Showing posts with label #கட்டுரைத் தொடர் #தன்னம்பிக்கை. Show all posts
Showing posts with label #கட்டுரைத் தொடர் #தன்னம்பிக்கை. Show all posts

Tuesday, 10 December 2024

பயத்தை வெல்வது எப்படி?- {பகுதி -4] - மதிபாலன்

னித வாழ்க்கை என்பது பல்வேறு அனுபவங்களின் தொகுப்பு. இவற்றில் மிக முக்கியமானது நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றிய புரிதல் மற்றும் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும் திறன். 

ஆனால், இந்தப் பயணத்தில் நம்மைத் துன்புறுத்தும் பல பயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை அறிவு நிலை, உருவத் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய பயங்கள்தான்.

  இந்த பயங்கள் ஏன் எழுகின்றன மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அறிவு நிலை பற்றிய பயம்

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்கிறது திருக்குறள். 

தன்னிடத்தில் வேறு எதுவும் இல்லையென்றாலும் அறிவுடையவர் எல்லாவற்றையும் உடையவரே ஆவார் என்பது இதன் பொருள்.

எனவே, ஒவ்வொருவரும் தங்கள் அறிவு நிலை மற்றவர்களை விட சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது இயல்பு.

ஆனால், இந்த எண்ணம் நம்மை தொடர்ந்து கற்றுக் கொள்ளவும், மேம்படவும் தூண்டினாலும், அதிகப்படியான எதிர்பார்ப்பு நம்மை தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாக்கும்.

 மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமக்குத் தெரியாத விஷயங்கள் அதிகமாக இருப்பதாக உணர்ந்து நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.

  • காரணங்கள் :

  • தவறான ஒப்பீடு: நாம் மற்றவர்கள் பெற்றுள்ள   வெற்றியை மட்டுமே பார்க்கிறோம்.அதற்காக அவர்கள் நிகழ்த்திய போராட்டங்கள் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை.

  •  அவர்கள் பெற்ற வெற்றியும் உயர்வும் ஒரு நாளில் வந்ததில்லை. பல ஆண்டுகளாக இரவு பகல் பாராமல் அவர்கள் செய்த முயற்சி மற்றும் தளராத உழைப்பு அவர்களை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  •  அவர்களின் வெற்றியை மட்டுமே பார்க்கும் நாம் அவர்கள் எத்தனை முறை முயற்சி செய்து எத்தனை தோல்விகளுக்குப் பிறகு இந்த வெற்றியைப் பெற்றார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

  • சமூக அழுத்தம்: சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் வெற்றிக் கதைகள், நம்மை தொடர்ந்து கவலைப்பட வைக்கிறது.

  •  அவர்கள் இதையெல்லாம் சாதித்து விட்டார்கள் , அவர்கள் இந்தப் பதவியை பெற்று விட்டார்கள், அவர்களுக்கு வீடு,வாசல் என்று இத்தனை வசதிகள் வந்து விட்டது. ஆனால் நாம் இன்னும் அதையெல்லாம் அடையவில்லை என்று ஒப்பிட்டுப் பார்த்து நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம்.

  •  அவர்களுக்கு இருந்த வாய்ப்பு,வசதி,முயற்சி, உழைப்பு மற்றும்  சூழ்நிலை எல்லாம் வெவ்வேறு என்பதை புரிந்து கொண்டால் இப்படி நாம் கவலைப்பட மாட்டோம்.

  •  அது மட்டுமல்லாமல் வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காட்டப்படும் அவர்களின் தோற்றங்கள் எல்லாம் உண்மைதானா என்பதையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.

  •  இவர்களில் பெரும்பாலானோர்   கௌரவத்திற்காக, மற்றவர்கள் தம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக தங்களை போலியாக, பகட்டாகக் காண்பித்துக் கொள்பவர்கள்  என்னும் உண்மையையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

  • தன்னம்பிக்கை குறைவு: தன்னை நம்பும் திறன் இல்லாததால், மற்றவர்களின் கருத்துகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம். .              

  • "ஞாலம்  கருதினும் கைகூடும்                     காலம் கருதி இடத்தாற் செயின்" என்கிறார் திருவள்ளுவர்.

  • அதாவது இந்த உலகமே நமக்கு சொந்தமாக வேண்டும் என்று நினைத்தாலும் அது நடக்கும். 

  • எப்படி என்றால் நாம் செய்ய வேண்டிய செயலை செய்ய வேண்டிய நேரத்தில்  செய்ய வேண்டிய இடத்தில் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது உலகையே நம்மால் வெற்றி கொள்ள முடியும். 

  • தீர்வுகள்:

  • தொடர்ந்து கற்றுக் கொள்ளுதல்: புதிய விஷயங்களை நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் போது, நம்முடைய அறிவு வளர்ச்சி அடையும். ஆழமான அறிவு நம் பிரச்சனைகளுக்கு   உரிய  தீர்வுகளைக் கண்டறிய உதவும்.

  • தன்னம்பிக்கை அதிகரித்தல்: சிறிய வெற்றிகளை கொண்டாடி, தன்னைப் பாராட்டிக் கொள்ள வேண்டும். நான் அம்பானி ஆகித்தான் சந்தோஷப்படுவேன் என்றெல்லாம் சபதம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

  •  கணிசமான  இயல்பான வெற்றியை, உயர்வை அடையும் போதெல்லாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். அப்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

  • ஒப்பீட்டை நிறுத்துதல்: மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல், தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நம் வளர்ச்சியை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

உருவத் தோற்றம் பற்றிய பயம்

தற்போதைய சமூகத்தில், உருவத் தோற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், பலர் தங்களது உடல் எடை, உயரம், நிறம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படுகின்றனர். இது உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

  • காரணங்கள்:

  • ஊடகங்களின் தாக்கம்: ஊடகங்களில் காட்டப்படும் அழகின் தரநிலைகள், நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள விடாமல் செய்கிறது.

  •  வெள்ளையும் சிவப்பும் தான் கொள்ளை அழகென்று விளம்பரங்கள் சொல்வதை நாம் நம்பி விடுகிறோம். அவர்கள் வியாபாரத்தை அதிகரிக்கத்தான்  இப்படிச் செய்கிறார்கள் என்பதை நாம் உணர்வதில்லை.

  •  உலக அழகி கிளியோபாட்ரா  கருப்புதான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

  • சமூக அழுத்தம்: நண்பர்கள், குடும்பத்தினர், காதலன் அல்லது காதலி  நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம் நம்மை உறங்கவிடாமல் செய்கின்றது.

  •  உண்மையில் குறை இல்லாத மனிதர்கள் என்று உலகில் எவரும் இல்லை.

  •  நீங்கள் அழகானவர் என்று நினைக்கின்ற ஒவ்வொருவரும் தங்களின் ஏதோ ஒரு குறையைப் பற்றி நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.

  •  நிஜத்தில் அழகு என்பது நம் பார்வையில் இருக்கிறது. லைலாவின் அழகு மஜ்னுவின் கண்களில் இருக்கிறது. 

  • "அழகானவர்களை எல்லாம் நமக்கு பிடிப்பதில்லை. நமக்கு பிடித்தவர்கள்தான் அழகாகி விடுகிறார்கள் " என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

  • தன்னம்பிக்கை குறைவு: தன்னைப் பற்றி நேர்மறையான எண்ணம் இல்லாததால், மற்றவர்களின் கருத்துகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து விடுகிறோம்.

  • தன்னை ஏற்றுக் கொள்ளுதல்: ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை உணர்ந்து, நம்மை நாமாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நம்மைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை நீங்கிவிடும்.

ஆரோக்கியம் மற்றும் நோய்வாய்ப்படுவது பற்றிய பயம்

நோய்வாய்ப்படுவது என்பது மனித வாழ்க்கையில் இயல்பான ஒன்று. ஆனால், நோய் பற்றிய பயம் நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும்.

  • காரணங்கள்:

  • அறியாமை: நோய்கள் பற்றிய தவறான தகவல்கள், நம்மை பயமுறுத்துகின்றன. நமக்கு இல்லாத நோய்கள் கூட நமக்கு இருக்கிறதோ என்னும் கற்பனை பயம் இதில் முக்கியமானது.

  •  உதாரணமாக மருத்துவ ஆய்வில் ரத்த அழுத்தம் கூடுதல் என்று வந்தால் உடனடியாக நமக்கு மாரடைப்பு வந்துவிடும்  என்று பயப்படுவது.

  • கட்டுப்பாடு இல்லாத பய உணர்வு:  ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டது என்று தெரிந்தால்  உடனடியாக சிறுநீரகம் பாதித்துவிடும். கால்களில் புண் வந்து அகற்ற வேண்டி வரும்  என்று பயந்து போவது. 

  •  இவை எல்லா நேரங்களிலும் உண்மை இல்லை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

  • தீர்வுகள்:

  • சரியான தகவல்களைப் பெறுதல்: நோய்கள் பற்றிய சரியான தகவல்களை  மருத்துவரிடம் இருந்து பெற வேண்டும். சரியான தகவல்கள் நம்மை தேவையில்லாத பயங்களில் இருந்து விடுவிக்கும்.

  • ஆரோக்கியமான வாழ்க்கை முறை: சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றின் மூலம் நோயைத் தடுக்கலாம்.

  • மன அமைதி: யோகா, தியானம் போன்றவற்றின் மூலம் மனஅமைதியைப் பெறலாம். நிம்மதியான மனம் ஆரோக்கிய வாழ்வின் அடித்தளமாகிறது.

  அறிவு நிலை, உருவத் தோற்றம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய பயங்கள் நம் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பது உண்மைதான்.

ஆனால், இந்த பயங்களை வென்று நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.  

 ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவை நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

நம்பிக்கை கொண்ட மனம், எல்லாவற்றையும் சாதிக்கும்!

*************************************[பயத்தினால் ஏற்படும் பதற்றம், மனஅழுத்தம் மனச்சோர்வு ஆகியவற்றுக்கான தீர்வுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்...]

**************************************

Monday, 9 December 2024

பயத்தை வெல்வது எப்படி? [பகுதி -3] - மதிபாலன்

காதல் வீரம் என்னும் இரண்டையும் இரு கண்களாக பார்ப்பது தமிழ் மரபு. இதில் வீரத்தின் அடிப்படை பயம் இல்லாமல் இருப்பது.

 கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில்,

 அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...!

என்று எழுதியிருப்பார்.

 அதில் தேசத்தை காப்பதற்கும் மானத்தை காப்பதற்கும் அச்சத்தை விட்டுப் போராடு என்று சொல்லி இருப்பார்.

 அஞ்சாமல் வாழ்வது திராவிடர் உரிமை மட்டுமல்ல. மனித குலத்தின் உரிமை என்பதை மறக்கக் கூடாது.
 
அச்சமில்லை!அச்சமில்லை!
பாரதியார் ஒரு பாடலில் எதற்கெல்லாம் அச்சமில்லை என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்.

 அந்தப் பாடல் இப்படித் தொடங்கும் .

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
 உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...

  இதில், வானம் இடிந்து தலை மேல் விழுந்தாலும், நண்பர்கள் விஷத்தை கொண்டு வந்து நம் வாயிலே ஊற்றினாலும், மிகவும் அழகு வாய்ந்த இளம் பெண்கள் நம் அருகில் வந்து மயக்க முயற்சித்தாலும் , இந்த பூமியில் உள்ள அனைவரும்   ஒன்றாய் சேர்ந்து வந்து நம்மை எதிர்த்தாலும் நமக்கு அச்சமில்லை என்று கூறி இருப்பார்.

 வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அச்சம் இல்லாமல் இரு என்னும் உத்வேகம் இப்பாடலில் கிடைக்கும்.

பயமின்மை நல்லதா?
எதைக்கண்டும் பயப்படாமலேயே இருப்பது நல்லதா? அது அறிவார்ந்த செயலா? என்று கேட்டால் அதற்கு திருவள்ளுவர் பதில் சொல்கிறார்.

 அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்

 என்கிறார்.

இதன் பொருளைப் பார்ப்போம்.

 அறிவுடையவர்கள் ,பயப்பட வேண்டிய விஷயத்திற்கு பயப்படுவார்கள். அப்படி பயப்பட வேண்டிய விஷயத்திற்கும் பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்கிறார்.

 அவரே எதற்கு பயப்பட வேண்டும் என்றால், தீய செயல்களை செய்வதற்கு பயப்பட வேண்டும். அதேபோல   பிறரிடம் யாசகம் கேட்பதற்கு பயப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

 ஏன் இந்த பயம்?

தீய செயல்களை செய்யும் போது நமது மனசாட்சி உறுத்தும். அப்போது பயம் ஏற்படும்.

 அப்படி ஒரு உறுத்தலே இல்லாமல் அல்லது அந்த உறுத்தலுக்கும் பயப்படாமல்    ஒரு தீமையை செய்து விட்டால்  அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

 அதனால் எதிரிகள் உருவாகலாம். அவர்கள் தாக்க வரும்போது பயம் வரும்.

 அதேபோல பிறரிடம் கையேந்தும் போது  தன் நிலையை எண்ணி பயம் வரும். சரி. ஏன் அப்படி ஒரு நிலை ஏற்படுகிறது?

 தன்னிடம் வாழ்க்கை நடத்த பொருள் இல்லை வசதியில்லை. தான் அதை சம்பாதிக்கவும் முடியாது என்னும் நிலை வரும் போது யாசகம் கேட்பது நடக்கிறது. அப்படி யாசகம் கேட்பவர்கள் கூனிக் குறுகி அச்சப்படுவார்கள்.

   இந்த பயங்களை எப்படிப் போக்குவது?

வாழ்வில் நேர்மையான வழிகளை கடைப்பிடித்து  நன்மையை செய்யும் ஒருவனுக்கு பயம் இருக்காது. தைரியம் மேலோங்கி இருக்கும்.

 எனவே நல்லதை நினைத்து நல்லதையே செய்வது அச்சம் இல்லாமல் வாழும் ஒரு வழியாகும்.

தன்னுடைய உழைப்பில் வாழும் ஒருவன் யாசகம் கேட்கும் நிலை ஏற்படாது. அவன் சமூகத்தில் அச்சம் இல்லாமல் வாழலாம்!

சரி. நல்லவர்கள் மற்றும் உழைப்பவர்கள் அனைவரும் பயமின்றி வாழ முடியுமா?

வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் வரும் இன்னும் சில பயங்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

 
 

Sunday, 8 December 2024

பயத்தை வெல்வது எப்படி?- [பகுதி -1] - மதிபாலன்

நாம் அனைவரும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு பயப்படுவது இயல்புதான். 

இந்த பயம் நம்மை நிறைய விஷயங்களை செய்யவிடாமல்  தடுத்துவிடும். ஆனால், பயத்தை வெல்ல முடியும். எப்படி?

பயம் என்றால் என்ன?
பயம் என்பது நம் உடலின் ஒரு இயற்கையான எதிர்வினை.

 நமக்கு ஆபத்து இருக்கும்போது நம்மை காப்பாற்ற இந்த பயம் உதவுகிறது. ஆனால், எல்லா பயமும் நியாயமானதாக இருக்காது. சில அர்த்தமற்ற பயங்கள் நம்மை நிறைய கஷ்டப்படுத்தும்.

பயங்களின் வகைகள்

 * நியாயமான பயம்: உதாரணமாக, ஒரு உயரமான மரத்தில் ஏறுவது. பைக்,கார் ஓட்டப் பழகுவது போன்றவை. இவை ஆபத்தானது என்பதால் நமக்கு பயமாக இருப்பது இயல்பு.

 * அறியா பயம்: உதாரணமாக, பூச்சிகள் என்றால் பலருக்கு பயமாக இருக்கும். உதாரணமாக தேள், பூரான் போன்றவற்றை பார்த்து ஏற்படும் பயம்.ஆனால், எல்லா பூச்சிகளும் நம்மை கடிக்காது. என்றாலும் பயமாக இருக்கும். உதாரணமாக கரப்பான் பூச்சியை பார்த்து பயந்து ஓடுவோம்.

 * சமூக பயம்: கூட்டத்தில் பேசுவது, புதிய நண்பர்களை உருவாக்குவது போன்றவை. இதுபோன்ற இடங்களில் நம்மைப் பற்றிய மற்றவர்களின்  மதிப்பீடு  எப்படி இருக்கும் என்று பயம் தோன்றும்.

 * தனிமை பயம்: தனியாக இருப்பது, புதிய இடங்களுக்குச் செல்வது போன்றவை.இவற்றில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் போது நமக்கு உதவுவதற்கு ஆள் இல்லையே என்கிற கவலை பயத்தைக் கொடுக்கும்.

பயத்திற்கு காரணங்கள்

 * கடந்த கால அனுபவங்கள்: ஏற்கனவே நேர்ந்த கெட்ட அனுபவங்கள் காரணமாக பயம் ஏற்படலாம். ஏற்கனவே சிலவற்றை செய்யப்போய் அவற்றின் எதிர்மறை விளைவுகள்பயத்தை உருவாக்கலாம்.

 * தவறான நம்பிக்கைகள்: நம்மால் இதை செய்ய முடியாது என்று நாம் நினைத்துக்கொள்வது மிக முக்கியமான பயமாகும். 

முயற்சி செய்தால் அது சுலபமாக கூட இருக்கும். ஆனால் பயத்தின் காரணமாக செய்யாமல் இருப்போம்.

 * பிறரின் எதிர்மறை கருத்துக்கள்: நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மைப் பற்றி சொல்லும் எதிர்மறை கருத்துக்கள் நம் செயல்பாட்டை பாதிக்கும். 

இதை செய்யப் போகிறாயா? உன்னால் முடியுமா? என்று அவர்கள் ஒரு கேள்வி கேட்டாலே நம்பிக்கை போய்விடும். பிறகு அந்தச் செயலை செய்ய மனம் துணியாது !
 
பயத்தை வெல்வது எப்படி?

 * பயத்தை அடையாளம் காணுங்கள்: 
உங்களுக்கு என்ன பயமாக இருக்கிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். எது பயமுறுத்துகிறது என்பது தெரிந்து விட்டால் அதை சமாளிப்பதும் எளிதாகிவிடும்.

 * பயத்தின் காரணத்தை யோசியுங்கள் : உங்களுக்கு ஏன் இந்த பயம் ஏற்படுகிறது என்று யோசித்துப் பாருங்கள். உதாரணமாக கிணற்றைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. காரணம் உங்களுக்கு நீச்சல் தெரியாது. எனவே உங்களுக்குத் தெரியாதது எல்லாம் ஏதோ ஒரு வகையில் பயத்தை விதைக்கும்.

 * பயத்தை எதிர்கொள்ளுங்கள்: உங்களுக்கு பயமாக இருக்கும் விஷயத்தை சிறிது சிறிதாக எதிர்கொள்ளுங்கள். அதை தைரியமாக செய்ய ஆரம்பியுங்கள். நீங்கள் நினைத்த அளவுக்கு அது மோசம் இல்லை என்று  தெரியவரும்.

 * நேர்மறையாக சிந்தியுங்கள்: உங்களால் முடியும் என்று சொல்லிக் கொள்ளுங்கள். 

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப - எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்" என்கிறார் திருவள்ளுவர். 

மனதில் உறுதியாக,ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ,அது நிச்சயம் நடந்தேறும் என்பது அதன் பொருள்.

 நம்பிக்கை வந்துவிட்டால்  எவரெஸ்ட்டில் கூட ஏறிவிடலாம்.
 
 * உதவி கேளுங்கள்: 
உங்களால் தனியாக எதிர்கொள்ள முடியாத விஷயங்களில், உங்களுக்கு நம்பிக்கை உள்ள நண்பர்கள் அல்லது பெரியவர்களிடம் உதவி கேளுங்கள். அவர்களின் ஆலோசனைப்படி செயல்படும் போது தைரியம் வரும்.

 * தியானம் செய்யுங்கள்: குழப்பமான மன நிலையில் எதையும் செய்வது கடினமாக இருக்கும். 

மனதில் தெளிவிருந்தால் பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்ள முடியும். பிரச்சனை புரிந்தால் தீர்வும் எளிதாகும்.

 தியானம் செய்வது மனதை அமைதிப்படுத்தி பயத்தை குறைக்க உதவும்.

 * உடற்பயிற்சி செய்யுங்கள்: உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைத்து நேர்மறையான எண்ணங்களைத் தரும்.

 நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம், பலமாக இருக்கிறோம் என்பதை உடற்பயிற்சி உறுதி செய்யும். எதையும் செய்ய முடியும் என்னும் நம்பிக்கை வரும்.

 * புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்: புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது நம்மை நம்பிக்கையுடன் இருக்க வைக்கும். 

எப்போதும் புதிய ஒன்றை  கற்றுக் கொள்ளும் போது  நாம் உயிர்ப்புடன் இருப்போம். மனம் நிறைவாக இருக்கும்.

நமது பல பயங்கள் அறியாமையால் ஏற்படுவதுதான். ஒரு விஷயத்தை நாம் நன்கு தெரிந்து கொண்டு விட்டால் அதைப் பற்றிய பயம் போய்விடும்.  

 * நன்றியுடன் இருங்கள்: உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள்.

கடவுள் நம்பிக்கை இருந்தால் அவருக்கு நன்றி சொல்லுங்கள் அல்லது இயற்கைக்கு நன்றி செலுத்துங்கள்.. 

"உனக்கும் கீழே உள்ளவர் கோடி... 
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!" - என்ற கண்ணதாசன் பாடலை எண்ணிக் கொள்ளுங்கள்.

 * சிரித்து மகிழுங்கள்: நகைச்சுவை உணர்வு பயத்தை குறைக்க உதவும்.
 
"இடுக்கண் வருங்கால் நகுக" என்கிறார் திருவள்ளுவர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் துன்பம் வரும்போதும் எளிதாக எடுத்துக்கொள்வார்கள்.

 பயத்தை வெல்ல உதவும் சில பயிற்சிகள் 

 * டைரி எழுதுதல்:  உங்கள் பயம் பற்றி டைரியில்  எழுதுங்கள். எழுத எழுத பாரம்  குறைவது தெரியும்.  இது உங்கள் மனதைத் தெளிவுபடுத்த உதவும்.

 * மன வரைபடம்: உங்கள் பயத்தை ஒரு மரம் போல வரைந்து அதன் கிளைகளில் உங்கள் பயத்திற்கு காரணமான விஷயங்களை எழுதுங்கள்.

 இப்போது பயத்தைப் பற்றிய தெளிவான விவரம் உங்களுக்கு தெரிய வரும். பிரச்சனையின் பரிமாணத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.

 * ஆழமான சுவாசம்: ஆழமாக சுவாசிப்பது அல்லது மூச்சுப் பயிற்சி செய்வது, மனதை அமைதிப்படுத்த உதவும். 
நீங்கள் மூச்சை உள்ளிழுத்து  நிறுத்தும் போது, எண்ணங்களின் தீவிரம் குறையும்.  பயமான எண்ணங்களின் தாக்கமும் அதிகம் இருக்காது. 

 * தொடர்பு கொள்ளுங்கள்: உங்கள் பயம் பற்றி நெருங்கிய    நண்பர் அல்லது குடும்பத்தினரிடம் பேசுங்கள்.

 அவர்களிடம் உங்கள் பயத்தை பகிர்ந்து கொள்ளும் போது பதற்றம் குறைய வாய்ப்பு ஏற்படும். அவர்கள் உதவிக்கு வரும் வாய்ப்பு இருந்தால் பயம் மேலும் குறையும்.

 எனவே நண்பர்களே!
 பயம் என்பது இயல்பானது. ஆனால், அது நம் வாழ்க்கையை கட்டுப்படுத்த அனுமதிக்கக் கூடாது. சிறிது முயற்சி இருந்தால் நாம் எந்தவித  பயத்தையும் வெல்ல முடியும்.

நினைவில் கொள்ளுங்கள்:   பலருக்கும் இதே போன்ற பயங்கள் இருக்கும். பயத்தை வெல்ல நீங்கள் முயற்சி செய்யும்போது  பலரும் உங்கள் உதவிக்கு வருவார்கள்.

 ஆம்.  நம்புங்கள்!
பயத்தை வெல்ல
உங்களால் முடியும்!
 

Saturday, 7 December 2024

பயத்தை வெல்வது எப்படி?-[பகுதி-2]- மதிபாலன்

 பயத்தை எதிர்கொள்வதற்கு பயத்தால் ஏற்படும் உடலியல் மற்றும் நரம்பியல்  பற்றிய ஆழமான புரிதல் அவசியம், அதற்கான அறிவியல் பின்னணியை இப்போது பார்க்கலாம்.

* தாக்கு அல்லது ஓடு (fight or flight ): இந்த அணுகுமுறை நம் முன்னோர்களை உடனடி ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது. மனிதன் வேட்டையாடும் காலத்தில் இதுதான் முக்கிய பாதுகாப்பு அம்சம்.

இதுதான் எதிரிகளிடமிருந்து அல்லது விலங்குகளிடம் இருந்து  முடிவுகளை எடுக்க உதவியாக இருந்தது.

 உதாரணமாக அந்தக் காலத்தில் ஈட்டியோடு ஒருவன் வேட்டைக்கு கிளம்புகிறான். ஒரு மான் கண்ணில் தென்படுகிறது. அதை துரத்திக் கொண்டு ஓடுகிறான். அப்போது அச்சப்படுவதில்லை. இறை அகப்படும் என்று நம்புகிறான்.

 அப்படி துரத்தி ஓடும்போது, ஒரு புலி எதிரே வருகிறது. இப்போது அவன் நின்று நிதானிக்கிறான். மானைத் துரத்தியது போல புலியைத் துரத்த மாட்டான்.

 முதலில் தாக்கு என்ற முடிவை எடுத்தவன் இப்போது ஓடு என்னும் முடிவை எடுக்கிறான்.

 இதையே திருக்குறள் இப்படி சொல்கிறது. 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.

அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.

 இது வேட்டைக்கும் பொருந்தும். போருக்கும் பொருந்தும். நம் பிரச்சனைகளுக்கும் பொருந்தும்.

* உடலியல் மாற்றங்கள்: நாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, நம் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.

 இதயத் துடிப்பு அதிகமாகிறது.  சுவாசம் வேகம் எடுக்கிறது. வியர்வை அதிகமாக சுரக்கிறது. தசைகள் இறுக்கமடைகின்றன.  

இந்த மாற்றங்கள் நாம்,  ஆபத்தை எதிர்கொள்ளவோ அல்லது ஓடிவிடவோ நம் உடலை தயார்படுத்துகின்றன.

 * நாள்தோறும் ஏற்படும் மன அழுத்தங்கள்: இன்றைய உலகில், மேடைப்பேச்சு, போட்டி த் தேர்வுகள்,நேர்காணல், உறவுச் சிக்கல்கள்  அல்லது பணப் பிரச்சனைகள்  போன்றவை மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன.

   இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் குறைவாக இருந்தாலும், அடிக்கடி இவற்றை எதிர்கொள்ளும் சூழல் நிலவுவதால்  பிரச்சனை சிக்கலாகிறது.

 * தொடர் பாதிப்பு: தொடர்ச்சியான மன அழுத்தத்தால் "தாக்கு அல்லது ஓடு" என்னும் செயல்முறை அடிக்கடி நிகழ்கிறது. 
 
இது பலகாலம் நீடிக்குமென்றால்,
ஆழ்ந்த மன அழுத்தக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மூளைக்குள் என்னென்ன நடக்கிறது என்று பார்க்கலாமா!

மூளை செயல்பாடுகள்
 அமிக்டாலா : இது மூளையின் உணர்வு பகுதியின் (temporal lobe) நடுவில் உள்ள ஒரு சிறிய, பாதாம் வடிவ கட்டமைப்பு. 

அமிக்டாலா என்றால் கிரேக்க மொழியில் பாதாம் என்றுதான் அர்த்தம்.இதை உணர்ச்சி கட்டுப்பாட்டு மையம் என்று சொல்லலாம்.

இது  பயம், கோபம்  உள்ளிட்ட பல எதிர்மறை உணர்ச்சிகளை செயலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 * அச்சுறுத்தலை அறிதல்: அமிக்டாலா ஒரு   அச்சுறுத்தலைக் கண்டறிந்தால், அது "தாக்கு அல்லது ஓடு" என்னும் முடிவை எடுக்க மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல்களை அனுப்புகிறது. பிறகு மூளை அனுப்பும் செய்திகளின்படி நாம் செயல்படுகிறோம்.

* பகுத்தறிவு சிந்தனை:
மூளையின் உணர்வுப் பகுதிதான், முடிவெடுத்தல், திட்டமிடல் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை போன்ற உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.

 மூளையின் இந்தப் பகுதி அச்சுறுத்தல்களை மிகவும் தர்க்கரீதியாகவும் அமைதியாகவும் மதிப்பிட வைக்கிறது.

 இது பயத்தின் போது நம் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் சரிசெய்யவும் உதவுகிறது.

 * நினைவகம் மற்றும் சூழல் உணர்தல்:  நமது மூளையின்  ஹிப்போகேம்பஸ் பகுதி, ஞாபகம் வைத்தல் மற்றும் அவற்றை அவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல்  ஆகிய செயல்பாடுகளை நிகழ்த்துகிறது.

மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி ஏற்கனவே நடந்த  பயங்கரமான நிகழ்வுகளின் நினைவுகளை சேமிக்க முடியும்.

 இது பழைய அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இப்போதைய
 பயங்கரமான  சூழ்நிலையை புரிந்துகொள்ள உதவுகிறது.
 எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.

 உதாரணமாக ஒரு சிறு குழந்தை எரிந்து கொண்டிருக்கும் விளக்கு சுடரை நோக்கி செல்கிறது. அதற்கு அது சுடும் என்று தெரியாது. ஆர்வம் காரணமாக அந்த சுடரை தொட்டுப் பார்க்கிறது. சுட்டதும் கையை உடனடியாக விலக்கிக் கொள்கிறது.

 இந்த அனுபவம் நினைவில் பதிந்து விடுகிறது. மீண்டும் சில நாள் கழித்து வேறு இடத்தில்  அதே மாதிரி விளக்கைப் பார்த்தாலும் அக்குழந்தை அதைத் தொடாது. 

இந்த எச்சரிக்கை உணர்வை ஹிப்போகேம்பஸ் கொடுக்கிறது.

 பயத்திற்கான  உடல் அறிகுறிகள்

 * அட்ரினலின் ஓட்டம்: பயம் ஏற்படும்போது  அட்ரீனல் சுரப்பி அதிகமாக வேலை செய்கிறது.   
இது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்கிறது.

 வியர்வை: உடல் சூடாவதைக்  குறைக்க அதிக வியர்வையை உற்பத்தி செய்கிறது, பயத்தின் போது   உள்ளங்கைகள் மற்றும் உள்ளங் கால்கள் அதிகமாக வியர்க்கும்.

 "நான் அந்த டர்னிங்ல  திருப்பறப்போ, திடீர்னு ஒரு லாரிக்காரன் எதிரில் வந்துட்டான். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. குப்புன்னு வேர்த்துப் போச்சு ".

இந்த மாதிரி சூழ்நிலைகளை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா!


 * தசை இறுக்கம்: பிரச்சினைகளை சமாளிக்க  வேகமாக செயல்பட வேண்டி வரலாம். அதற்கு ஏதுவாக தசைகள் இறுக்கமடைகின்றன.
 
ஒரு வெறிநாய் உங்களை துரத்துகிறது. அப்போது எப்படி ஓடுவீர்கள்? நீங்கள் வழியைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள். மேடு பள்ளம், கல் முள் எதையும் கண்டு கொள்ள மாட்டீர்கள். தப்பித்தால் போதும் என்று ஓட்டம் எடுப்பீர்கள்.

 உங்கள் தசைகள் இருக்கமடைந்தால்தான் இத்தனையும்  நடக்கும்.
 
நீண்ட கால விளைவுகள்

 * நாள்பட்ட பதற்றம்: எப்போதும் பதட்டத்திலேயே அல்லது பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தால்   மனஅழுத்தம்  ஒரு தொடர்கதையாகிவிடும். மற்ற மனநலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். 

இதை நினைத்துப் பாருங்கள். உங்கள் அலுவலகம் வெகு தூரத்தில் இருக்கிறது.

 நீங்கள் நடந்து சென்று ரயிலை பிடித்து  இன்னொரு ரயில் நிலையத்தில் இறங்கி, வேறொரு பஸ் பிடித்து 
 நின்று கொண்டே பயணம் செய்து மீண்டும் பத்து நிமிடம் நடந்து தான் அலுவலகத்தை அடைய வேண்டும். 

நீங்கள் அடிக்கடி தாமதமாகவும் செல்ல முடியாது. உங்கள் மேலதிகாரி கண்டிப்பானவர். தாமதமானால் திட்டு வாங்க வேண்டும் அல்லது சம்பளம் பிடிக்கப்படும்.

 இப்படிப்பட்ட சூழ்நிலைகளை தவிர்க்க முடியாவிட்டால் பிரச்சனைதானே!

 * உடல் ஆரோக்கியம்: நாள்பட்ட மனஅழுத்தம், இதய நோய், செரிமான பிரச்சினைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி செயலிழப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.

 பயம் பதற்றத்தை குறைப்பது எப்படி?
 பிரச்சனைகள் எங்கு வரும் எப்படி வரும் என்று முன்கூட்டியே தெரிந்தால் அதை சமாளிக்கும் வழிமுறைகளை முன்னதாகவே யோசித்து வைத்து விடுங்கள். அப்போது பதற்றம் ஏற்படாது.

 ஒரு பிரச்சனைக்கான தீர்வை முடிவு செய்து வைத்திருந்தாலும் செயல்படுத்தும் போது அது முடியாமல் போகலாம். அப்படியெனில் அதற்கான மாற்றுத்திட்டத்தையும் முன்பே யோசியுங்கள்.

 திடீர் பிரச்சனைகளால் வரும் பயத்தை சமாளிக்க வேண்டும் என்றால் உங்கள் உடலையும் மனதையும் அதற்கு தயார்படுத்த வேண்டும்.

*சுவாசப் பயிற்சிகள்:
 நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த ஆழமான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 

 மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, முடிந்தவரை வெளிவிடாமல்  நிறுத்தி வைத்து,வாயின் வழியாக மெதுவாக வெளியே விடுங்கள்.
  
மேலோட்டமாக சுவாசிப்பதற்கு பதிலாக உங்கள் உங்கள் அடிவயிறு சுருங்கி விரியும்படி  ஆழமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள். 

இது இதயத் துடிப்பை குறைத்து பதற்றத்தை குறைக்க உதவும்.

  தசை தளர்வு பயிற்சிகள்

 * செய்முறை: உங்கள் கால் விரல்களிலிருந்து தொடங்கி தலையை நோக்கி உங்கள் உடலின் வெவ்வேறு தசைகளை படிப்படியாக இறுக்கி தளர்த்தவும்.

இது உடல் பதற்றத்தை வெளியிடவும் அமைதியான உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.

 உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் : உடற்பயிற்சிகள் நம்மை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்துக் கொள்ளும். திடீர் பதற்றத்தை, பயத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு நம்மை தயார் செய்யும்.

 உடற்பயிற்சிகளை செய்ய இயலாதவர்கள், யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தகுந்த யோகப் பயிற்சி ஆசிரியரின் மூலம் இதை செய்யலாம்.  

காட்சிப்படுத்தல்

 * நேர்மறையான கற்பனை: நீங்கள் அமைதியான, பாதுகாப்பான சூழலில் இருப்பதாக   கற்பனை செய்யுங்கள்.

 எல்லாம் நல்ல விதமாக நடந்தால் எப்படி இருக்குமோ அந்த சூழ்நிலையை மனதில் கொண்டு வாருங்கள்.

  இந்த கற்பனை உடனடி பதற்றத்தை குறைப்பதோடு, அமைதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

 * பயத்தை வெற்றிகரமாக சமாளிக்கும் கற்பனை. 
 எந்தப் பிரச்சனையையும் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு மனம் முதலில் தயாராக வேண்டும்.

 பிரச்சனைகளைத் தீர்க்க மனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முன்னமே தயார் செய்து கொள்கிறது. அதன் ஒவ்வொரு படிநிலைகளையும் கற்பனை செய்கிறது. பிறகு தான் நாம் செயல்பட ஆரம்பிக்கிறோம்.

 எனவே பயத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை மனதுக்குள் உருவாக்கி விட்டால் நிஜத்தில் அதை    எதிர்கொள்ளும்போது பதற்றத்தை குறைக்க உதவும்.

 இந்த வழிமுறைகளை  பின்பற்றினால், நமது பெரும்பாலான பயங்களை எதிர்கொள்ளும் வலிமை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!