எங்கிருந்து வருகிறது என்று அறிவியலால் சரியாக சொல்ல முடியாத பெரும் சக்திதான் பிரபஞ்ச சக்தி (cosmic energy) ஆகும்.
இது சூரிய மண்டலத்துக்கு வெளியிலிருந்து வருவது.
ஆயுள் முடிந்த சக்தி வாய்ந்த தூரத்து நட்சத்திர வெடிப்பிலிருந்து இது வரலாம்.
மாபெரும் கருந்துளை இதை வெளியிடக்கூடும்.இப்படி அறிவியல் சொல்கிறது.
ஆனால் ஆன்மிகம் என்ன சொல்கிறது என்றால்,இதுதான் கடவுளிடமிருந்து வரும் உயிர்சக்தி.
கரு உருவாகும்போது இந்த பிரபஞ்ச சக்திதான் உயிரை உள்செலுத்துகிறது. புதிய உயிர் உருவாகிறது. கரு வளரத் தொடங்குகிறது.
சரி இந்த பிரபஞ்ச சக்தியை எப்படி பெற்றுக்கொள்வது என்னும் கேள்வி எழும்.
தியானத்தின் மூலம் இச்சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்த முறைப்படியான தியானம் அதிக பயனைத் தரும்.ஒரே மாதிரி தியானப் பயிற்சிகளில் எல்லாரும் ஈடுபட்டாலும் அனைவருக்கும் ஒரே அளவு பிரபஞ்ச சக்தி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அது அவர்களின் உடல் மற்றும் மனப்பக்குவத்தை பொறுத்து அமையும்.
உடலும் உள்ளமும் எந்த அளவு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவு அதிகமான பிரபஞ்ச சக்தியை உடல் ஈர்த்துக் கொள்ளும். எனவே பிரபஞ்ச சக்தியை பெற வேண்டுமானால் உடலையும் உள்ளத்தையும் மிக தூய்மையாக பேணிக் காக்க வேண்டும்.
உடல் தூய்மை என்பது உள்ளும் புறமும் அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது. குளிப்பதால் உடலின் வெளிப்புற தூய்மையைப் பெறலாம்.
உள்ளுறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்ள சிறிது கடின முயற்சி தேவைப்படும். அதில் முக்கியமானது கழிவுகளை வெளியேற்றுதல்.
இதில் மூன்று கழிவுகள் மிக முக்கியமானது. அவை சிறுநீர் மலம் மற்றும் வியர்வை. இவை மூன்றும் சரியாக வெளியேற வேண்டுமென்றால் தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.
உணவு செரிமானத்துக்கு தண்ணீர் அவசியம். தேவையான தண்ணீர் இருந்தால் மட்டுமே இரைப்பை உணவை நன்றாக அரைத்துக் கூழாக மாற்றும். இந்த சத்துப் பொருளே ரத்தமாக மாற்றம் பெறுகிறது.
தேவையற்ற உப்பு,,யூரியா போன்ற பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் செல்களில் இருந்து நேரடியாக கழிவை வியர்வையாக வெளியேற்ற தண்ணீர் அவசியம்.
சரியாக செரிமானம் நடக்க உடலுக்கு போதிய வெப்பம் வேண்டும். அது உடற்பயிற்சியின் மூலமோ அல்லது வேலையின் மூலமோ கிடைக்கும்.
எனவே வேலை செய்து, நன்றாக உணவு உண்டு,தேவையான தண்ணீரும் அருந்தினால் இம்மூன்று கழிவுகளும் தங்காமல் வெளியேறும். உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகி ரத்தத்தில் கலக்கும். ரத்தம் சுத்தமாகும்.
இதைத் தவிர கண்,காது, மூக்கு தொண்டை வழியாகவும் கழிவுகள் வெளியேறும் என்று நமக்குத் தெரியும்.
இப்படி உள் மற்றும் வெளியுறுப்பு தூய்மையில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் நுரையீரல் பலம் மற்றும் தூய்மையில் காற்று முக்கிய வேலை செய்கிறது.
உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு சென்று வர வேண்டும். உறங்கும் போதும் காற்றோட்டமான இடத்தில் உறங்க வேண்டும்
உடற்பயிற்சி செய்யாதவர்கள் எனில் முறையாக யோகப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நுரையீரல் சுத்தமாகும், பலம் பெறும். தேவையான ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும். அதன் மூலம்தான் ரத்தத்தில் உள்ள சத்துப் பொருள் தலை முதல் கால் வரை சீராக சென்று சேர்கிறது.
இப்போது உடலுக்கு தேவையான ஐம்பொருள்களில் நான்கு பொருள்களை தந்து விட்டோம். அவை உணவு (நிலம்), தண்ணீர், பால், பழரசம் போன்றவை ( நீர் ), உழைப்பு அல்லது உடற்பயிற்சி (நெருப்பு, காற்று ).
ஐம்பொருளில் இன்னும் ஒன்று மிச்சம் இருக்கிறது. அதுதான் ஆகாய சக்தி . அது ஆழ்ந்த உறக்கத்தின் போது கிடைக்கிறது.
பிரபஞ்ச சக்தி (cosmic energy)என்று ஆரம்பத்தில் சொன்னோமே, அது
இந்த ஆகாய சக்திதான்.
உடல் செல்களை புதுப்பிப்பதும், காயங்களை ஆற்றுவதும், தெளிவான சிந்தனை தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான்.
இது உறக்கத்தின் போது ஓரளவு கிடைத்தாலும் தியானத்தின் போது பெருமளவு கிடைக்கிறது. இந்த சக்திதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது.
இரண்டு நாள் தூங்காமல் இருந்தால் சோர்ந்து விழுந்து விடுவது அதனால் தான். நான்கு நாள் தூங்காமல் இருந்தால் சிந்தனை குழப்பம் வரும். இருபது நாட்களுக்குமேல் தூங்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்!
சரி. இதுவரை ஐம்பொருளையும் உடலுக்கு கொடுத்து பலமாகவும் சுத்தமாகவும் வைத்து விட்டோம் . இது பிரபஞ்ச சக்தியை பெறுவதற்கு தேவையான பாதி வேலைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மீதி வேலைதான் மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது. அதுதான் உள்ளத்தை சுத்தம் செய்வது!
ReplyDeleteஉண்மை. 👌💐
உடல் நீரால் சுத்தமாகும்.
உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.
-திருவள்ளுவர்