Showing posts with label #கட்டுரைக்கதை. Show all posts
Showing posts with label #கட்டுரைக்கதை. Show all posts

Saturday, 2 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-10- வளர்வது மகிழ்ச்சி! வழங்குவது ஆனந்தம்!


வியர்வை சிந்தி பயிர் வளர்த்து விளைச்சல்  காண்பது மகிழ்ச்சி. பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கினால் வருவது ஆனந்தம்.

 உண்மையாய் உழைத்து உயரம் எட்டுவது மகிழ்ச்சி. உடன் இருப்பவர்றக்கு உதவி செய்து உயர வைப்பது ஆனந்தம்.

 வசதி வந்தால் வளமாய் வாழ்வது  மகிழ்ச்சி. வறுமை வந்தாலும் நேர்மை மாறாமல் வாழ்ந்து காட்டுவது ஆனந்தம்.

 ஆனந்தம் என்பது இருளின் நடுவே ஒளியாய் இருப்பது. பாலைவனத்தையும்    சோலை வனமாக்கும்  மழையை போன்றது.

 எங்கெல்லாம் நீங்கள் பயன்படுகிறீர்களோ , அங்கெல்லாம் நீங்கள் தேயவில்லை, வளர்கிறீர்கள்.

 ஆம்.உதவி என்பது உன்னத குணம். அதுதான் உங்களை உயரத்தில் ஏற்றி விடும் ஏணிப்படி. சிலர் உயரத்தில் உள்ளவர்களை கீழே இழுப்பார்கள். ஏன் இப்படி?

 நண்டுகள் இருக்கும்  பானையை மூடத் தேவையில்லை. அதில் எதுவும் மேலேறி தப்பித்ததாய் சரித்திரம் இல்லை. ஏனெனில் மேலே ஏறுவதை கீழே இருப்பது இழுத்துத் தள்ளும். தானும் மேலேறாது. மற்றதையும் ஏற விடாது.

 நாம் நண்டுகள் அல்ல, மனிதர்கள். 

அடுத்தவர் மரத்தை வெட்டி தள்ளுவதால், நம் வீட்டு மரம் வளர்ந்து விடாது. நம் வீட்டு மரம் வளர வேண்டுமானால் நீர் ஊற்ற வேண்டும். நீர் என்பது உழைப்பு.

 உச்சம் அடைந்தவர் அடுத்தவர் உயர உற்சாகம் கொடுப்பது ஆனந்தம். பள்ளத்தில் இருப்பவர் மேலே ஏறி வர படிகள் செதுக்குவது ஆனந்தம்.

 சேர்த்துக்கொண்டே போவதால் ஆனந்தம் வருவதில்லை. சேர்த்து வைத்ததை  மன மகிழ்வோடு பகிர்ந்து கொள்வது ஆனந்தம்.

 பூமி நமக்கு திருப்பித் தரும் என்று நினைத்துக் கொண்டா மேகம் பொழிகிறது? கிளிகள் நமக்கு திருப்பித் தரும் என்றா மரங்கள் கனிகளை தருகிறது?

இல்லை.வழங்குவது அவற்றின் இயல்பு. வழங்குவது அவற்றின் வள்ளண்மை. 

இயற்கை வழங்குவதால் ஆனந்தம் அடைகிறது. நாமும் வழங்குவதால் ஆனந்தத்தை நமதாக்கிக் கொள்ள முடியும்.

 பொருள்களை தருவது மட்டும் வழங்குவது அல்ல. பொருள் இல்லாவிட்டாலும் புன்சிரிப்பை தருவதும் வழங்குவதுதான். 

 அறுசுவை உணவை தருவது மட்டும் வழங்குவது அல்ல. அன்பான வார்த்தையை  பேசுவதும்  வழங்குவதுதான்.

 வழங்குவதற்கு வசதிதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வழங்க வேண்டும் என்னும் உள்ளம்  இருந்தால் போதும்.  

 வழங்க வேண்டும் என்னும் உள்ளம் இருந்தால், வசதிகளை இயற்கை வாரிக் கொடுக்கும். இயற்கை தராததை நாம் எப்படி மற்றவருக்கு தர முடியும்.

 இந்த வாழ்க்கை இயற்கை தந்தது. இந்த வசதி இயற்கை தந்தது. இந்த உயரம் இயற்கை தந்தது.

 இப்படி, எல்லாம் இயற்கை தந்தது என்னும் நினைவோடு இருப்பவர்க்கு தலைக்கனம் வருவதில்லை. தலைக்கனம் இல்லாத செல்வந்தர்க்கு புகழ் மணம் குறைவதில்லை. அதிலும் அவர் வழங்குபவராய் இருந்து விட்டால், ஆனந்தத்திற்கு எல்லை இல்லை.

 ஒளியை வழங்குவது கதிருக்கு ஆனந்தம். உயிர் மூச்சை வழங்குவது காற்றுக்கு ஆனந்தம்.

 தாகத்தை தணிப்பது தண்ணீரின் ஆனந்தம். தூக்கிச் சுமப்பது பூமிக்கு ஆனந்தம். அனைத்துக்கும் இடம் தருவது ஆகாயத்துக்கு  ஆனந்தம்.

 இயற்கை எல்லாவற்றையும் வழங்குவதில் ஆனந்தம் கொள்கிறது. அது தனக்கென்று எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. தந்து கொண்டே இருக்கிறது. 

  வழங்குவதற்கு  தன்னிடம் பொருள் இல்லாதவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. எப்போதும் குறையாத செல்வம் ஒன்று எல்லாரிடமும் இருக்கிறது.

 அந்த செல்வம் வழங்குவதால் இரட்டிப்பாகும். பெறுபவருக்கு பூரிப்பைத் தரும். உலகம் முழுக்க தந்த பிறகும் ஊற்றுப்போல சுரந்து கொண்டே இருக்கும். அதுதான் கடவுள் என்று அனைவரும் சொல்கிறார்கள்.

 நாத்திகரும் கூட அதை ஒப்புக் கொள்வார்கள். அதன் பெயர் அன்பு!



Wednesday, 30 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-9 - மகிழ்ச்சி ஆனந்தமாய் மாற வேண்டுமா?

 
        மகிழ்ச்சியை விரும்பாத மனிதர் இல்லை. வருத்தத்தை வேண்டும் என்னும் உயிர்கள் இல்லை.
 
துன்பத்தை விலக்கிவிட்டு இன்பத்தை தொட்டிடவே அனைத்து உயிர்களும் முயற்சி செய்கின்றன.
 
மகிழ்ச்சி என்னும் மந்திரத்தை உச்சரிக்கத்தான் மனிதரெல்லாம் ஓடோடி உழைக்கின்றார்கள். கஷ்டத்தை நஷ்டத்தை தவிர்த்திடவே காலமெல்லாம் பாடுபட நினைக்கின்றார்கள்.

 ஆனால் மகிழ்ச்சி எப்போதும் நிரந்தரமாய் இருப்பதில்லை. கொஞ்சம் இன்பம் நிறைய துன்பம் என்று மனித வாழ்க்கை ஒரு ராட்டினச் சுற்றலாய் மாறிக்கொண்டே இருக்கிறது.

 மகிழ்ச்சி ஏன் நிலைப்பதில்லை தெரியுமா? அது வெளியில் இருந்து நமக்குள் நுழைவது.

 அழகான மலரின் வண்ணம் நம் அகத்தை நிறைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் வாசனையை நுகர்கிறோம். மனதுக்குள் இதமாய் மகிழ்ச்சி பரவுகிறது.

 அறுசுவை உணவை ரசித்துச் சுவைக்கிறோம். மகிழ்ச்சி உள்ளே மத்தளம் கொட்டுகிறது.

 இனிய இசையை கேட்கும் போது இதயம் மகிழ்ச்சியில் துள்ளி ஆடுகிறது.  பஞ்சு மெத்தையில் படுக்கும்போது கிடைக்கும் சுகத்தில் தேகம் திளைக்கும்.
   
ஆனால் இவையெல்லாம் வெளியில் இருந்து நமக்குள் நுழைப்பவை. இருக்கும் வரைக்கும் இன்பம் தருபவை. அவை போய்விட்டால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும்.

  எப்படி நிலையான ஆனந்தத்தை அடைவது? அதற்கும் சில அற்புத வழிகள் இருக்கின்றன.

 தியானம் செய்யுங்கள்.  உள்ளுக்குள் ஆனந்தம் உற்பத்தியாகும்.
அன்பு செய்யுங்கள்.ஆனந்த அருவிகள் அகத்தில் ஆர்ப்பரிக்கும்.

 உதவி செய்யுங்கள் உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றாய் பிரவகிக்கும். 

சேவைகள் செய்வதற்கு சித்தம் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்களை சொந்தம் கொண்டாடும்.
 
 இயற்கையோடு இணைந்து இதயம் தொலைத்தால்  எல்லையற்ற ஆனந்தம்  எழும்புவதை உணரலாம். 

 துன்பப்படும் உயிர்களை கருணைக் கண்களால் அணை த்துக் கொள்ளுங்கள். தொலையாத ஆனந்தம்  உங்களுக்கு சொந்தம் என்று தெரிந்து கொள்வீர்கள்.

உள்நோக்கி உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.உங்களை நீங்கள்  யார் என்று உணர்ந்து கொள்ளுங்கள். அப்போது, ஆனந்தம் பொங்கிவரும் அழகை பாருங்கள்.

 இப்போது சொன்னவை எல்லாம் நம்மை விட்டு எப்போதும் நீங்காது. காரணம்  இவை வெளியில் இருந்து  நமக்குள் நுழையவில்லை. நம் உள்ளிருந்து புறப்பட்டு நறுமணமாய் பரவுகிறது. அதனால் தான் அவை எப்போதும் நிரந்தரமாய்  நிலைக்கிறது.

 நாம் பொருள்களால் அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் குறைந்த நேரமே நமக்குள் குடியிருந்து போகும். ஆனால் நம்மை நாமே கரைத்துக் கொள்ளும் உன்னத உணர்வுகளால் உருவாகும் ஆனந்தம்  எப்போதும் நிலைக்கும்.
 
ஆம். நாம் மகிழ்ச்சியோடு நின்று போகும் மானிடர்கள் அல்ல. ஆனந்த அலைபரப்பும் ஆழியின் புத்திரர்கள்!

 ஆனந்தம் ஒர் அற்புத முடிவிலி.
 அந்த தெய்வீக அனுபவத்தை அடைந்தால் நிம்மதி!


Tuesday, 29 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-8 கடவுளின் துளிகள்!

 

கடவுள் என்பது ஒன்றா இரண்டா? 
காண்பவரை பொறுத்து பல கடவுள்கள் உண்டா? 

இந்தக் கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கின்றன.

கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் இல்லை என்பது ஒரு கருத்து.

தந்தை,மகன்,பரிசுத்த ஆவி என்று மூன்று நிலைகளை சொல்வது இன்னொரு கருத்து.

பரம்பொருள் ஒன்று. ஆனால் தெய்வங்களின் வடிவங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மூன்றாவது கருத்து.

இவை மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா என்றால், இல்லை!

இந்த எல்லா நிலைகளிலும் இருக்கக்கூடியதே கடவுள்.

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஆற்றல் வடிவில் இருந்த கடவுளுக்கு உருவம் இல்லை. அந்த ஆற்றலில் இருந்து பிரபஞ்சம் தோன்றும் போதே பல்வேறு வடிவங்கள் கிடைத்து விடுகின்றன.

அண்டங்கள் நட்சத்திரங்கள் கோள்கள் எல்லாம் கடவுளின் வெவ்வேறு வடிவங்களே.

தந்தை மகன் பரிசுத்த ஆவி என்பதும் கடவுளின் வெவ்வேறு நிலைகளே.

மகனுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அந்த தந்தைக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார். இப்படி பிறவிகளில் பின்னோக்கி போய்க்கொண்டே இருந்தால், அது ஐம்பொருள் தத்துவத்தில் போய் முடியும். அந்த ஐம்பொருளும் எங்கிருந்து வந்தன என்றால் அது கடவுளில் போய் முடியும். 

ஐம்பொருள் வடிவம் கிடைக்குமுன் அது ஆற்றலாய் இருந்தது. அதற்கு உருவம் இல்லை. ஆனால் அதிலிருந்துதான் உருவமும் உயிரும் கிடைத்தன. அந்த உயிர் ஆற்றலை பரிசுத்த ஆவி என்று சொல்வதில்  தவறில்லை.

சரி...
உண்மையில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? அவர் மதத்துக்கு மதம் மாறுபடுகிறாரா, என்னும் கேள்வி எழுகிறதல்லவா!

எத்தனை மதங்கள் வந்தாலும், எத்தனை ஞானியர் உதித்தாலும் ஆதிக் கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான். அதில் ஐயமில்லை.

ஒரு தூதருக்கு காட்சியளித்த போது அவர் உருவமற்ற ஒளியாக இருந்தார். அதனால் அவருக்கு கடவுள் உருவமற்றவர். அது ஆற்றல் வடிவம்.

ஒரு மகன் தன் தந்தை கடவுள் என்றார். கடவுளின் மகன் கடவுளாகத்தானே இருக்க முடியும்? அது அடுத்த வடிவம். ஒவ்வொரு பிறவிக்கும் உயிரை அளிக்கும் அந்தப் பேராற்றலை பரிசுத்த ஆவி என்பதும் சரிதானே!

உருவமற்று ஆற்றலாக இருக்கும் கடவுளை பரம்பொருள் என்றனர். பரம்பொருள் வெவ்வேறு வடிவம் கொண்டபோது பல்வேறு பொருள்கள் பரிணமித்தன.

வாழ்வளிக்கும் மண்ணை, மழையை,சூரியனை வழிபட்ட போது இயற்கை வழிபாடானது.

இயற்கை வடிவங்கள் நம் பார்வையில் மிகப் பெரியவையாக  இருந்தபடியால் மனதில் நிறுத்துவது கடினமாக இருந்தது. 

எனவே இயற்கைக்கு மனிதன் தன்னைப் போலவே வடிவம் கொடுத்து வணங்கத் தொடங்கினான். அதுமுதல் கடவுளுக்கு பல்வேறு வடிவங்கள் எழும்பத் தொடங்கின.

பிரபஞ்சத்தில் ஆக்கல்,காத்தல், அழித்தல் என்னும் மூன்று முக்கிய செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை கடவுளால்தான் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள் வடிவம் வந்தது. அவ் வடிவங்கள் மனதிலிருத்தவும் வழிபடவும் எளிதாக இருந்தன. 

இப்படி ஒரே ஆற்றலின் பல்வேறு வடிவங்களை தெய்வங்களாக வழிபடுவதிலும் முரண்பாடு எதுவும் இல்லை.

கடவுளை எப்படி வழிபட்டாலும் தவறில்லை. வழிபடுவது நல்லதே. ஆனால், இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது தவறாகிறது.


நீர்,நீலு,நீரு,வெள்ளம்,பானி,வாட்டர்...எப்படி அழைத்தால் என்ன, தண்ணீர் கோபித்துக் கொள்ளவா போகிறது?

எனவே கடவுளை எப்படியும் வழிபடலாம். தவறில்லை. வழிபடாமல் போனாலும் அவர் கோபித்துக் கொள்ளப்போவதில்லை. 

துளியை கடல் வெறுக்குமா என்ன? 
புரிந்து கொள்ள வேண்டும்...

நாமெல்லாம் *கடவுளின் துளிகள்!*


Monday, 28 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-7 பஞ்சபூதங்களின் பொம்மலாட்டம் !

கடவுளின் எண்ணத்தை ஐம்பூதங்கள் செயல்படுத்துவது எப்படி?

தண்ணீர் ஒருவனை காப்பாற்றுவதும் ஒருவனை கொல்வதும் 
எல்லாம் மந்திரம் மாயம் போல் அல்லவா இருக்கிறது என்று தோன்றும்.

அந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.

தாகத்தால் மயங்கி விழுந்தவனுக்கு மேகம் தண்ணீர் பொழிந்து  உயிரை மீட்பது  எப்படி?

 அவன் மயங்கி விழுந்தது பொட்டல் வெளி. இப்போது மேகம் எதுவும் அங்கில்லை. அதை உருவாக்க வேண்டும். அதற்கு அந்த குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட உயரத்தில் வெப்பநிலை குறைய வேண்டும். எனவே வளிமண்டலத்தில் உள்ள  காற்று என்னும் பூதம் அங்குள்ள வெப்பத்தை வேகமாக வெளியேற்றி ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும். அப்போது குளிர்ந்த நீர்த்துளிகள் ஒன்றுசேர்ந்து மேகமாக உருவெடுக்க வேண்டும். 

அதே நேரத்தில் சூரியன் என்கின்ற நெருப்பு பூதம் தனது தாக்கத்தை சட்டென்று குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு மழை மேகம் உருவாகும்.

 மேகம் உருவானால் மட்டும் போதாது அது சீக்கிரமாக மயங்கி கிடப்பவன் மீது பொழிய வேண்டும். அதற்கு அந்த இடத்தில் புவியீர்ப்பு சக்தி அதிகமாகப்பட வேண்டும். அதை நிலம் என்கிற பூதம் செய்யும்.

 இப்படி நீர் நிலம் நெருப்பு என்னும் மூன்று பூதங்கள் ஒருங்கிணைந்து மழையை உருவாக்கி அவன் உயிரை மீட்கின்றன.

 அப்படியே அதை நவீன அறிவியல் அம்சங்களில் சொன்னால்,காற்றழுத்தம்  (pressure), வெப்பநிலை  (temperature), ஈரப்பதம்  (humidity), புவியீர்ப்பு விசை  (gravitational force) ஆகிய முக்கிய காரணிகளின் வேறுபாட்டால் மழை வருகிறது.

 ஆனால் மழை எங்கு பொழிய வேண்டும் என்று தெரிய வேண்டும் அல்லவா?
அதற்கு சூரியன் GPS கருவி போன்று செயல்படுகிறது. 

அதுதான் பூமியோடு ஒருங்கிணைந்து மழை எங்கு பொழிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப்படித்தான்  ஒவ்வொரு பூதமும் செய்திகளைப் பெற்று பணிகளை நிறைவேற்றுகிறது.

இவற்றுக்குள் இந்த தகவல் பரிமாற்றமும் நிலை மாற்றமும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன?

 ஒளி (light), ஒலி (sound)மற்றும் மின்காந்த அலைகளை (Electromagnetic waves) பயன்படுத்தி இது நிகழ்த்தப்படுகிறது.

இப்படி  இயற்பியல் அம்சங்களை (physical parameters) மாற்றுவதன் மூலம் பஞ்சபூதங்கள் ஒவ்வொரு செயலையும் செய்கின்றன.

இதற்கான புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள் (data) ஆகாய குறியீடுகளாக பதிவு செய்யப்பட்டு வெட்ட வெளியில் உலவிக்கொண்டிருக்கும். அவற்றை பஞ்சபூதங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதிய தரவுகளை சேர்க்கலாம்.

இதன் மூலம் காலம்,தூரம் இவற்றை கணக்கிட்டு எங்கு எந்த செயலை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை பஞ்சபூதங்கள் முடிவு செய்யும். இதற்கான பொதுவான விதிமுறைகளை பரம்பொருள் அல்லது கடவுள் வழங்கி இருக்கும்.

இது ஒரு தானியங்கி  செயல்பாடாக அனைத்து உயிர்களுக்கும் நடந்து கொண்டே இருக்கும்

இது ஒரே ஒரு செயல் மட்டுமே. இப்படி ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை கோடிக்கணக்கான உயிர்களுக்கு பஞ்சபூதங்கள் செய்து கொண்டே இருக்கும்.

அவற்றின் நெறிமுறைகள், அளவீடுகள்,செயல் நடைபெறும் வேகம் அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு நடத்தப்படும்.

பஞ்சபூதங்களின் இச்செயல்கள், அந்தந்த உயிர்களின் செயல்களைப் பொறுத்தும் கால இடங்களைப் பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

இவற்றில் இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் எல்லாம் அடங்கி இருக்கும்.

நுட்பமான தரவுகள், கணக்குகள், செயல்பாடுகள் இவற்றை உள்ளடக்கிய மாபெரும் சிக்கலான கட்டுப்பாட்டு முறைமை (control system) தான் பஞ்சபூதத்துவம் என்று கூறலாம்.

இதுவரை கண்டுபிடித்திருக்கும் கணினிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் எந்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும் இயற்கையின் செயல்பாடுகளில் 0.00000000001 சதவீதத்தைக் கூட எட்ட முடியாது என்பது நிதர்சனம்!




Sunday, 27 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-6 இயற்கைக்கு அறிவு உண்டு!



அறிவின் அடையாளம் என்ன?

உணர்வுகளை செய்திகளை உள்வாங்கிக் கொள்வது, அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது, பின் அவற்றை அலசி ஆராய்ந்து தகுந்த முடிவுகள் எடுப்பது, செயல்படுத்துவது - இதைத்தான் நாம் அறிவு என்கிறோம். 

தொட்டுணர்தல், சுவைத்தல்,முகர்தல், பார்த்தல், கேட்டல், பகுத்தறிதல் என்று மனிதனின் அறிவு ஆறு.

புல் பூண்டுக்கு ஓரறிவு. சிப்பி நத்தைக்கு ஈரறிவு. கரையான் எறும்புக்கு மூவறிவு. தும்பி நண்டுக்கு நான்கறிவு. பறவை விலங்குக்கு ஐந்தறிவு.

இவையெல்லாம் சரி. இயற்கைக்கு அறிவு இருக்கிறதா என்ற கேள்வி எழும். அதற்கு முதலில் இயற்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

மனிதனால் செய்யப்பட்டவை எல்லாம் செயற்கை. மற்றவை எல்லாம் இயற்கை.

காடு மலை ஆறு கடல் காற்று மழை வெயில் பனி இவையும் இவை போன்றவையும் இயற்கை. இதைத் தவிர்த்து   மனிதனால் செய்யப்பட்ட அனைத்தும் செயற்கை.

சரி. இயற்கைக்கு அறிவு உண்டு என்பதை எப்படி உறுதி செய்வது? பார்க்கலாம்.

இயற்கை எவற்றால் ஆனது? நிலம் நீர் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம் என்னும் ஐம்பொருளால் (ஐம்பூதம்) ஆனது.

இந்த ஐம்பொருளுக்கும் அறிவு உண்டென்றால் அப்போது இயற்கைக்கும் அறிவு உண்டு என்பது உறுதியாகும் அல்லவா?

ஐம்பொருளுக்கும் மனிதனுக்கு உண்டான அத்தனை அறிவும் இருக்கிறது. அப்படியானால் அதற்கு மெய் வாய் மூக்கு கண் செவி மூளை எல்லாம் எங்கே இருக்கிறது?

அவற்றுக்கு இவையெல்லாம் தேவையில்லை. செய்திகளை உணர்வுகளாய் அவை நேரடியாய் பெற்றுக் கொள்ளும். என்ன செய்ய வேண்டுமோ அதை துல்லியமாய் செய்து விடும்.

எப்படி என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

நல்லவன் ஒருவன் பயணம் போகிறான். நெடுந்தூரம் அவன் நடக்க வேண்டும். அது வெயில் கொளுத்தும் மதிய நேரம். கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அருகில் வீடுகள் எதுவும் இல்லை. அருந்தும் நீர் உள்ள நீர்நிலையும் இல்லை. மயங்கி விழுந்துவிடுகிறான். நாவுக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் உயிர் பிழைப்பான்.

அப்பொழுது நிர்மலமாய் இருந்த வானில் மேகம் சூழ்கிறது. மல்லாந்து விழுந்து கிடந்த அவன் வாயில்  குளிர்ந்த மழைச்சாரல்  விழுகிறது.   தொண்டையில் இறங்கிய நீர் உயிரை திரும்பவும் கொண்டு வருகிறது.

ஐம்பூதங்களில் ஒன்றான நீர் அவனை காப்பாற்றி விட்டது.
 
இன்னொரு சம்பவம்.

அது கட்டவிழ்ந்து   மழை கொட்டும் கார்காலம் அளவற்ற கொடுமைகள்  செய்த ஒருவன் ஆற்றைக் கடக்க படகில்  போகிறான். அப்போது இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை வருகிறது. தடுமாறிய படகு கவிழ்ந்து ஆற்றில் விழுகிறான். விழுந்த இடம் அவன் நீந்த முடியாத பெரும் சுழல் சுழித்தோடும் நட்டாறு. அவனை இழுத்துச் சுழற்றி அழுத்திக் கொல்கிறது.

அதே நீர் இங்கு ஆயுள் முடித்தது.

இப்படி ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றும் போது ஐம்பூதங்களில் ஒன்றோ இரண்டோ அல்லது அனைத்தும் சேர்ந்தோ பணியை கச்சிதமாக முடித்துவிடும். அதற்கான அறிவை அவை பெற்றிருக்கின்றன. 

அதோடு மட்டுமல்ல, இணைந்து பணியாற்றும் (team work) ஆற்றலும் அவற்றுக்கு இருக்கிறது.

இவை தன்னிச்சையாக செயல்படுமா என்றால், இல்லை. அவற்றுக்கும் மேலான பேரறிவின் கட்டளையை நிறைவேற்றும். அவ்வளவுதான்.

அந்தப் பேரறிவுக்கு ஒரு பெயர் உண்டு. 
அது... 
             கடவுள்!