Monday, 21 October 2024

உங்கள் ஆழ்மனத்தின் சக்தி:-புத்தக சுருக்கம்


ஜோசப் மர்ஃபியின் "The Power of Your Subconscious Mind" என்னும் நூல், சுயஉதவி மற்றும் தனிநபர் வளர்ச்சி துறையில் முக்கியமான படைப்பு ஆகும். 

நம் ஆழ்மனம் நம் வாழ்க்கையின் மேல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், ஆழ்மனத்தின் சக்தியை புரிந்து கொண்டு, அதை சரியாக பயன்படுத்தினால், நம் இலக்குகளை அடையலாம், சவால்களை சமாளிக்கலாம், மேலும் வாழ்க்கையில் நிம்மதியும் நிறைவையும் அனுபவிக்கலாம் என்பதையும் கூறுகிறார்.

ஆழ்மனத்தில் நம் நம்பிக்கைகள், நினைவுகள், உணர்வுகள் அனைத்தும் பதிந்திருக்கின்றன; இவை நம் சிந்தனைகள், உணர்வுகள், செயல்களையும் வடிவமைக்கின்றன. 

சிறு வயதில் உருவாகும் ஆழ்மன நம்பிக்கைகள் நம்மில் வரம்புகளை ஏற்படுத்தி, எதிர்மறையான பழக்கவழக்கங்களை உருவாக்குகின்றன. ஆழ்மனத்தை மறுபரிசீலனை செய்யும் நடைமுறைகள் மற்றும் பயிற்சிகளை இந்த நூல் வழங்குகிறது. அதன் மூலம், நேர்மறை உறுதிமொழிகள் மற்றும் காட்சி உருவாக்கல் வழியாக ஆழ்மனத்தை மாற்றிக்கொள்ளலாம்.

நிறைய உதாரணங்கள் மற்றும் அனுபவக் கதைகள் மூலமாக, ஆழ்மனம் எவ்வாறு நம் விருப்பங்களை நிஜமாக்கி விடுகின்றது என்பதை மர்ஃபி விளக்குகிறார். நம் வெளிப்புற சிந்தனைகளும் ஆழ்மன நம்பிக்கைகளும் ஒரே பாதையில் செல்வது முக்கியம் எனவும் கூறுகிறார். ஆழ்மனத்தை பயன்படுத்துவதற்கு பிரார்த்தனை, தியானம் மற்றும் காட்சி உருவாக்கலின் சக்தியையும் விளக்குகிறார்.

முடிவில், "The Power of Your Subconscious Mind" நம் ஆழ்மனத்தின் அளவில்லாத ஆற்றலை வெளிக்கொணர, தற்காலத்தில் உருமாற்றம் செய்ய ஒரு முழுமையான வழிகாட்டியாகும். ஆழ்மனத்தை புரிந்து கொண்டு அதன் கோட்பாடுகளை கடைப்பிடிக்கும்போது, நம் வாழ்க்கையை மாற்றவும் கனவுகளை அடையவும் முடியும்.

என்றும் தொடரும் பந்தம்! -மதிபாலன்

ரோஜாக்கள் அழகா... 
உன் 
வெட்கம் அழகா?
குயிலோசை இனிதா...
உன் 
கொஞ்சல் இனிதா?

பனிச்சாரல் குளிரா...
உன் 
பார்வை குளிரா?
மின்னல்கள் எல்லாம் 
உன் 
புன்னகை ஒளியா?

பூந்தோட்டம் நடுவில் 
நீ போவது சரியா...
பூக்கள் எல்லாம் மயங்கி
வீழ்வது சரியா?

சங்கீதம் போலே நீ
சிரிக்கின்றாயே...
ஒரு 
சந்தோஷத் தீயாய் எனை
எரிக்கின்றாயே!

உள்ளுக்குள் இன்பம் வளர்க்கின்றாயே... 
என் 
உற்சாகத் தென்றல் 
நீயே நீயே!

கனவுக்குள் வந்து அணைக்கின்றாயே... 
எனை 
கைதியாய் மாற்றும் 
திருடி நீயே!

கேளாத வரமாய் 
வந்தாய் நீயே...
காதல்-
கேள்விக்கு பதிலை 
தந்தாய் நீயே!

முன்னூறு ஜென்ம 
சொந்தம் நீயே...
என்றும் 
முடியாத பந்தம் 
நீயே நீயே!

Sunday, 20 October 2024

சும்மா இருப்பது சுகம்.- மதிபாலன்.


ஒரு படத்துல செந்தில்  கவுண்டமணிகிட்ட ஒரு நாள் முழுக்க சும்மா இருக்க முடியுமா அப்படின்னு கேப்பாரு. அது என்ன பெரிய விஷயமா அப்படின்னு சவால் விட்டுட்டு  கவுண்டமணி முயற்சி பண்ணுவார். அதனால வரக்கூடிய பிரச்சனைகளை நகைச்சுவையா சொல்லி இருப்பாங்க.

 ஆனா நிஜமாகவே சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டமா அப்படின்னா, ஆமா ரொம்ப கஷ்டம்.

 இந்த மனசு இருக்கே அதுக்கு டிபன் காபி சாப்பாடு எல்லாம் எண்ணங்கள் தான். அதனால எதையும் நினைக்காம ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க முடியாது.

 மேனேஜர்  திட்டினது, பெஸ்டி  பாராட்டினது, நேத்து பார்த்தது, நாளைக்கு எங்க போறது, கடன் வாங்கினது, கஷ்டப்பட்டது, சிரிச்சது, கண்ணீர் விட்டது, மெடல் வாங்கினது, மிஸ் ஆனது  இப்படி ஏதாவது ஒன்னு ஞாபகம் வந்துகிட்டே தான் இருக்கும்.

ஆனால் இந்த ஞானிகள் துறவிகள் எல்லாம்  சும்மா இருத்தல் சுகம் அப்படின்னு சொல்றாங்க.

 நமக்கு தேவைகள் எதுவுமே இல்லன்னா சும்மா இருக்கலாம். உணவு,உடை இருப்பிடம் இப்படி எல்லாம் தேவைப்படுற நாம் எப்படி சும்மா இருக்க முடியும். இதையெல்லாம் நாமளே பூர்த்தி செய்யனும்னா உழைக்கணும். உழைப்பு என்பது செயல். செயல் என்பது எண்ணத்தால் உருவாவது. எனவே செயல் செய்கிறவன் சும்மா இருக்க முடியாது. மனசுல எதையும் நினைக்காம இருக்க முடியாது.
 அப்படின்னா யாரு சும்மா இருக்க முடியும். தன்னைப் பற்றி எந்த கவலையும் இல்லாதவங்கதான் சும்மா இருக்க முடியும். 

 தனக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை மத்தவங்க பாத்துக்குவாங்க அப்படின்னா சும்மா இருக்கலாம். இல்லன்னா தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை  அப்படின்னு சொல்றவங்க சும்மா இருக்கலாம். இதுதான் எதார்த்தம்.

மனசுல எதையும் நினைக்காமல், செயல் எதுவும் செய்யாமல் அசைவற்று இருப்பது பிரம்ம நிலை. அதுதான் கடவுள் தன்மை அப்படின்னும் ஞானிகள் சொல்றாங்க. அது உண்மைதான். அந்தப் பரிபூரண நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அதுக்கு நாம கோடியில் ஒருத்தரா இருக்கணும்.

 போங்க சார்... சும்மா எதையாவது சொல்லாதீங்க, அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.

 நான் சும்மா எதையும் சொல்லலிங்க. சும்மா இருந்து சுகத்தை கண்டவர்கள் சொன்னதை சொன்னேன். ஆமாம் இந்த திருமூலர், அருணகிரியார், வள்ளலார் எல்லாரும் சும்மாவா சொல்லி இருப்பாங்க!

வளையை தேடினால்... வலை! - மதிபாலன்


முன்னொரு காலத்தில் ஒரு கெட்டிக்கார பூனை இருந்தது. அது குறி வைத்து விட்டால் எந்த எலியும் தப்ப முடியாது. ஒரே பாய்ச்சல். ஒரே கவ்வல். தூக்கி வந்து விடும். அத்தனை திறமைசாலியான பூனை.

 ஆனால் அதற்கே தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தது ஒரு குறும்புக்கார எலி. பூனை எப்படித்தான் முயற்சி செய்தாலும் அது மாட்டவே இல்லை. 

ஒருமுறை பூனை துரத்தியபோது அது நேராக ஒரு வளையில் சென்று புகுந்து கொண்டது. பூனை வளையின் பக்கத்திலேயே காத்துக் கொண்டிருந்தது. எப்படியும் அது இதன் வழியாகத்தானே திரும்பி வரவேண்டும் என்று நினைத்தது. ஆனால் எலியோ சற்று தூரம் தாண்டி வளையின் இன்னொரு வழியாக தப்பித்து விட்டது. இதைப் பார்த்த பூனைக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது. அவமானமும் பிடுங்கி தின்றது. இதை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்று உறுதி கொண்டது.

 பூனை மீண்டும் ஒரு நாள் அதே எலியை பார்த்தது. வா வந்து வசமாக சிக்கிக் கொண்டாயா என்று துரத்தத் தொடங்கியது. இப்பொழுதும் அந்த எலி அதே வளையில் சென்று புகுந்து கொண்டது.  பூனைக்குத்தான் தெரியுமே அந்த வளைக்கு இன்னொரு வெளியேறும் வழி இருக்கிறது என்று. எனவே அந்த வெளியேறும் வழியில் ஒரு பெரிய கல்லை நகர்த்தி மூடி வைத்தது. மீண்டும் எலி முதலில் நுழைந்த அதே இடத்தில் வந்து காத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுதும் எலி வெளியே வரவில்லை. எப்படித்தான் 
வெளியே போயிருக்கும் என்று பூனை குழம்பிப் போனது.

அந்த நேரம் பார்த்து பக்கத்தில் இருந்த பூவரச மரத்தில் ஒரு கிளி வந்து அமர்ந்தது. "என்ன பூனையாரே! மிகவும் சோகமாக இருக்கிறீர்கள்?" என்று கேட்டது.
பூனை நடந்தது அனைத்தையும் விபரமாக கிளியிடம் சொன்னது.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட கிளி, "அடடா... உங்களுக்கு விஷயமே தெரியாதா?" என்றது. 
 புருவத்தை உயர்த்திய பூனை, "என்ன விஷயம், சொல்லு ", என்றது.
அதற்கு கிளி மிகவும் ரகசியமான குரலில் "அந்த எலி வளைக்கு இன்னொரு வெளியேறும் வழி பக்கத்து தெருவில் இருக்கிறது",என்றது. 

 மிகவும் மகிழ்ச்சி அடைந்த பூனை "எனக்கு அதை காட்டுகிறாயா" என்றது. 
 
"என்னைத் தொடர்ந்து வாருங்கள் "என்று சொல்லிவிட்டு கிளி பறக்கத் தொடங்கியது. கிளியைத் தொடர்ந்து 
மூச்சு வாங்க ஓடி வந்த பூனை "எங்கே அந்த வளை?" என்று கேட்டது.
 "அதோ அந்த சந்தில் இருக்கிறது" என்று ஒரு குறுகிய சந்தினை காட்டியது கிளி.

வேகமாக சந்தில் திரும்பிய பூனை சுற்று முற்றும் பார்த்தது. அங்கு வளை எதுவும் தென்படவில்லை. ஆனால் அதற்கு மாறாக பூனை தப்பி ஓட முடியாதபடி சந்தின் குறுக்கே ஒரு வலை கட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்த பூனை, தன்னைப் பிடிக்கத்தான் அந்த வலை கட்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டது. வேறு வழி இல்லை. திரும்பி ஓடி தப்பி விடலாம் என்று வேகமாக திரும்பியது. 

அங்கே... ஒரு பூனை பிடிப்பவன் நீண்ட ஈட்டியோடு காத்திருந்தான்!