Sunday, 20 October 2024

வளையை தேடினால்... வலை! - மதிபாலன்


முன்னொரு காலத்தில் ஒரு கெட்டிக்கார பூனை இருந்தது. அது குறி வைத்து விட்டால் எந்த எலியும் தப்ப முடியாது. ஒரே பாய்ச்சல். ஒரே கவ்வல். தூக்கி வந்து விடும். அத்தனை திறமைசாலியான பூனை.

 ஆனால் அதற்கே தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தது ஒரு குறும்புக்கார எலி. பூனை எப்படித்தான் முயற்சி செய்தாலும் அது மாட்டவே இல்லை. 

ஒருமுறை பூனை துரத்தியபோது அது நேராக ஒரு வளையில் சென்று புகுந்து கொண்டது. பூனை வளையின் பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தது. எப்படியும் அது இதன் வழியாகத்தானே திரும்பி வரவேண்டும் என்று நினைத்தது. ஆனால் எலியோ சற்று தூரம் தாண்டி வளையின் இன்னொரு வழியாக தப்பித்து விட்டது. இதைப் பார்த்த பூனைக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது. அவமானமும் பிடுங்கி தின்றது. இதை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டது.

 பூனை மீண்டும் ஒரு நாள் அதே எலியை பார்த்தது. வா வந்து வசமாக சிக்கிக் கொண்டாயா என்று துரத்தத் தொடங்கியது. இப்பொழுதும் அந்த எலி அதே வளையில் சென்று புகுந்து கொண்டது.  பூனைக்குத்தான் தெரியுமே அந்த வளைக்கு இன்னொரு வெளியேறும் வழி இருக்கிறது என்று. எனவே அந்த வெளியேறும் வழியில் ஒரு பெரிய கல்லை நகர்த்தி மூடி வைத்தது. மீண்டும் எலி முதலில் நுழைந்த அதே இடத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுதும் எலி வெளியே வரவில்லை. எப்படித்தான் 
வெளியே போயிருக்கும் என்று பூனை குழம்பிப் போனது.

அந்த நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த பூவரச மரத்தில் ஒரு கிளி வந்து அமர்ந்தது. "என்ன பூனையாரே! மிகவும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டது.
பூனை நடந்தது அனைத்தையும் விபரமாக கிளியிடம் சொன்னது.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட கிளி, "அடடா... உங்களுக்கு விஷயமே தெரியாதா?" என்றது. 
 புருவத்தை உயர்த்திய பூனை, "என்ன விஷயம், சொல்லு ", என்றது.
அதற்கு கிளி மிகவும் ரகசியமான குரலில் "அந்த எலி வளைக்கு இன்னொரு வெளியேறும் வழி பக்கத்து தெருவில் இருக்கிறது",என்றது. 

 மிகவும் மகிழ்ச்சி அடைந்த பூனை "எனக்கு அதை காட்டுகிறாயா" என்றது. 
 
"என்னைத் தொடர்ந்து வாருங்கள் "என்று சொல்லிவிட்டு கிளி பறக்கத் தொடங்கியது. கிளியைத் தொடர்ந்து 
மூச்சு வாங்க ஓடி வந்த பூனை "எங்கே அந்த வளை?" என்று கேட்டது.
 "அதோ அந்த சந்தில் இருக்கிறது" என்று ஒரு குறுகிய சந்தினை காட்டியது கிளி.

வேகமாக சந்தில் திரும்பிய பூனை சுற்று முற்றும் பார்த்தது. அங்கு வளை எதுவும் தென்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக பூனை தப்பி ஓட முடியாதபடி சந்தின் குறுக்கே ஒரு வலை கட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்த பூனை, தன்னைப் பிடிக்கத்தான் அந்த வலை கட்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டது. வேறு வழி இல்லை. திரும்பி ஓடி தப்பி விடலாம் என்று வேகமாக திரும்பியது. 

அங்கே... ஒரு பூனை பிடிப்பவன் நீண்ட ஈட்டியோடு காத்திருந்தான்!


2 comments: