Wednesday, 6 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- அத்தியாயம்-13 - உள்ளத்தில் உள்ளது உயர்வு!

உள்ளம் தான் நம்மை யார் என்று வரையறை செய்கிறது. அடையாளம் காட்டுகிறது. 

நாம் என்ன நினைக்கிறோம் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பதெல்லாம் உள்ளத்தைப் பொறுத்தே அமைகின்றன. 

 கோபம்,பயம்,அன்பு,வெறுப்பு கருணை,பொறாமை,உற்சாகம், சோர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் நம் உள்ளத்திலிருந்தே புறப்படுகின்றன.

 உடல் தூய்மையோடு
 நமது உள்ளமும் தூய்மையாக இருந்தால் பிரபஞ்ச சக்தியை பெருமளவு ஈர்ப்பது சத்தியமாகும்.

 உள்ளத்தை எப்படி தூய்மை செய்வது?

அறம், தீங்கின்மை  இந்த இரண்டையும்   பின்பற்ற வேண்டும்.
 
சமுதாய நியதிகளுக்கு ஏற்ப நேர்மையாக வாழ்வதே அறம். அறத்துடன் எண்ணம், சொல், செயல் இவற்றால் யாருக்கும்  தீங்கில்லாமல் வாழ வேண்டும். 

 எண்ணத்தின் விதைதான் சொல்லாகவும் செயலாகவும் முளைக்கிறது. சொல்லும் செயலும் முதலில் எண்ணமாகத்தான் உருவாக்கின்றன. எனவே எண்ணத்தை சரியாக வைத்துக் கொண்டால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும்.

 நாம் எப்போதும் பொய்யை தவிர்த்து உண்மையை பேச வேண்டும். பொய் எப்போதும் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும்.

 மேலே சொன்னபடி நேர்மையாகவும் தீங்கின்றியும் உண்மையோடும் வாழ்ந்தால் உள்ளம் தூய்மையடையும்.

 இப்படி உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் போது பிரபஞ்ச சக்தியை பெருமளவு ஈர்ப்பது எளிதாகும்.

பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் ஆண்ட்டனா  (Antenna) போல நமது உச்சந்தலைப்பகுதி செயல்படுகிறது. அதனால்தான் முதுகுத்தண்டை  நேராக வைத்து தியானம் செய்ய வேண்டும்.

 தியானத்தின் போது உச்சந்தலை வழியாக ஈர்க்கப்படும் பிரபஞ்ச சக்தியை 
 முழுவதும் உள்வாங்க வேண்டும் என்றால் நம் உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதே சமயம் நம் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

 இவை இரண்டும் தூய்மையாய் ஒத்திசைவில் இயங்கும்போது பிரபஞ்ச சக்தியோடு நமக்கு நேரடிப் பிணைப்பு ஏற்படும். இதை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டால்  தெய்வீகத்தில் திளைக்கலாம்.

 உடல் தூய்மை குறைந்தால் பிரபஞ்ச சக்தியை தேக்கி வைக்கும் திறன் குறையும். உள்ளத் தூய்மை குறைந்தால் தேக்கி வைத்த சக்தி வெகு விரைவாக வெளியேறிவிடும்.

 தியானத்தோடு யோகப் பயிற்சியும் சேரும் போது பிரபஞ்ச சக்தியின் தொடர்பு வெகு விரைவில் ஏற்படும். அதன் காரணமாக  அன்பு,நன்றி, கருணை போன்றவை  நமக்குள் பொங்கிப் பெருகும். 

   பிரபஞ்ச சக்தியின் நிரந்தர    இணைப்புக்கு குண்டலினி யோகம் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. 

பல்வேறு வகையான ஆசனங்கள், பிராணாயாமம், மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் உயிர் சக்தியை முதுகுத்தண்டின் வழியாக உச்சந்தலைக்கு ஏற்றுவது குண்டலினி யோகத்தின் சிறப்பு.

 இதனை தகுந்த பயிற்சி உள்ள குருவின் மூலம் கற்பது முக்கியம். முறையான வழிமுறைகள் தெரியாமல்  உயிர் சக்தியை உச்சந்தலைக்கு ஏற்றினாலும்  பிரபஞ்ச சக்தி அதிக அளவில் உள்ளிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஆனால் உச்சந்தலைக்கு ஏறிய குண்டலினியை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது கீழிறக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இல்லையெனில்  மனக்குழப்பம், மனநல பாதிப்பு  போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படக்கூடும்  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இவற்றை சரி செய்ய வேண்டுமென்றால் பயிற்சி பெற்ற குருவின் துணை தேவைப்படும். 

 சில நேரங்களில் இறைவனே குருவாக இருந்து வழி காட்டுவார். அப்போது நமக்கு எந்த கவலையும் இல்லை. சுமையெல்லாம் இறக்கிவிட்டு சுகமாக வாழலாம்!

  




2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மை.
    இறைவனே வழிகாட்டி..
    🥰👌💐

    ReplyDelete