மனித வாழ்க்கை என்பது பல்வேறு அனுபவங்களின் தொகுப்பு. இவற்றில் மிக முக்கியமானது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய புரிதல் மற்றும் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் திறன்.
ஆனால், இந்தப் பயணத்தில் நம்மைத் துன்புறுத்தும் பல பயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை அறிவு நிலை, உருவத் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய பயங்கள்தான்.
இந்த பயங்கள் ஏன் எழுகின்றன மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அறிவு நிலை பற்றிய பயம்
"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்கிறது திருக்குறள்.
தன்னிடத்தில் வேறு எதுவும் இல்லையென்றாலும் அறிவுடையவர் எல்லாவற்றையும் உடையவரே ஆவார் என்பது இதன் பொருள்.
எனவே, ஒவ்வொருவரும் தங்கள் அறிவு நிலை மற்றவர்களை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.
ஆனால், இந்த எண்ணம் நம்மை தொடர்ந்து கற்றுக் கொள்ளவும், மேம்படவும் தூண்டினாலும், அதிகப்படியான எதிர்பார்ப்பு நம்மை தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்குத் தெரியாத விஷயங்கள் அதிகமாக இருப்பதாக உணர்ந்து நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
காரணங்கள் :
தவறான ஒப்பீடு: நாம் மற்றவர்கள் பெற்றுள்ள வெற்றியை மட்டுமே பார்க்கிறோம்.அதற்காக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.
அவர்கள் பெற்ற வெற்றியும் உயர்வும் ஒரு நாளில் வந்ததில்லை. பல ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் அவர்கள் செய்த முயற்சி மற்றும் தளராத உழைப்பு அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களின் வெற்றியை மட்டுமே பார்க்கும் நாம் அவர்கள் எத்தனை முறை முயற்சி செய்து எத்தனை தோல்விகளுக்குப் பிறகு இந்த வெற்றியைப் பெற்றார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
சமூக அழுத்தம்: சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வெற்றிக் கதைகள், நம்மை தொடர்ந்து கவலைப்பட வைக்கிறது.
அவர்கள் இதையெல்லாம் சாதித்து விட்டார்கள் , அவர்கள் இந்தப் பதவியை பெற்று விட்டார்கள், அவர்களுக்கு வீடு,வாசல் என்று இத்தனை வசதிகள் வந்து விட்டது. ஆனால் நாம் இன்னும் அதையெல்லாம் அடையவில்லை என்று ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம்.
அவர்களுக்கு இருந்த வாய்ப்பு,வசதி,முயற்சி, உழைப்பு மற்றும் சூழ்நிலை எல்லாம் வெவ்வேறு என்பதை புரிந்து கொண்டால் இப்படி நாம் கவலைப்பட மாட்டோம்.
அது மட்டுமல்லாமல் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காட்டப்படும் அவர்களின் தோற்றங்கள் எல்லாம் உண்மைதானா என்பதையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.
இவர்களில் பெரும்பாலானோர் கௌரவத்திற்காக, மற்றவர்கள் தம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக தங்களை போலியாக, பகட்டாகக் காண்பித்துக் கொள்பவர்கள் என்னும் உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தன்னம்பிக்கை குறைவு: தன்னை நம்பும் திறன் இல்லாததால், மற்றவர்களின் கருத்துகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். .
"ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்" என்கிறார் திருவள்ளுவர்.
அதாவது இந்த உலகமே நமக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்கும்.
எப்படி என்றால் நாம் செய்ய வேண்டிய செயலை செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய இடத்தில் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உலகையே நம்மால் வெற்றி கொள்ள முடியும்.
தீர்வுகள்:
தொடர்ந்து கற்றுக் கொள்ளுதல்: புதிய விஷயங்களை நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் போது, நம்முடைய அறிவு வளர்ச்சி அடையும். ஆழமான அறிவு நம் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளைக் கண்டறிய உதவும்.
தன்னம்பிக்கை அதிகரித்தல்: சிறிய வெற்றிகளை கொண்டாடி, தன்னைப் பாராட்டிக் கொள்ள வேண்டும். நான் அம்பானி ஆகித்தான் சந்தோஷப்படுவேன் என்றெல்லாம் சபதம் எடுத்துக் கொள்ளக் கூடாது.
கணிசமான இயல்பான வெற்றியை, உயர்வை அடையும் போதெல்லாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அப்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஒப்பீட்டை நிறுத்துதல்: மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நம் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.
உருவத் தோற்றம் பற்றிய பயம்
தற்போதைய சமூகத்தில், உருவத் தோற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், பலர் தங்களது உடல் எடை, உயரம், நிறம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படுகின்றனர். இது உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
காரணங்கள்:
ஊடகங்களின் தாக்கம்: ஊடகங்களில் காட்டப்படும் அழகின் தரநிலைகள், நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள விடாமல் செய்கிறது.
வெள்ளையும் சிவப்பும் தான் கொள்ளை அழகென்று விளம்பரங்கள் சொல்வதை நாம் நம்பி விடுகிறோம். அவர்கள் வியாபாரத்தை அதிகரிக்கத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்பதை நாம் உணர்வதில்லை.
உலக அழகி கிளியோபாட்ரா கருப்புதான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!
சமூக அழுத்தம்: நண்பர்கள், குடும்பத்தினர், காதலன் அல்லது காதலி நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம் நம்மை உறங்கவிடாமல் செய்கின்றது.
உண்மையில் குறை இல்லாத மனிதர்கள் என்று உலகில் எவரும் இல்லை.
நீங்கள் அழகானவர் என்று நினைக்கின்ற ஒவ்வொருவரும் தங்களின் ஏதோ ஒரு குறையைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
நிஜத்தில் அழகு என்பது நம் பார்வையில் இருக்கிறது. லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களில் இருக்கிறது.
"அழகானவர்களை எல்லாம் நமக்கு பிடிப்பதில்லை. நமக்கு பிடித்தவர்கள்தான் அழகாகி விடுகிறார்கள் " என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
தன்னம்பிக்கை குறைவு: தன்னைப் பற்றி நேர்மறையான எண்ணம் இல்லாததால், மற்றவர்களின் கருத்துகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்.
தன்னை ஏற்றுக் கொள்ளுதல்: ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து, நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை நீங்கிவிடும்.
ஆரோக்கியம் மற்றும் நோய்வாய்ப்படுவது பற்றிய பயம்
நோய்வாய்ப்படுவது என்பது மனித வாழ்க்கையில் இயல்பான ஒன்று. ஆனால், நோய் பற்றிய பயம் நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.
காரணங்கள்:
அறியாமை: நோய்கள் பற்றிய தவறான தகவல்கள், நம்மை பயமுறுத்துகின்றன. நமக்கு இல்லாத நோய்கள் கூட நமக்கு இருக்கிறதோ என்னும் கற்பனை பயம் இதில் முக்கியமானது.
உதாரணமாக மருத்துவ ஆய்வில் ரத்த அழுத்தம் கூடுதல் என்று வந்தால் உடனடியாக நமக்கு மாரடைப்பு வந்துவிடும் என்று பயப்படுவது.
கட்டுப்பாடு இல்லாத பய உணர்வு: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டது என்று தெரிந்தால் உடனடியாக சிறுநீரகம் பாதித்துவிடும். கால்களில் புண் வந்து அகற்ற வேண்டி வரும் என்று பயந்து போவது.
இவை எல்லா நேரங்களிலும் உண்மை இல்லை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
தீர்வுகள்:
சரியான தகவல்களைப் பெறுதல்: நோய்கள் பற்றிய சரியான தகவல்களை மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும். சரியான தகவல்கள் நம்மை தேவையில்லாத பயங்களில் இருந்து விடுவிக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றின் மூலம் நோயைத் தடுக்கலாம்.
மன அமைதி: யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனஅமைதியைப் பெறலாம். நிம்மதியான மனம் ஆரோக்கிய வாழ்வின் அடித்தளமாகிறது.
அறிவு நிலை, உருவத் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய பயங்கள் நம் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பது உண்மைதான்.
ஆனால், இந்த பயங்களை வென்று நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவை நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.
நம்பிக்கை கொண்ட மனம், எல்லாவற்றையும் சாதிக்கும்!
*************************************[பயத்தினால் ஏற்படும் பதற்றம், மனஅழுத்தம் மனச்சோர்வு ஆகியவற்றுக்கான தீர்வுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...]
**************************************