Monday, 28 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-7 பஞ்சபூதங்களின் பொம்மலாட்டம் !

கடவுளின் எண்ணத்தை ஐம்பூதங்கள் செயல்படுத்துவது எப்படி?

தண்ணீர் ஒருவனை காப்பாற்றுவதும் ஒருவனை கொல்வதும் 
எல்லாம் மந்திரம் மாயம் போல் அல்லவா இருக்கிறது என்று தோன்றும்.

அந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.

தாகத்தால் மயங்கி விழுந்தவனுக்கு மேகம் தண்ணீர் பொழிந்து  உயிரை மீட்பது  எப்படி?

 அவன் மயங்கி விழுந்தது பொட்டல் வெளி. இப்போது மேகம் எதுவும் அங்கில்லை. அதை உருவாக்க வேண்டும். அதற்கு அந்த குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட உயரத்தில் வெப்பநிலை குறைய வேண்டும். எனவே வளிமண்டலத்தில் உள்ள  காற்று என்னும் பூதம் அங்குள்ள வெப்பத்தை வேகமாக வெளியேற்றி ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும். அப்போது குளிர்ந்த நீர்த்துளிகள் ஒன்றுசேர்ந்து மேகமாக உருவெடுக்க வேண்டும். 

அதே நேரத்தில் சூரியன் என்கின்ற நெருப்பு பூதம் தனது தாக்கத்தை சட்டென்று குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு மழை மேகம் உருவாகும்.

 மேகம் உருவானால் மட்டும் போதாது அது சீக்கிரமாக மயங்கி கிடப்பவன் மீது பொழிய வேண்டும். அதற்கு அந்த இடத்தில் புவியீர்ப்பு சக்தி அதிகமாகப்பட வேண்டும். அதை நிலம் என்கிற பூதம் செய்யும்.

 இப்படி நீர் நிலம் நெருப்பு என்னும் மூன்று பூதங்கள் ஒருங்கிணைந்து மழையை உருவாக்கி அவன் உயிரை மீட்கின்றன.

 அப்படியே அதை நவீன அறிவியல் அம்சங்களில் சொன்னால்,காற்றழுத்தம்  (pressure), வெப்பநிலை  (temperature), ஈரப்பதம்  (humidity), புவியீர்ப்பு விசை  (gravitational force) ஆகிய முக்கிய காரணிகளின் வேறுபாட்டால் மழை வருகிறது.

 ஆனால் மழை எங்கு பொழிய வேண்டும் என்று தெரிய வேண்டும் அல்லவா?
அதற்கு சூரியன் GPS கருவி போன்று செயல்படுகிறது. 

அதுதான் பூமியோடு ஒருங்கிணைந்து மழை எங்கு பொழிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப்படித்தான்  ஒவ்வொரு பூதமும் செய்திகளைப் பெற்று பணிகளை நிறைவேற்றுகிறது.

இவற்றுக்குள் இந்த தகவல் பரிமாற்றமும் நிலை மாற்றமும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன?

 ஒளி (light), ஒலி (sound)மற்றும் மின்காந்த அலைகளை (Electromagnetic waves) பயன்படுத்தி இது நிகழ்த்தப்படுகிறது.

இப்படி  இயற்பியல் அம்சங்களை (physical parameters) மாற்றுவதன் மூலம் பஞ்சபூதங்கள் ஒவ்வொரு செயலையும் செய்கின்றன.

இதற்கான புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள் (data) ஆகாய குறியீடுகளாக பதிவு செய்யப்பட்டு வெட்ட வெளியில் உலவிக்கொண்டிருக்கும். அவற்றை பஞ்சபூதங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதிய தரவுகளை சேர்க்கலாம்.

இதன் மூலம் காலம்,தூரம் இவற்றை கணக்கிட்டு எங்கு எந்த செயலை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை பஞ்சபூதங்கள் முடிவு செய்யும். இதற்கான பொதுவான விதிமுறைகளை பரம்பொருள் அல்லது கடவுள் வழங்கி இருக்கும்.

இது ஒரு தானியங்கி  செயல்பாடாக அனைத்து உயிர்களுக்கும் நடந்து கொண்டே இருக்கும்

இது ஒரே ஒரு செயல் மட்டுமே. இப்படி ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை கோடிக்கணக்கான உயிர்களுக்கு பஞ்சபூதங்கள் செய்து கொண்டே இருக்கும்.

அவற்றின் நெறிமுறைகள், அளவீடுகள்,செயல் நடைபெறும் வேகம் அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு நடத்தப்படும்.

பஞ்சபூதங்களின் இச்செயல்கள், அந்தந்த உயிர்களின் செயல்களைப் பொறுத்தும் கால இடங்களைப் பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

இவற்றில் இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் எல்லாம் அடங்கி இருக்கும்.

நுட்பமான தரவுகள், கணக்குகள், செயல்பாடுகள் இவற்றை உள்ளடக்கிய மாபெரும் சிக்கலான கட்டுப்பாட்டு முறைமை (control system) தான் பஞ்சபூதத்துவம் என்று கூறலாம்.

இதுவரை கண்டுபிடித்திருக்கும் கணினிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் எந்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும் இயற்கையின் செயல்பாடுகளில் 0.00000000001 சதவீதத்தைக் கூட எட்ட முடியாது என்பது நிதர்சனம்!




2 comments: