Saturday, 2 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-10- வளர்வது மகிழ்ச்சி! வழங்குவது ஆனந்தம்!


வியர்வை சிந்தி பயிர் வளர்த்து விளைச்சல்  காண்பது மகிழ்ச்சி. பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கினால் வருவது ஆனந்தம்.

 உண்மையாய் உழைத்து உயரம் எட்டுவது மகிழ்ச்சி. உடன் இருப்பவர்றக்கு உதவி செய்து உயர வைப்பது ஆனந்தம்.

 வசதி வந்தால் வளமாய் வாழ்வது  மகிழ்ச்சி. வறுமை வந்தாலும் நேர்மை மாறாமல் வாழ்ந்து காட்டுவது ஆனந்தம்.

 ஆனந்தம் என்பது இருளின் நடுவே ஒளியாய் இருப்பது. பாலைவனத்தையும்    சோலை வனமாக்கும்  மழையை போன்றது.

 எங்கெல்லாம் நீங்கள் பயன்படுகிறீர்களோ , அங்கெல்லாம் நீங்கள் தேயவில்லை, வளர்கிறீர்கள்.

 ஆம்.உதவி என்பது உன்னத குணம். அதுதான் உங்களை உயரத்தில் ஏற்றி விடும் ஏணிப்படி. சிலர் உயரத்தில் உள்ளவர்களை கீழே இழுப்பார்கள். ஏன் இப்படி?

 நண்டுகள் இருக்கும்  பானையை மூடத் தேவையில்லை. அதில் எதுவும் மேலேறி தப்பித்ததாய் சரித்திரம் இல்லை. ஏனெனில் மேலே ஏறுவதை கீழே இருப்பது இழுத்துத் தள்ளும். தானும் மேலேறாது. மற்றதையும் ஏற விடாது.

 நாம் நண்டுகள் அல்ல, மனிதர்கள். 

அடுத்தவர் மரத்தை வெட்டி தள்ளுவதால், நம் வீட்டு மரம் வளர்ந்து விடாது. நம் வீட்டு மரம் வளர வேண்டுமானால் நீர் ஊற்ற வேண்டும். நீர் என்பது உழைப்பு.

 உச்சம் அடைந்தவர் அடுத்தவர் உயர உற்சாகம் கொடுப்பது ஆனந்தம். பள்ளத்தில் இருப்பவர் மேலே ஏறி வர படிகள் செதுக்குவது ஆனந்தம்.

 சேர்த்துக்கொண்டே போவதால் ஆனந்தம் வருவதில்லை. சேர்த்து வைத்ததை  மன மகிழ்வோடு பகிர்ந்து கொள்வது ஆனந்தம்.

 பூமி நமக்கு திருப்பித் தரும் என்று நினைத்துக் கொண்டா மேகம் பொழிகிறது? கிளிகள் நமக்கு திருப்பித் தரும் என்றா மரங்கள் கனிகளை தருகிறது?

இல்லை.வழங்குவது அவற்றின் இயல்பு. வழங்குவது அவற்றின் வள்ளண்மை. 

இயற்கை வழங்குவதால் ஆனந்தம் அடைகிறது. நாமும் வழங்குவதால் ஆனந்தத்தை நமதாக்கிக் கொள்ள முடியும்.

 பொருள்களை தருவது மட்டும் வழங்குவது அல்ல. பொருள் இல்லாவிட்டாலும் புன்சிரிப்பை தருவதும் வழங்குவதுதான். 

 அறுசுவை உணவை தருவது மட்டும் வழங்குவது அல்ல. அன்பான வார்த்தையை  பேசுவதும்  வழங்குவதுதான்.

 வழங்குவதற்கு வசதிதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வழங்க வேண்டும் என்னும் உள்ளம்  இருந்தால் போதும்.  

 வழங்க வேண்டும் என்னும் உள்ளம் இருந்தால், வசதிகளை இயற்கை வாரிக் கொடுக்கும். இயற்கை தராததை நாம் எப்படி மற்றவருக்கு தர முடியும்.

 இந்த வாழ்க்கை இயற்கை தந்தது. இந்த வசதி இயற்கை தந்தது. இந்த உயரம் இயற்கை தந்தது.

 இப்படி, எல்லாம் இயற்கை தந்தது என்னும் நினைவோடு இருப்பவர்க்கு தலைக்கனம் வருவதில்லை. தலைக்கனம் இல்லாத செல்வந்தர்க்கு புகழ் மணம் குறைவதில்லை. அதிலும் அவர் வழங்குபவராய் இருந்து விட்டால், ஆனந்தத்திற்கு எல்லை இல்லை.

 ஒளியை வழங்குவது கதிருக்கு ஆனந்தம். உயிர் மூச்சை வழங்குவது காற்றுக்கு ஆனந்தம்.

 தாகத்தை தணிப்பது தண்ணீரின் ஆனந்தம். தூக்கிச் சுமப்பது பூமிக்கு ஆனந்தம். அனைத்துக்கும் இடம் தருவது ஆகாயத்துக்கு  ஆனந்தம்.

 இயற்கை எல்லாவற்றையும் வழங்குவதில் ஆனந்தம் கொள்கிறது. அது தனக்கென்று எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. தந்து கொண்டே இருக்கிறது. 

  வழங்குவதற்கு  தன்னிடம் பொருள் இல்லாதவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. எப்போதும் குறையாத செல்வம் ஒன்று எல்லாரிடமும் இருக்கிறது.

 அந்த செல்வம் வழங்குவதால் இரட்டிப்பாகும். பெறுபவருக்கு பூரிப்பைத் தரும். உலகம் முழுக்க தந்த பிறகும் ஊற்றுப்போல சுரந்து கொண்டே இருக்கும். அதுதான் கடவுள் என்று அனைவரும் சொல்கிறார்கள்.

 நாத்திகரும் கூட அதை ஒப்புக் கொள்வார்கள். அதன் பெயர் அன்பு!



1 comment:

  1. அள்ளித்தருவதில் ஆனந்தம்.
    அருமை.👏👌💐

    ReplyDelete