் அடைத்தான். பிறகு வந்த லாபத்தில் சொந்தமாய் பட்டு நூல் வாங்கி தொழில் செய்ய ஆரம்பித்தான்.
  
சில ஆண்டுகள் ஓடின.அவன் வறுமையை விட்டு வெளியே வந்திருந்தான். முன்பை விட வளமாகி இருந்தான்.

 மீண்டும் ஞானியை  பார்க்கப் போனான். இம்முறை ஞானி, தோட்டத்து கொய்யா மரத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.

 கொய்யா மரம் நிறைய காய்களோடு வளமாய் செழித்திருந்தது.

 தானே நெய்து கொண்டு வந்திருந்த பட்டாடையுடன்  பழங்களை அவர் பாதத்தில் வைத்து வணங்கினான்.

 "நீங்கள் சொன்னபடியே செய்தேன் ஐயா. இப்போது நலமாக இருக்கிறேன்", என்றான்.

 அவர்," மிகவும் மகிழ்ச்சி. போய்வா!"என்றார். மீண்டும் கொய்யா மரத்திற்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்.

 கொய்யா மரம் அவருக்கு நன்றி சொல்வதைப் போல தலையசைத்தது!
 
நம்மில் பெரும்பாலோர்  அந்த நெசவாளியை போலத்தான், எதிர்மறை சிந்தனைகளில் உழன்று  கொண்டிருக்கிறோம்.

 அதை விட்டு வெளியே வந்தால்  வெற்றியும் ஆனந்தமும் நம்மை  வரவேற்க  காத்திருக்கின்றன.
 
எந்த மரத்துக்கு நீர் ஊற்றுகிறோமோ அந்த மரமே வளர்கிறது. நாம் தேர்வு செய்யும் மரம் முள் மரமா  அல்லது பழ மரமா என்பது நம் கையில்தான் இருக்கிறது!