Saturday, 26 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- மதிபாலன் அத்தியாயம்-5 அவன்...அவள்... அது..!

அறிவியல் எதையும் படைக்கவில்லை. ஏற்கனவே இருப்பதை அறிந்து கொள்கிறது  அல்லது பயன்படுத்திக் கொள்கிறது.

அறிவியல் என்பது இரு கிளை உள்ள ஒரு மரம். ஒரு கிளை, மறைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது(Discovery). இன்னொரு கிளை இருக்கின்ற பொருள்களை இணைத்து நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது(Invention).

முதலாவது, ஏற்கனவே இருக்கும் ஒன்றின் அமைப்பு மற்றும் தன்மைகளை அனைவரும் அறிய  ஆவணங்களுடன் தெரிவிப்பது.

இரண்டாவது, இப்படி ஏற்கனவே அறிந்த பொருள்களை வெவ்வேறு வகையில் இணைத்து நமக்கு பயன்படும் பொருள்களாக மாற்றிக் கொள்வது.

நீராவி எந்திரம், ரயில் பாதை, மின்சாரம் ஜெனரேட்டர், மோட்டார், போக்குவரத்து வாகனங்கள், பிற எந்திரங்கள் இவையெல்லாம் உலகில் இல்லவே இல்லை என்றால் எப்படி இருக்கும்?

உலகமே குறைந்த பட்சம் நூறு வருடம் பின்னால் போயிருக்கும்.

ஆம்.இரும்பு என்ற ஒன்று,நூறு வருடம் முன்பு தீர்ந்து போய் இருந்தால் இதுதான் நடந்திருக்கும்.

முதலிலிருந்தே இல்லாமல் போயிருந்தால் நாம் கற்காலத்திலேயே கால்நடை மேய்த்திருப்போம்.

இரும்பை நாம் படைக்கவில்லை. அது இருக்கிறது என்று கண்டறிந்தோம். 

நெருப்பை நாம் படைக்கவில்லை. அதை வெளிப்படுத்தக் கண்டறிந்தோம். 

நெருப்பை வைத்து இரும்பை உருக்க கற்றுக் கொண்டோம். அவ்வளவுதான். அதனை வைத்தே இத்தனையும் வந்தன.

கருவிகளை செய்தது நம் அறிவு தானே என்று தோன்றும். அந்த அறிவு தரும் கருவிகளை நாம் செய்யவில்லையே!

உடம்பையும் ஐம்புலனையும் மூளையையும் நாம் செய்தோமா? அப்போது நம் அறிவு என்பது நமதுதானா?
இரும்பும் நமதல்ல அறிவும் நமதல்ல.

எல்லாம் கடவுள் தந்தது என்பான்அந்த நம்பிக்கை உள்ளவன். எல்லாம் இயற்கை தந்தது என்பான் இந்த நம்பிக்கை உள்ளவன்.

உண்மை உணர்ந்தவனுக்கு தெரியும் கடவுளும் இயற்கையும் வேறல்ல என்று.

கடவுள் என்பது முழுமை. இயற்கை என்பது அதன் பகுதிகள்.

முழுமை பகுதிகளாய் வெளிப்படுகிறது. பகுதிகள் எல்லாம் சேர்ந்து முழுமையாகிறது.

ஒன்றிலிருந்து தொடங்கிய எல்லாம் மீண்டும் ஒன்றாகும். அந்த ஒன்றே விரிந்து பிரிந்து வெவ்வேறாய்  தோற்றம் கொள்ளும்.

அதனை கடவுள் என்று சொல்லுங்கள். இயற்கை என்று சொல்லுங்கள். அதற்குக் கவலை இல்லை.

அவன், அவள், அது எல்லாம் ஒன்றேதான்.
அந்த ஒன்றுக்கு பெயர் இல்லை. உருவம் இல்லை.

 அதுவும் பிரபஞ்சமும் வேறு வேறில்லை!







1 comment:

  1. இயற்கையும் கடவுளும் ஒன்றே..👌👏💐

    ReplyDelete