Tuesday, 17 December 2024

துரோகம்- மதிபாலன்

 மேற்கு மலைத்தொடரை ஒட்டி அமைந்த பசுமை கொஞ்சும்  ஒரு கிராமம்தான் குன்றம்பாரம். 

 வயல், நதி, மலை, காடு என்று எல்லா  இயற்கை வளங்களையும்  தன்னகத்தே  கொண்டது அது. இயற்கையின் பொக்கிஷமாய் அமைந்த ஊர்.

அந்த கிராமத்தில் இரண்டு நண்பர்கள், கார்த்திக் மற்றும் சரவணன். பள்ளி நாட்களிலிருந்தே  எங்கே பார்த்தாலும் சேர்ந்து ஒன்றாக சுற்றியவர்கள். 

 ஒருபுறம் கார்த்திக் தன் பேச்சுத் திறமையால் கிராமத்து மக்களிடம் பிரபலமாக இருந்தான் ; மற்றொரு பக்கம் சரவணன் தனது புத்திக் கூர்மையால்  கிராம மக்களுக்கு நல்ல தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தான்.

கார்த்திக் கிராமத்தில் பிரபலமாக இருந்தாலும், அவனது கனவு அரசியல். பொதுக் கூட்டங்களில் அவன் பேசும் பேச்சு எல்லாரையும் ஈர்க்கும்.

 அன்று கிராம சபை கூட்டம் 
கார்த்திக் பேசத் தொடங்கினான். " எல்லாருக்கும் வணக்கம். நம்ம கிராமத்துக்கு மாற்றம் வரணும்னு நாம எல்லோரும் நினைக்கிறோம். நம்ம கிராமம் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் ஆகணும்  

நான் வர்ற பஞ்சாயத்து தேர்தல்ல தலைவருக்கு நிக்கலாம்னு நினைக்கிறேன்.நீங்க என்னை ஆதரிப்பீங்கன்னு  நம்பிக்கையோட இருக்கேன். ."

கூட்டத்தில்  இருந்த பழனியப்பன் எழுந்து "அதெல்லாம் சரிப்பா. நம்ம ஊர்லபாதுக்காக்கப்பட்ட குடிநீர் வேணும்னு ரொம்ப நாளா ஒரு கோரிக்கை இருக்குது.அதுக்கு என்ன தீர்வு? நீ என்ன பண்ணப் போற?"

கார்த்திக்: "அதுக்கெல்லாம் சமயம் வரும் பழனியப்பா. நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன தலைவரா ஆக்குங்க.நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் ."

" அப்போ சரிப்பா! நாங்க உனக்கு ஓட்டு போடுறோம் " . கூட்டத்தில் பெரும்பாலோரின் குரல் இப்படி ஒலித்தது.

அந்தக் கூட்டத்தில் இருந்த சரவணன் , கார்த்திக்கின் பேச்சு வெறும் வாக்குறுதியாக இருக்கிறது என்பதைக்   கண்டுகொண்டான். அவன் மனம் மிகவும் குழம்பியது.

கூட்டத்தில் பேசாமல் இருந்த சரவணன், தன் திட்டம் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தான்.

 கிராமத்தினர் அடுத்து வந்த தேர்தலில் கார்த்திக்கை அமோக  வெற்றி பெற வைத்து தலைவர் ஆக்கினர்.

குடிதண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க பாசன நிலங்கள், மழையின் அளவு, காலநிலை மாற்றம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து, ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கினான் சரவணன்.

ஒரு நாள் மாமரத்தடியில் கார்த்திக்கிடம் திட்டத்தை எடுத்துச் சொன்னான்.

 சரவணன்: "கார்த்திக், இதப் பாரு. நம்ம கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர இதுதான் சரியான வழி. நீ கிராமத்து தலைவரா இருக்க, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு. நீ என்ன சொல்ற?"

கார்த்திக்: "சரவா, நீ சொல்ற திட்டம் ரொம்ப நல்லா இருக்கு. இதை நான் கவனிச்சிக்கிறேன்.

 ஆனா, இதுக்கு பெரிய அளவுல நிதி தேவைப்படுது. இதை நிறைவேற்றனும்னா  நமக்கு உதவக்கூடிய தொழிலதிபர்கள், அரசியல் அரசியல் ரீதியான சப்போர்ட் தேவையா இருக்கு.  நான் எனக்கு தெரிஞ்ச தொழிலதிபர்கள் கிட்ட பேசிப் பார்க்கிறேன் ."


சரவணனுக்கு ஏதோ ஒரு நெருடல் தோன்றினாலும், தன்  நண்பனிடம் நம்பிக்கை வைத்தான்.

சில நாட்களிலேயே, கார்த்திக் ஒரு தொழிலதிபரை சந்தித்தான். அவர் பக்கத்து நகரத்தில் சிமெண்ட் கூரை தயாரிக்கும் தொழிற்சாலையின் சொந்தக்காரர் .

 அவர் அந்த கிராமத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களில் உதவி செய்ய விரும்பினார். 

அப்போது கார்த்திக், சரவணனின் திட்டத்தை எடுத்துக் கூறினான், ஆனால் சரவணன் திட்டம் என்று கூறவில்லை. தானே உருவாக்கியது போலவே அவரிடம் விளக்கினான்  

 கார்த்திக்: "இந்த திட்டம் நான் பல நாள் யோசிச்சு பிறகு கிடைச்ச  ஐடியா. நம் கிராமத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல இந்த மாதிரி பெரிய திட்டங்கள் தான் தேவை. நீங்க கண்டிப்பா உதவனும் "

தொழிலதிபர் திட்டத்துக்கு நிதி தர சம்மதித்தார். விரைவிலயே பணிகள் தொடங்கி நடைபெற்றன. ஓராண்டு காலத்தில் நிறைவும் பெற்றது.

ஆனால் திட்டத்தின் முழுப்பயனும் தொழிலதிபரின் நிறுவனத்துக்கும், கார்த்திக்கின் அரசியல் வட்டாரங்களுக்கும் மட்டுமே சென்றது. சரவணனின் பெயர் முழுவதும் இருட்டடிக்கப்பட்டது.

சரவணன் இந்த விஷயத்தை அறிந்ததும் கார்த்திகை  நேரில் சென்று பார்த்தான்.

 சரவணன்: "கார்த்திக், இது என்னடா? நான் உருவாக்கின  ப்ரொஜெக்ட்ட நீ உன்னோடதுன்னு சொல்லி வேலைய முடிச்ச. அதுல பெரும்பகுதிய  நீயும் உன் கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளையடிச்சு இருக்கீங்க. நீ எனக்கும் உண்மையா இல்ல. மக்களுக்கும் உண்மையா இல்ல.  இது துரோகம் இல்லையா?"

கார்த்திக்: "  சரவா, இது அரசியல். இப்போ யாரு யாரை முந்திக்கிறாங்க  அப்படிங்கறதுதான் முக்கியம். உன் திட்டம் வெற்றியடைஞ்சா போதும் இல்லையா? அதை நீ செஞ்சா என்ன?நான் செஞ்சா என்ன?"

கார்த்திக்கின் பதில் சரவணனை உலுக்கியது.
சரவணன்: "நம்ம நட்புல நீ விஷத்த  கலந்துட்ட ."

 கார்த்திக் ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தான்.

 வாழ்க்கையில்  மக்களுக்காக உழைத்த ஒருவன், தன் நண்பனின் துரோகத்தால் சின்னாபின்னமானான். 

அந்த இரவு, மாமரத்தடியில் அமர்ந்தபடி, தன் நண்பன் துரோகி ஆகிவிட்டதை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான் சரவணன்.

அடுத்த சில நாட்களில், கார்த்திக் தனது திட்டத்தால் பெரிதும் பாராட்டப்பட்டான்.    மக்கள் கார்த்திக்கை தலைமையில் வைத்துக் கொண்டாடினர்.
 
சரவணன் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான் . கார்த்திக்கின் வெற்றி புகைப்படம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இடம் பெற்றது. அவன் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஆக வேண்டும் என்றும் பலர் பேசத் தொடங்கினர். 
  
 அப்போது  சரவணனுக்கு  ஒரு கசப்பான நிஜம் விளங்கியது

"வெற்றிக்கு பலர் தேவைப்படலாம் ; ஆனா துரோகத்துக்கு ஒருவன் போதும்."





No comments:

Post a Comment