ஒரு படத்துல செந்தில் கவுண்டமணிகிட்ட ஒரு நாள் முழுக்க சும்மா இருக்க முடியுமா அப்படின்னு கேப்பாரு. அது என்ன பெரிய விஷயமா அப்படின்னு சவால் விட்டுட்டு கவுண்டமணி முயற்சி பண்ணுவார். அதனால வரக்கூடிய பிரச்சனைகளை நகைச்சுவையா சொல்லி இருப்பாங்க.
ஆனா நிஜமாகவே சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டமா அப்படின்னா, ஆமா ரொம்ப கஷ்டம்.
இந்த மனசு இருக்கே அதுக்கு டிபன் காபி சாப்பாடு எல்லாம் எண்ணங்கள் தான். அதனால எதையும் நினைக்காம ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது.
மேனேஜர் திட்டினது, பெஸ்டி பாராட்டினது, நேத்து பார்த்தது, நாளைக்கு எங்க போறது, கடன் வாங்கினது, கஷ்டப்பட்டது, சிரிச்சது, கண்ணீர் விட்டது, மெடல் வாங்கினது, மிஸ் ஆனது இப்படி ஏதாவது ஒன்னு ஞாபகம் வந்துகிட்டே தான் இருக்கும்.
ஆனால் இந்த ஞானிகள் துறவிகள் எல்லாம் சும்மா இருத்தல் சுகம் அப்படின்னு சொல்றாங்க.
நமக்கு தேவைகள் எதுவுமே இல்லன்னா சும்மா இருக்கலாம். உணவு,உடை இருப்பிடம் இப்படி எல்லாம் தேவைப்படுற நாம் எப்படி சும்மா இருக்க முடியும். இதையெல்லாம் நாமளே பூர்த்தி செய்யனும்னா உழைக்கணும். உழைப்பு என்பது செயல். செயல் என்பது எண்ணத்தால் உருவாவது. எனவே செயல் செய்கிறவன் சும்மா இருக்க முடியாது. மனசுல எதையும் நினைக்காம இருக்க முடியாது.
அப்படின்னா யாரு சும்மா இருக்க முடியும். தன்னைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவங்கதான் சும்மா இருக்க முடியும்.
தனக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை மத்தவங்க பாத்துக்குவாங்க அப்படின்னா சும்மா இருக்கலாம். இல்லன்னா தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை அப்படின்னு சொல்றவங்க சும்மா இருக்கலாம். இதுதான் எதார்த்தம்.
மனசுல எதையும் நினைக்காமல், செயல் எதுவும் செய்யாமல் அசைவற்று இருப்பது பிரம்ம நிலை. அதுதான் கடவுள் தன்மை அப்படின்னும் ஞானிகள் சொல்றாங்க. அது உண்மைதான். அந்தப் பரிபூரண நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதுக்கு நாம கோடியில் ஒருத்தரா இருக்கணும்.
போங்க சார்... சும்மா எதையாவது சொல்லாதீங்க, அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.
நான் சும்மா எதையும் சொல்லலிங்க. சும்மா இருந்து சுகத்தை கண்டவர்கள் சொன்னதை சொன்னேன். ஆமாம் இந்த திருமூலர், அருணகிரியார், வள்ளலார் எல்லாரும் சும்மாவா சொல்லி இருப்பாங்க!