அத்தியாயம்-2
துளியில் தொடங்கிய பெருங்கடல்!
ஒன்றாய் இருந்தது இரண்டு நான்கு எட்டு என்று பலவாய் பிரிந்தது. பிரிந்தவை எல்லாம் பெருகி விரிந்தன. ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் நடுவில் ஏற்பட்ட இடைவெளி தூரம் ஆனது.தூரத்தை கடக்கும் அளவை காலம் என்கிறோம்.
நேர்கோட்டில் நகர்ந்தாலும் சுழற்சியில் இருந்தாலும் அல்லது சுழன்று கொண்டே நகர்ந்தாலும் தூரத்தை கடக்கும் கால அளவு வேகம் என்று பெயர் சூட்டிக்கொண்டது.
பருமன் அடர்த்தி தூரம் காலம் எல்லாம் ஆற்றலின் பிள்ளைகள். இவற்றின் விகிதம் மாற்றி சமைத்த பொருட்கள் எல்லாம் விண்மீன்கள் ஆகின. விண்மீன்களின் வாரிசுகள் கிரகங்கள் ஆகி வலம் வந்தன.
எண்ணற்ற விண்மீன்களின் தொகுதிகள் அண்டம் என்னும் பெயரில் அலைந்து திரிந்தன. அண்டங்களின் தொகுதி பிரபஞ்சம் என்று பெயர் பெற்றது. சில அண்டங்களின் எல்லையை அனுமானிக்க முடிந்தாலும், பிரபஞ்சத்தின் எல்லை மட்டும் விரிந்து கொண்டேயிருக்கிறது!
எத்தனை கோடி பிரபஞ்சங்கள் உண்டென்று யாருக்கும் தெரியாது.
விரியும் பிரபஞ்சங்களின் எண்ணிக்கையை சொல்ல எண்களை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அண்டங்களே புள்ளிகளாகும் பிரபஞ்ச வெளியில் பூமி என்பது மீச்சிறு தூசி. கண்ணுக்குத் தெரியாத தூசியின் மீது நகரும் பல கோடி உயிர்களில் மனிதனும் ஒருவன்.
சில நூறு கோடி மனிதர்கள் மத்தியில், சிந்தனை வளர்ந்தவர் சில கோடி இருக்கலாம்.
அந்தக் கோடியில் நீங்களும் நானும் நிச்சயம் இருக்கிறோம். இல்லை எனில் நான் இதை எழுதுவதும் நீங்கள் வாசிப்பதும் நிகழ்ந்திருக்காது.
ஒரு துளியில் தொடங்கிய பிரபஞ்ச ஊற்று, நதியாகி கடலாகி பெருங்கடலாகி பித்தேற வைக்கிறது.
பிரம்மாண்டம் தன் அகராதியை திறக்கிறது!