கடவுள் என்பது ஒன்றா இரண்டா?
காண்பவரை பொறுத்து பல கடவுள்கள் உண்டா?
இந்தக் கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கின்றன.
கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் இல்லை என்பது ஒரு கருத்து.
தந்தை,மகன்,பரிசுத்த ஆவி என்று மூன்று நிலைகளை சொல்வது இன்னொரு கருத்து.
பரம்பொருள் ஒன்று. ஆனால் தெய்வங்களின் வடிவங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மூன்றாவது கருத்து.
இவை மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா என்றால், இல்லை!
இந்த எல்லா நிலைகளிலும் இருக்கக்கூடியதே கடவுள்.
பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஆற்றல் வடிவில் இருந்த கடவுளுக்கு உருவம் இல்லை. அந்த ஆற்றலில் இருந்து பிரபஞ்சம் தோன்றும் போதே பல்வேறு வடிவங்கள் கிடைத்து விடுகின்றன.
அண்டங்கள் நட்சத்திரங்கள் கோள்கள் எல்லாம் கடவுளின் வெவ்வேறு வடிவங்களே.
தந்தை மகன் பரிசுத்த ஆவி என்பதும் கடவுளின் வெவ்வேறு நிலைகளே.
மகனுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அந்த தந்தைக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார். இப்படி பிறவிகளில் பின்னோக்கி போய்க்கொண்டே இருந்தால், அது ஐம்பொருள் தத்துவத்தில் போய் முடியும். அந்த ஐம்பொருளும் எங்கிருந்து வந்தன என்றால் அது கடவுளில் போய் முடியும்.
ஐம்பொருள் வடிவம் கிடைக்குமுன் அது ஆற்றலாய் இருந்தது. அதற்கு உருவம் இல்லை. ஆனால் அதிலிருந்துதான் உருவமும் உயிரும் கிடைத்தன. அந்த உயிர் ஆற்றலை பரிசுத்த ஆவி என்று சொல்வதில் தவறில்லை.
சரி...
உண்மையில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? அவர் மதத்துக்கு மதம் மாறுபடுகிறாரா, என்னும் கேள்வி எழுகிறதல்லவா!
எத்தனை மதங்கள் வந்தாலும், எத்தனை ஞானியர் உதித்தாலும் ஆதிக் கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான். அதில் ஐயமில்லை.
ஒரு தூதருக்கு காட்சியளித்த போது அவர் உருவமற்ற ஒளியாக இருந்தார். அதனால் அவருக்கு கடவுள் உருவமற்றவர். அது ஆற்றல் வடிவம்.
ஒரு மகன் தன் தந்தை கடவுள் என்றார். கடவுளின் மகன் கடவுளாகத்தானே இருக்க முடியும்? அது அடுத்த வடிவம். ஒவ்வொரு பிறவிக்கும் உயிரை அளிக்கும் அந்தப் பேராற்றலை பரிசுத்த ஆவி என்பதும் சரிதானே!
உருவமற்று ஆற்றலாக இருக்கும் கடவுளை பரம்பொருள் என்றனர். பரம்பொருள் வெவ்வேறு வடிவம் கொண்டபோது பல்வேறு பொருள்கள் பரிணமித்தன.
வாழ்வளிக்கும் மண்ணை, மழையை,சூரியனை வழிபட்ட போது இயற்கை வழிபாடானது.
இயற்கை வடிவங்கள் நம் பார்வையில் மிகப் பெரியவையாக இருந்தபடியால் மனதில் நிறுத்துவது கடினமாக இருந்தது.
எனவே இயற்கைக்கு மனிதன் தன்னைப் போலவே வடிவம் கொடுத்து வணங்கத் தொடங்கினான். அதுமுதல் கடவுளுக்கு பல்வேறு வடிவங்கள் எழும்பத் தொடங்கின.
பிரபஞ்சத்தில் ஆக்கல்,காத்தல், அழித்தல் என்னும் மூன்று முக்கிய செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை கடவுளால்தான் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள் வடிவம் வந்தது. அவ் வடிவங்கள் மனதிலிருத்தவும் வழிபடவும் எளிதாக இருந்தன.
இப்படி ஒரே ஆற்றலின் பல்வேறு வடிவங்களை தெய்வங்களாக வழிபடுவதிலும் முரண்பாடு எதுவும் இல்லை.
கடவுளை எப்படி வழிபட்டாலும் தவறில்லை. வழிபடுவது நல்லதே. ஆனால், இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது தவறாகிறது.
நீர்,நீலு,நீரு,வெள்ளம்,பானி,வாட்டர்...எப்படி அழைத்தால் என்ன, தண்ணீர் கோபித்துக் கொள்ளவா போகிறது?
எனவே கடவுளை எப்படியும் வழிபடலாம். தவறில்லை. வழிபடாமல் போனாலும் அவர் கோபித்துக் கொள்ளப்போவதில்லை.
துளியை கடல் வெறுக்குமா என்ன?
புரிந்து கொள்ள வேண்டும்...
நாமெல்லாம் *கடவுளின் துளிகள்!*
இனிய கருத்து.👌👏💐
ReplyDelete