சிலேடைப் பாடல்கள் என்பது நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு அறிமுகம்.
காளமேகப் புலவரின் சிலேடைப் பாடல்களை எங்கள் தமிழாசிரியர் திரு.ஆறுமுகம் அவர்கள் சுவைபட விளக்குவார்.
ஒரு பாடலுக்கு விளக்கம் சொல்லி முடிக்க இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்வார். பதவுரை சொல்ல ஒரு மணி நேரம். பொழிப்புரை அல்லது விளக்கவுரை சொல்ல ஒரு மணி நேரம்.
அப்போதைய செய்யுள் பகுதியில் எள்ளுக்கும் பாம்புக்கும் பொருந்தும் காளமேகப் புலவரின் பாடல் இருந்தது. அது என்னை மிகவும் கவர்ந்தது.
"ஆடிக் குடத்தடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்பெள்ளனவே ஓது!"
என்பதுதான் அந்தப் பாடல்.
இதன் பொருள்:
காளமேகப் புலவர் இந்த வெண்பாவில், பாம்பு மற்றும் எள் ஆகிய இரண்டு வெவ்வேறான பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்கிறார்.
இரண்டும் வெவ்வேறான இயல்புகளை உடையவை என்றாலும், அவற்றின் செயல்களில் ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறுகிறார்.
* பாம்பு: பாம்பு குடத்தில் புகுந்து கொள்ளும் முன் ஆடும் போது சீறும். குடத்தைத் திறந்தால் தன் தலையை வெளியே நீட்டி காட்டும். பாம்பின் விஷம் தலைக்கேறும்.
* எள்: எள்ளை செக்கில் அரைக்கும் போது இரைச்சல் எழுப்பும். எண்ணெய் எடுத்து குடத்தில் வைத்தால் அது பார்ப்பவரின் முகத்தை பிரதிபலிக்கும். எண்ணெய் தலைக்கு தேய்த்தால் குளிர்ச்சி தரும்.
இதைப்போல நாமும் எழுதினால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அப்படி எழுதியதுதான் இந்த வெண்பா.
"வெண்முத்தாய் தோன்றும் -
விடியலில் பூத்திடும்
கண்கவரும் உச்சவாசம் காட்டிடும் - என்பதால்
மின்னிடும் வெள்ளியும் மென்முக மல்லியும்
ஒன்றெனக் கண்ணே உணர் "
வெண்முத்தாய் தோன்றும் - என்றால் வெள்ளி நட்சத்திரம் வெண்மையான முத்தைப்போல உதிக்கும்.
மல்லிகை மொட்டும் முத்துப் போல மின்னும்.
விடியலில் பூத்திடும்- என்றால், வெள்ளி அதிகாலையில் உதிக்கும், மல்லிகையும் அதிகாலையில் பூக்கும்.
கண் கவரும் - இரண்டுமே கண்ணைக் கவரும் பொலிவுடன் விளங்கும்.
உச்ச வாசம் காட்டிடும் - வெள்ளி நட்சத்திரம் உச்சத்தில், வானில் வாசம் செய்யும்; வசிக்கும். மல்லிகையோ உச்சபட்ச, மிகுதியான வாசனை கொடுக்கும்.
எனவே மேற்சொன்ன காரணங்களால், வெள்ளியும் மல்லிகையும் ஒன்றுதான் என்று கண்ணே நீ உணர்ந்து கொள் என்று கூறியிருக்கிறேன்.
இந்த கண்ணே என்பதை, நமது கண்ணைப் பார்த்து சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது எதிரில் உள்ள காதலியை அல்லது மனைவியைப் பார்த்து சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம்.