அது பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் காலம். கடற்கரையோரம் அமைந்த கலைகளின் நகரம் மாமல்லபுரம், சிற்பக் கலைஞர்களின் சொர்க்கமாக விளங்கியது. .
அவர்களில் தனித்து விளங்கியவன் அறிவழகன். அவன் செதுக்கிய ஒவ்வொரு சிற்பமும், கல்லில் உயிர்ப்பித்த கவிதை போல இருந்தது. அவன் உளி செதுக்கிய கடவுளர்களும் தெய்வீக மங்கையரும் உயிர் கொண்டு நடமாடினர் .
மாமல்லபுரம் கோயில்களின் வாயிலில் அவன் கைவண்ணம் பொலிந்து கொண்டிருந்தது. நகரம் முழுக்க அவன் புகழ் நறுமணமாய் பரவியது.
ஆனால், அறிவழகனின் இவ்வளவு பெருமையையும் புகழையும் தாங்கிக்கொள்ள முடியாமல் திரிகாலன் என்னும் இன்னொரு சிற்பக் கலைஞன் பொறாமைத் தீயில் பொசுங்கினான் .
இத்தனைக்கும் திரிகாலன், அறிவழகனின் தந்தையின் மாணவன். ஆனால், அறிவழகனின் அற்புத சிற்பக்கலை அவனை முற்றிலும் அறிவிழக்கச் செய்தது.
தன்னை விட அறிவழகன் சிறந்தவன் என்று ஒப்புக்கொள்ள மனமில்லாமல், அவனை தவறான வழியில் சித்தரிக்க திட்டமிட்டான்.
ஒருநாள், மன்னன் மகேந்திரவர்மனிடம் சென்ற திரிகாலன், "அரசே, அறிவழகன் தன் சிற்பங்களில் மந்திரங்களை உருவேற்றி வைத்து மக்களை மயங்கச் செய்கிறான் என்று கேள்விப்பட்டேன். அவன் ஒரு மாயக்காரன்" என்று பொய்யான குற்றச்சாட்டை சுமத்தினான்.
மன்னன், திரிகாலனின் வார்த்தைகளைக் கேட்டு சிறிது சஞ்சலம் கொண்டாலும் அறிவழகனின் மீது அவனுக்கு இருந்த நம்பிக்கையால், அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால், மன்னனின் மனதில் ஒரு சிறிய சந்தேக விதை விழுந்தது.
திரிகாலன் தன் சதியை தொடர்ந்தான். அவன் தன் நண்பர்களை வைத்து, அரண்மனையில் உள்ளவர்களிடம் அறிவழகன் பற்றி தவறான செய்திகளை பரப்பினான். இதனால், மன்னனின் மனதில் அறிவழகன் மீது சந்தேகம் வளரத் தொடங்கியது.
அறிவழகன் இந்த சதியைப் பற்றி கேள்விப்பட்டான். அவன் மனம் வருந்தினான். ஆனால், அவன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுதலித்து மன்னனிடம் உண்மையை தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவன் மன்னனைச் சந்தித்து, "அரசே, நான் எந்தத் தவறும் செய்யவில்லை. திரிகாலன் என் மீது வீண்பழி சுமத்துகிறான் " என்று கண்கள் கலங்கக் கூறினான். ஆனால், மன்னன் அவனை நம்பவில்லை.
அறிவழகன் தனது நண்பர்களின் உதவியுடன், ஒரு புதிய சிற்பத்தை உருவாக்கினான். அந்த சிற்பத்தில் , மன்னன் மகேந்திரவர்மனின் வீரத்தை சித்தரிக்கும் போர்க்களக் காட்சிகளை தத்ரூபமாக செதுக்கியிருந்தான்.
சிற்பத்தை முடித்த பிறகு, மன்னனிடம் சென்று, "அரசே, தங்களைப் பற்றிய ஒரு சிற்பத்தை செதுக்கி முடித்துள்ளேன். அதைத் தாங்கள் வந்து கண்ணுற்றால் மிகவும் மகிழ்வேன் " என்று வணக்கத்துடன் கூறினான்.
"சரி ! சில நாட்களில் வந்து பார்க்கிறேன்" என்று அனுப்பி வைத்தான் மகேந்திரவர்மன்.
அறிவழகனின் சிற்பத்தை பார்வையிட மன்னன் வருகிறான் என்பதை அறிந்த திரிகாலன் ஒரு ரகசிய திட்டம் தீட்டினான்.
அதன்படி நள்ளிரவில் ஒருவரும் அறியாமல் சிற்பத்தை அடைந்த திரிகாலன், அதில் நீளமாக விரிசல் விழுந்ததை போல சிதைத்து விட்டு அவசரமாய் திரும்பி வந்தான்.
மன்னன் அறிவழகனின் சிற்பத்தை பார்வையிடும் அந்த நாளும் வந்தது. சிற்பத்துக்கருகில் மன்னனின் வரவுக்காக காத்திருந்தான் அறிவழகன்.
வீரர்கள் புடைசூழ எட்டு குதிரைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாக வந்திறங்கினான் மன்னன்.
" நீ செதுக்கிய சிற்பம் எங்கே இருக்கிறது? " என்று அறிவழகனைப் பார்த்து வினவினான்.
அறிவழகன் மன்னனை வணங்கி வரவேற்றான்.
"அதோ அந்த குன்றின் அடிவாரப் பாறையில் செதுக்கியுள்ளேன் மன்னா!" என்று கூறி அதன் அருகே அழைத்துச் சென்றான்.
சிற்பத்தை பார்த்த மகேந்திரவர்மன் மெய்சிலிர்த்துப் போனான். அவன் போர்க்களத்தில் வாளேந்திப் ஏந்திப் போராடும் வீரக்காட்சி கண்முன்னே உயிரோட்டமாய் எழுந்து நின்றது.
மன்னன் அறிவழகனை இறுகத் தழுவிக் கொண்டான். "ஆஹா... அற்புதம்! மிக அழகாக செதுக்கியிருக்கிறாய். இந்தக் கலைப் படைப்பு என் புகழை மட்டுமல்ல, உன் புகழையும் உலகிற்கு பறைசாற்றும் " என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.
நெஞ்சம் நெகிழ்ந்து போன அறிவழகன், " மிகவும் மகிழ்ச்சி அரசே! தாங்கள் இங்கு வந்து இந்த சிற்பத்தை பார்வையிட்டமைக்கு நன்றி" என்று வணங்கி நின்றான்.
"அரசே!இந்த நேரத்தில் இன்னொன்றையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனது சிற்பங்களில் எந்த மந்திரமும் இல்லை. என் மீது சுமத்தப்படும் பழியை தாங்கள் நம்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் " என்றான்.
மன்னன் புன்னகைத்தான். "இல்லை சிற்பியே. நான் உன்னை இனி சந்தேகிக்க மாட்டேன். உன்மீது கூறப்பட்ட பழி உண்மையில்லை என்று இப்போது எனக்கு நன்றாகப் புரிகிறது. அதற்கு சாட்சியாக இந்த சிற்பமே விளங்குகிறது " என்று கூறிய மன்னன் ரதத்தில் ஏறி புழுதி பறக்கக் கிளம்பினான்.
மன்னர் அறிவழகனை பாராட்டிய செய்தி காட்டுத்தீ போல நகரம் முழுதும் பரவியது.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திரிகாலன்,
தான் சேதப்படுத்திவிட்டு வந்த சிற்பத்தை பார்த்து மன்னன் பாராட்டினானா?
இது எப்படி சாத்தியம் என்று குழம்பிப் போனான்.
மீண்டும் அந்த சிற்பத்தை பார்க்க விரைந்து சென்றான்.
அங்கே அவன் கண்ட காட்சி அவனை திக்கு முக்காடச் செய்தது. அவன் விரிசல் விழுந்ததைப் போல செய்திருந்த சேதத்தை அறிவழகன் மீண்டும் செப்பனிட்டு, ஓர் ஆற்றங்கரையில் போர் நடப்பதை போல அழகாக மாற்றி இருந்தான்.
இதைக் கண்டு திகைத்துப் போன தரிகாலன் ஏமாற்றத்தில் வெதும்பினான்.
இப்படியாக திரிகாலனின் சதி தோல்வியடைந்தது. மன்னன் மீண்டும் அறிவழகனை நம்பினான். அறிவழகனின் மனம் அமைதி அடைந்தது.
அவன், தொடர்ந்து பல அற்புதமான சிற்பங்களை உருவாக்கினான். அவன் சிற்பங்கள், பல்லவப் பேரரசின் பெருமையை உலகிற்கு அறிவித்தன.
ஆனால் திரிகாலன் திருந்தவில்லை. அறிவழகனின் ஒவ்வொரு வெற்றியும், அவன் மனதில் நெருப்பை மூட்டியது.
மன்னன் மீண்டும் அறிவழகனை நம்பியது, அவனுக்கு தாங்க முடியாத துன்பத்தைத் தந்தது. தன்னை விட அறிவழகன் எப்போதும் சிறந்தவனாகவே இருப்பான் என்ற எண்ணம் அவனை வாட்டி வதைத்தது.
அவனது பொறாமை, ஒரு நஞ்சு போல் பரவிக்கொண்டே இருந்தது.
ஒரு இருண்ட இரவு, அறிவழகன் தனது கலைப்பள்ளியில் தனியாக சிற்பங்களை வடித்தபடி இருந்தான். திரிகாலன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான்.
அவன் ஒரு பெரிய பாறையை உருட்டி, அறிவழகன் இருக்கும் அறையை நோக்கித் தள்ளினான். பாறை வேகமாக உருண்டு, அறிவழகனை நோக்கி அசுர வேகத்தில் வந்தது.
தூரத்து இடியோசையை போன்ற அந்த சத்தத்தை கேட்டு அவன் திரும்பிய போது, பாறை அருகில் வந்துவிட்டது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
கண்கள் மூடிக்கொண்டு, மரணத்தை எதிர்நோக்கினான்.
அந்த நொடி, அறிவழகனுக்கு தனது வாழ்க்கை கண்முன் ஓடியது. தான் செதுக்கிய ஒவ்வொரு சிற்பமும், தன்னை நோக்கி சிரித்தது போலிருந்தது.
திறந்த கண்களுடன் பார்த்தபோது, அந்தப் பாறை சற்றே திசை மாறி அறையின் வாசலில் இருந்த வாகை மரத்தின் அடிப்பகுதியில் வேகமாக மோதி உருண்டு நின்றது.
அறிவழகன் மரணத்தின் பிடியிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினான்.
ஆனாலும் அவன் அந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்தான்.
திரிகாலன் தன்னை கொல்ல முயன்றதை உணர்ந்துகொண்டான். என்றாலும் கோபம் கொள்ளவில்லை . மாறாக, திரிகாலனின் மீது பரிதாபம் வந்தது. அவன் கொண்ட பொறாமை தன்னை எவ்வளவு வெறுக்க வைக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.
அந்த நாளிலிருந்து, அறிவழகன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவன் தன் கலைப்பள்ளியை மூடிவிட்டு, இரவில் மட்டும் சிற்பங்களை செதுக்கத் தொடங்கினான்.
திரிகாலன் தொடர்ந்து அவனைத் துரத்திக் கொண்டே இருந்தான்.
ஒரு நாள், மன்னன் மகேந்திரவர்மன் மறைந்த துயரச் செய்தி அறிவழகனுக்குத் தெரிய வந்தது. துக்கம் தொண்டையை அடைக்க துவண்டான் அறிவழகன்,
ஆனால் அதே சமயத்தில் அவன் மனதில் ஓர் உறுதி பிறந்தது. மன்னனுக்கு ஒரு நினைவுச் சின்னமாக மிக பிரமாண்டமான சிற்பத்தை செதுக்க முடிவு செய்தான்.
பல நாள் இரவில் ரகசியமாக அச்சிற்பத்தை செதுக்கத் தொடங்கினான். சிற்பக்கலையின் சிகரமாய் வடித்தெடுத்த அந்த சிற்பத்தை, மன்னனின் கல்லறையின் முன் வைத்தான்.
எளிதில் செதுக்க முடியாத கலை நுட்பத்துடன் உயிர் கொண்டெழுந்த அச்சுப்பத்தைப் பார்த்த திரிகாலனுக்கு மெய்சிலிர்த்துப் போனது. மனம் பாகாய் உருகியது.
இத்தகைய ஓர் உன்னத கலைஞனை தான் கொல்ல நினைத்ததை எண்ணி குற்ற உணர்வு கொண்டான்.
அவன் தன் செயல்களுக்காக வருந்தி, அறிவழகனிடம் மன்னிப்புக் கோரினான். இம்முறை அறிவழகனின் மனமும் இளகியது தன் இதயத்தை மென்மையாக்கி, மனம் திருந்திய திரிகாலனை மன்னித்தான்.
இருவரும் இணைந்து மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள் . இனி
இருவரும் ஒற்றுமையாக இருக்க முடிவு செய்து கொண்டார்கள் .
ஓர் உளியில் ஒளிந்திருந்த துரோகம் மறைந்து உன்னதக் கலைவண்ணம் மிளிரத் தொடங்கியது!