Wednesday, 23 October 2024

எல்லையில்லா ஆனந்தம்! (Bliss Beyond Boundaries) - மதிபாலன்


அத்தியாயம்-2        

துளியில் தொடங்கிய பெருங்கடல்!

ஒன்றாய் இருந்தது இரண்டு நான்கு எட்டு என்று பலவாய் பிரிந்தது. பிரிந்தவை எல்லாம் பெருகி விரிந்தன. ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் நடுவில் ஏற்பட்ட இடைவெளி தூரம் ஆனது.தூரத்தை கடக்கும் அளவை காலம் என்கிறோம்.

 நேர்கோட்டில் நகர்ந்தாலும் சுழற்சியில் இருந்தாலும் அல்லது சுழன்று கொண்டே நகர்ந்தாலும் தூரத்தை கடக்கும் கால அளவு வேகம் என்று பெயர் சூட்டிக்கொண்டது.

பருமன் அடர்த்தி தூரம் காலம் எல்லாம் ஆற்றலின் பிள்ளைகள். இவற்றின் விகிதம் மாற்றி சமைத்த பொருட்கள் எல்லாம் விண்மீன்கள் ஆகின. விண்மீன்களின் வாரிசுகள் கிரகங்கள் ஆகி வலம் வந்தன.

 எண்ணற்ற விண்மீன்களின் தொகுதிகள் அண்டம் என்னும் பெயரில் அலைந்து திரிந்தன. அண்டங்களின் தொகுதி பிரபஞ்சம் என்று பெயர் பெற்றது. சில அண்டங்களின் எல்லையை அனுமானிக்க முடிந்தாலும், பிரபஞ்சத்தின் எல்லை மட்டும் விரிந்து கொண்டேயிருக்கிறது!

எத்தனை கோடி பிரபஞ்சங்கள் உண்டென்று யாருக்கும் தெரியாது.
விரியும் பிரபஞ்சங்களின் எண்ணிக்கையை சொல்ல எண்களை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

அண்டங்களே புள்ளிகளாகும் பிரபஞ்ச வெளியில் பூமி என்பது மீச்சிறு தூசி. கண்ணுக்குத் தெரியாத தூசியின் மீது நகரும் பல கோடி உயிர்களில் மனிதனும் ஒருவன்.

சில நூறு கோடி மனிதர்கள் மத்தியில், சிந்தனை வளர்ந்தவர் சில கோடி இருக்கலாம்.

அந்தக் கோடியில் நீங்களும் நானும் நிச்சயம் இருக்கிறோம். இல்லை எனில் நான் இதை எழுதுவதும் நீங்கள் வாசிப்பதும் நிகழ்ந்திருக்காது.

 ஒரு துளியில் தொடங்கிய பிரபஞ்ச ஊற்று, நதியாகி கடலாகி பெருங்கடலாகி பித்தேற வைக்கிறது.

பிரம்மாண்டம் தன் அகராதியை திறக்கிறது!


Tuesday, 22 October 2024

எல்லையில்லா ஆனந்தம்! (Bliss Beyond Boundaries) - மதிபாலன்

 நண்பர்களே!      
வணக்கம். 

இது ஒரு கட்டுரைக்கதைத் தொடர். இதில் செய்தியும் கதையும் பின்னி பிணைந்திருக்கும். சுருக்கமாகச் சொன்னால்,இதில் நீங்கள்,நான், மற்றும் நமக்குத் தெரிந்த யாவும் இருக்கும்.

அத்தியாயம்- 1
பிரபஞ்சத்தின் விதை

  அது இடமும் பொருளும் இல்லாத ஒரு நிலை. ஆனாலும் ஏதோ ஒன்று அங்கு இருந்தது. அது எங்கிருந்தது எப்படி உருவானது என்னும் கேள்விக்கெல்லாம் இடமில்லை. அதை பார்ப்பதற்கு யாரும் இல்லை அதை உணர்வதற்கு எதுவும் இல்லை.

அது தானே தன் இருப்பை உணர்ந்து கொண்டது. தான் ஆற்றலாக இருப்பதை புரிந்து கொண்டது. தான் பொருளாக மாறமுடியும்,உருவம் கொள்ள முடியும் என்னும் விதை அதற்குள் இருந்தது.

தன்னுணர்வால் தன்னை ஒருங்கிணைத்து., ஒரு சிறு புள்ளியாய் உருவெடுத்தது. ஆற்றலின் திரண்டுருண்ட வடிவமாய் அது இருந்தது. அதனைச் சுற்றி திரளாத அடர்த்தியற்ற ஆற்றல் சூழ்ந்திருந்தது.

 வெளிப்புற சக்தியை உள்வாங்கி, மெதுவாக அடர்த்தியை அதிகரித்துக் கொண்டே சென்ற அந்தப் புள்ளி தன் சுற்றளவை சற்றே பெருக்கிக் கொண்டது. மீண்டும் தன் அடர்த்தியை அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது சுற்றளவை நிலையாக வைத்துக் கொண்டு ஆற்றலின் அடர்த்தியை கூட்டியது.

முடிவிலியாய்  உயர்ந்த அடர்த்தி அதற்கு மேல் தாங்க முடியாத நிலையை எட்டி சட்டென்று வெடித்துப் பரவியது.
 தான் ஆற்றலாக இருந்து பொருளாக உருமாற்றம் பெறுவதை தானே உணர்ந்தது. 

ஆற்றல் அடர்ந்து அழுத்தம் கூடி வெடித்து பரவுகையில் வெப்பம் ஒளியென இரண்டாக மாற்றம் கண்டது. அவ்விரண்டிலும் பருப்பொருள் துகள்கள் அடங்கியிருந்தன.

வெப்பமும் ஒளியும் அளவற்ற வேகத்தில் ஆற்றல்  கோளமாய்  விரிந்து பயணித்தன. விரியும்போது தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டன.
அவை,  தாம் உருவாக்கிய வெற்றிடத்தில்  தாமே பரவி நிறைந்தன. 

ஆம்..  பிரபஞ்சத்தின் ஒரு துளி பிரசவமானது. 
அதற்குள் நீங்களும் நானும் கூட இருந்தோம்!

 (தொடரும்)