Sunday, 27 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-6 இயற்கைக்கு அறிவு உண்டு!



அறிவின் அடையாளம் என்ன?

உணர்வுகளை செய்திகளை உள்வாங்கிக் கொள்வது, அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது, பின் அவற்றை அலசி ஆராய்ந்து தகுந்த முடிவுகள் எடுப்பது, செயல்படுத்துவது - இதைத்தான் நாம் அறிவு என்கிறோம். 

தொட்டுணர்தல், சுவைத்தல்,முகர்தல், பார்த்தல், கேட்டல், பகுத்தறிதல் என்று மனிதனின் அறிவு ஆறு.

புல் பூண்டுக்கு ஓரறிவு. சிப்பி நத்தைக்கு ஈரறிவு. கரையான் எறும்புக்கு மூவறிவு. தும்பி நண்டுக்கு நான்கறிவு. பறவை விலங்குக்கு ஐந்தறிவு.

இவையெல்லாம் சரி. இயற்கைக்கு அறிவு இருக்கிறதா என்ற கேள்வி எழும். அதற்கு முதலில் இயற்கை என்றால் என்னவென்று பார்ப்போம்.

மனிதனால் செய்யப்பட்டவை எல்லாம் செயற்கை. மற்றவை எல்லாம் இயற்கை.

காடு மலை ஆறு கடல் காற்று மழை வெயில் பனி இவையும் இவை போன்றவையும் இயற்கை. இதைத் தவிர்த்து   மனிதனால் செய்யப்பட்ட அனைத்தும் செயற்கை.

சரி. இயற்கைக்கு அறிவு உண்டு என்பதை எப்படி உறுதி செய்வது? பார்க்கலாம்.

இயற்கை எவற்றால் ஆனது? நிலம் நீர் காற்று நெருப்பு மற்றும் ஆகாயம் என்னும் ஐம்பொருளால் (ஐம்பூதம்) ஆனது.

இந்த ஐம்பொருளுக்கும் அறிவு உண்டென்றால் அப்போது இயற்கைக்கும் அறிவு உண்டு என்பது உறுதியாகும் அல்லவா?

ஐம்பொருளுக்கும் மனிதனுக்கு உண்டான அத்தனை அறிவும் இருக்கிறது. அப்படியானால் அதற்கு மெய் வாய் மூக்கு கண் செவி மூளை எல்லாம் எங்கே இருக்கிறது?

அவற்றுக்கு இவையெல்லாம் தேவையில்லை. செய்திகளை உணர்வுகளாய் அவை நேரடியாய் பெற்றுக் கொள்ளும். என்ன செய்ய வேண்டுமோ அதை துல்லியமாய் செய்து விடும்.

எப்படி என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

நல்லவன் ஒருவன் பயணம் போகிறான். நெடுந்தூரம் அவன் நடக்க வேண்டும். அது வெயில் கொளுத்தும் மதிய நேரம். கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து விட்டது.

அருகில் வீடுகள் எதுவும் இல்லை. அருந்தும் நீர் உள்ள நீர்நிலையும் இல்லை. மயங்கி விழுந்துவிடுகிறான். நாவுக்கு கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால் உயிர் பிழைப்பான்.

அப்பொழுது நிர்மலமாய் இருந்த வானில் மேகம் சூழ்கிறது. மல்லாந்து விழுந்து கிடந்த அவன் வாயில்  குளிர்ந்த மழைச்சாரல்  விழுகிறது.   தொண்டையில் இறங்கிய நீர் உயிரை திரும்பவும் கொண்டு வருகிறது.

ஐம்பூதங்களில் ஒன்றான நீர் அவனை காப்பாற்றி விட்டது.
 
இன்னொரு சம்பவம்.

அது கட்டவிழ்ந்து   மழை கொட்டும் கார்காலம் அளவற்ற கொடுமைகள்  செய்த ஒருவன் ஆற்றைக் கடக்க படகில்  போகிறான். அப்போது இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை வருகிறது. தடுமாறிய படகு கவிழ்ந்து ஆற்றில் விழுகிறான். விழுந்த இடம் அவன் நீந்த முடியாத பெரும் சுழல் சுழித்தோடும் நட்டாறு. அவனை இழுத்துச் சுழற்றி அழுத்திக் கொல்கிறது.

அதே நீர் இங்கு ஆயுள் முடித்தது.

இப்படி ஒரு குறிப்பிட்ட செயலை நிறைவேற்றும் போது ஐம்பூதங்களில் ஒன்றோ இரண்டோ அல்லது அனைத்தும் சேர்ந்தோ பணியை கச்சிதமாக முடித்துவிடும். அதற்கான அறிவை அவை பெற்றிருக்கின்றன. 

அதோடு மட்டுமல்ல, இணைந்து பணியாற்றும் (team work) ஆற்றலும் அவற்றுக்கு இருக்கிறது.

இவை தன்னிச்சையாக செயல்படுமா என்றால், இல்லை. அவற்றுக்கும் மேலான பேரறிவின் கட்டளையை நிறைவேற்றும். அவ்வளவுதான்.

அந்தப் பேரறிவுக்கு ஒரு பெயர் உண்டு. 
அது... 
             கடவுள்!
             

2 comments: