உலகத்தின் மக்கள் தொகை
820 கோடியை எட்டிவிட்டது.
மக்கள் தொகை வளரும் அளவுக்கு பூமியின் வளங்கள் உயர்ந்து கொண்டே போகிறதா என்றால் இல்லை.
நாகரீக வளர்ச்சியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம். குடிக்கத் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.
பாலைவனப் பரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.
அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றங்கள் கவலை கொள்ள வைக்கிறது.
இத்தகைய சூழலில் எல்லையில்லா ஆனந்தம் சாத்தியமா?
ஆம்...சாத்தியமே!
அதற்கு நம் மனம் விரிவடைய வேண்டும். ஒருவரே எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளும் பேராசையை விடவேண்டும். பேராசையால் யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனநிலை மாற வேண்டும்.
நமது தேவை எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?
வயிறு நிறையும் ஒருவேளை உணவுக்கு மூன்று கைப்பிடி அரிசி போதும். முழுக்க மறைக்கும் ஓர் உடைக்கு மூன்று மீட்டர் துணி போதும். ஒரு மனிதர் வாழ்வதற்கு மூன்று சதுர மீட்டர் அறை போதும்.
இத்தனை குறைவான தேவைகளுக்கு எத்தனை போராட்டங்கள் நடக்கின்றன.
பல கோடி பேர், ஒருவேளை உணவுக்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அன்றாட தேவைகளுக்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
சில கோடி பேர் மட்டும் செழிப்பில் திளைக்கிறார்கள். எங்கெல்லாம் சுரண்ட முடியுமோ அங்கெல்லாம் சுரண்டி பதுக்கி வைக்கிறார்கள்.
போட்டிகளில் தான் உலகம் போய்க்கொண்டிருக்கிறது. யார் என்னவாளால் எனக்கென்ன, நான் வாழ்ந்தால் போதும் என்னும் சுயநலம் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் எல்லையில்லா ஆனந்தம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.
எல்லையில்லா ஆனந்தம் நம் இதயத்தில் இருக்கிறது. எல்லோரையும் மனித நேயத்தோடு பார்க்கும் எண்ணத்தில் இருக்கிறது.
போதும் என்ற மனதோடு பகிர்ந்து கொள்ள முன்வந்தால் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். ஆனந்தம் எல்லோரையும் அரவணைக்கும்.
ஒவ்வொரு நாடும் பாதுகாப்புக்காக தம் நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுகிறது. பல நாடுகளுக்கு போர்க்கருவிகள் வாங்கிக் குவிப்பதற்கே பொழுது சரியாக இருக்கிறது.
உண்மையில், நாடுகளின் எல்லைக் கோடுகள் எல்லாம் கற்பனையானவை . இது எனது எல்லை,அது உனது எல்லை என்பது கூட மாபெரும் கற்பனைதான்.
உலக வரலாற்றில் பல நாடுகள் உடைந்திருக்கின்றன. பல நாடுகள் இணைந்திருக்கின்றன. ஏன் வரம்புகள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.
எல்லோரும் நம் உறவு என்கின்ற பார்வை பெறும்போது ,உலகம் என்பது ஒரு நாடாய் தெரியும். நாடு மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் எங்கெங்கோ வாழ்கின்ற எல்லா உயிர்களும் நம்மோடு பிறந்தவர்கள் என்னும் நிதர்சனம் புரியும்.
நாம் உள்ளத்தை விரிவாக்கி வளர்ந்து கொண்டே போகும்போது பிரபஞ்சத்தின் எல்லை கூட நமதென்றே தோன்றும். அத்தகைய விரிவாக்கத்தை தியானம் வழங்கும்.
தியானம் நம்மை அமைதிக்குள் அழைத்துச் செல்லும். தெய்வீகத்தின் கதவுகளை திறந்து விடும் ஆற்றல் தியானத்துக்கு இருக்கிறது.
நம் வீட்டு நீர்த்தொட்டியோடு பிரபஞ்சப் பெருங்கடலை இணைத்து விட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
நமது அறிவாற்றல் என்பது நீர்த்தொட்டி என்றால், கடவுள் என்பது பிரபஞ்சப் பெருங்கடல். அதனோடு நம்மை இணைக்கும் குழாய்தான் தியானம்.
தியானத்தின் வழியே தெய்வீக நிலையை அடைய முடியும்.
உள்ளத் தூய்மையும் நன்னெறிகள் நிறைந்த வாழ்க்கை முறையையும் கைக்கொள்ளும்போது இறைப் பேராற்றலோடு நம் இணைப்பு மேம்படும். அப்போது எல்லையில்லா ஆனந்தம் நம் இயல்பாக மாறிவிடும்.
சடங்குகள் மற்றும் வழக்கங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், எல்லா மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன.
கடவுளை அடைவதுதான் மதங்களின் நோக்கம். உலக வாழ்க்கையை உன்னத நெறிகளோடு வாழ்ந்தால் உலகம் நம்மையும் கடவுளாய் பார்க்கும்!
No comments:
Post a Comment