துன்பத்தை விலக்கிவிட்டு இன்பத்தை தொட்டிடவே அனைத்து உயிர்களும் முயற்சி செய்கின்றன.
மகிழ்ச்சி என்னும் மந்திரத்தை உச்சரிக்கத்தான் மனிதரெல்லாம் ஓடோடி உழைக்கின்றார்கள். கஷ்டத்தை நஷ்டத்தை தவிர்த்திடவே காலமெல்லாம் பாடுபட நினைக்கின்றார்கள்.
ஆனால் மகிழ்ச்சி எப்போதும் நிரந்தரமாய் இருப்பதில்லை. கொஞ்சம் இன்பம் நிறைய துன்பம் என்று மனித வாழ்க்கை ஒரு ராட்டினச் சுற்றலாய் மாறிக்கொண்டே இருக்கிறது.
மகிழ்ச்சி ஏன் நிலைப்பதில்லை தெரியுமா? அது வெளியில் இருந்து நமக்குள் நுழைவது.
அழகான மலரின் வண்ணம் நம் அகத்தை நிறைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் வாசனையை நுகர்கிறோம். மனதுக்குள் இதமாய் மகிழ்ச்சி பரவுகிறது.
அறுசுவை உணவை ரசித்துச் சுவைக்கிறோம். மகிழ்ச்சி உள்ளே மத்தளம் கொட்டுகிறது.
இனிய இசையை கேட்கும் போது இதயம் மகிழ்ச்சியில் துள்ளி ஆடுகிறது. பஞ்சு மெத்தையில் படுக்கும்போது கிடைக்கும் சுகத்தில் தேகம் திளைக்கும்.
ஆனால் இவையெல்லாம் வெளியில் இருந்து நமக்குள் நுழைப்பவை. இருக்கும் வரைக்கும் இன்பம் தருபவை. அவை போய்விட்டால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும்.
எப்படி நிலையான ஆனந்தத்தை அடைவது? அதற்கும் சில அற்புத வழிகள் இருக்கின்றன.
தியானம் செய்யுங்கள். உள்ளுக்குள் ஆனந்தம் உற்பத்தியாகும்.
அன்பு செய்யுங்கள்.ஆனந்த அருவிகள் அகத்தில் ஆர்ப்பரிக்கும்.
உதவி செய்யுங்கள் உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றாய் பிரவகிக்கும்.
சேவைகள் செய்வதற்கு சித்தம் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்களை சொந்தம் கொண்டாடும்.
இயற்கையோடு இணைந்து இதயம் தொலைத்தால் எல்லையற்ற ஆனந்தம் எழும்புவதை உணரலாம்.
துன்பப்படும் உயிர்களை கருணைக் கண்களால் அணை த்துக் கொள்ளுங்கள். தொலையாத ஆனந்தம் உங்களுக்கு சொந்தம் என்று தெரிந்து கொள்வீர்கள்.
உள்நோக்கி உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.உங்களை நீங்கள் யார் என்று உணர்ந்து கொள்ளுங்கள். அப்போது, ஆனந்தம் பொங்கிவரும் அழகை பாருங்கள்.
இப்போது சொன்னவை எல்லாம் நம்மை விட்டு எப்போதும் நீங்காது. காரணம் இவை வெளியில் இருந்து நமக்குள் நுழையவில்லை. நம் உள்ளிருந்து புறப்பட்டு நறுமணமாய் பரவுகிறது. அதனால் தான் அவை எப்போதும் நிரந்தரமாய் நிலைக்கிறது.
நாம் பொருள்களால் அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் குறைந்த நேரமே நமக்குள் குடியிருந்து போகும். ஆனால் நம்மை நாமே கரைத்துக் கொள்ளும் உன்னத உணர்வுகளால் உருவாகும் ஆனந்தம் எப்போதும் நிலைக்கும்.
ஆம். நாம் மகிழ்ச்சியோடு நின்று போகும் மானிடர்கள் அல்ல. ஆனந்த அலைபரப்பும் ஆழியின் புத்திரர்கள்!
ஆனந்தம் ஒர் அற்புத முடிவிலி.
அந்த தெய்வீக அனுபவத்தை அடைந்தால் நிம்மதி!