Thursday, 31 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-9 -வாழ்வின் அர்த்தம் புரிந்ததா?

வாழ்வில் ஓடி ஓடி களைத்துப் போன ஒருவன் மலை அடிவாரத்தில் தங்கி இருந்த ஒரு ஞானியைப் பார்க்கப் போனான்.

அது மரங்கள் அடர்ந்த பகுதி. சிறியதாய் ஒரு தெள்ளிய நீரோடை மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தது. ஓலை வேய்ந்த ஒரு குடிசையின் அருகில் ஒரு காட்டு மரத்தடியில் அமர்ந்திருந்தார் ஞானி.

 அவன் மிகவும் பணிவாய் குனிந்து வணங்கினான். அவர் கைகாட்ட எதிரில் அமர்ந்தான்.

 "ஐயா நான் ஒரு நெசவாளி. வயது 40க்கும் மேல் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மகன் ஒரு மகள்.

 மகளுக்கு திருமணமாகி அவள் கணவன் குடிகாரனாகிப் போனதால் வாழா வெட்டியாக என் வீட்டில் இருக்கிறாள். 

மகன் நகரத்து நெல்மண்டியில் உதவியாளனாக இருக்கிறான். அவன் ஊதியத்தில் அவனைப் பார்த்துக் கொள்ளவே அவனால் முடியவில்லை.

என் மனைவியோ நோயாளி.படுத்த படுக்கையாய் கிடக்கிறாள். வீட்டு வேலையோடு சேர்த்து அவளையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 நான் நெசவு செய்து வரும் வருமானம் வாய்க்கும் கைக்குமே போதவில்லை. துன்பத்தின் எல்லையில் துவண்டு போய் கிடக்கிறேன். நீங்கள் தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும்" என்றான்.
 
ஞானிஅவனை நிமிர்ந்து பார்த்தார். 
"நீ நூல் துணி நெய்வதை விட்டுவிட்டு, பட்டு நெசவுக்கு மாறினால் என்ன?" என்றார்.

 "அது என்னால் எப்படி முடியும் ஐயா? பட்டு நெசவு  செய்யும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லையே!". சங்கடத்துடன் தலைகுனிந்தான் அவன்.

 ஞானி சிறிது நேரம் கண்ணை மூடி யோசித்தார்.  "சிறிது கடன் வாங்கி முதலீடு செய். அதோடு, செல்வத்தின் நடமாட்டம் எங்கு அதிகம் உள்ளதோ அங்கு சென்று விற்பனை செய். அல்லது லாபம் வரக்கூடிய வேறு தொழில் செய் !"

 "இல்லை ஐயா. எனக்கு வேறு எதுவும் தொழில் தெரியாதே!"

 "தெரியாது என்றால் இப்போது கற்றுக்கொள்."

 "இந்த வயதுக்கு மேல் புதுத் தொழிலை என்னால் கற்றுக் கொள்ள முடியுமா  ஐயா "

 ஞானிகளின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பியது. "முடியும் என்று நினைத்தால் முடியும். முதலில் உன் மனதை அதற்கு தயார் செய்துகொள். முயற்சி செய். மீண்டும்  பிறகு வா!" 

 வணங்கி விடை பெற்றான் நெசவாளி.
 அதன் பிறகு ஞானி சொன்னதைப் போல் செய்தான். ஊர் செல்வந்தரிடம் கொஞ்சம் கடன் வாங்கி 
பட்டு நெசவுக்கு  மாறினான். பட்டு வேட்டிகள், சேலைகள் நெய்தான்.

 உள்ளூரிலேயே விற்பனை செய்வதை விட்டுவிட்டு  பக்கத்து நகரத்தில் கொண்டு போய் விற்றான். வருமானம் அதிகரித்தது.

 தன் மனைவிக்கு உயர் மருத்துவம் பார்த்து அவளை குணப்படுத்தினான். தன் மகளையும் நல்ல முறையில் பார்த்துக் கொண்டான். 

செல்வந்தரிடம் வாங்கிய கடனை சில மாதங்களில் அடைத்தான். பிறகு வந்த லாபத்தில் சொந்தமாய் பட்டு நூல் வாங்கி தொழில் செய்ய ஆரம்பித்தான்.
  
சில ஆண்டுகள் ஓடின.அவன் வறுமையை விட்டு வெளியே வந்திருந்தான். முன்பை விட வளமாகி இருந்தான்.

 மீண்டும் ஞானியை  பார்க்கப் போனான். இம்முறை ஞானி, தோட்டத்து கொய்யா மரத்துக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார்.

 கொய்யா மரம் நிறைய காய்களோடு வளமாய் செழித்திருந்தது.

 தானே நெய்து கொண்டு வந்திருந்த பட்டாடையுடன்  பழங்களை அவர் பாதத்தில் வைத்து வணங்கினான்.

 "நீங்கள் சொன்னபடியே செய்தேன் ஐயா. இப்போது நலமாக இருக்கிறேன்", என்றான்.

 அவர்," மிகவும் மகிழ்ச்சி. போய்வா!"என்றார். மீண்டும் கொய்யா மரத்திற்கு தண்ணீர் ஊற்றத் தொடங்கினார்.

 கொய்யா மரம் அவருக்கு நன்றி சொல்வதைப் போல தலையசைத்தது!
 
நம்மில் பெரும்பாலோர்  அந்த நெசவாளியை போலத்தான், எதிர்மறை சிந்தனைகளில் உழன்று  கொண்டிருக்கிறோம்.

 அதை விட்டு வெளியே வந்தால்  வெற்றியும் ஆனந்தமும் நம்மை  வரவேற்க  காத்திருக்கின்றன.
 
எந்த மரத்துக்கு நீர் ஊற்றுகிறோமோ அந்த மரமே வளர்கிறது. நாம் தேர்வு செய்யும் மரம் முள் மரமா  அல்லது பழ மரமா என்பது நம் கையில்தான் இருக்கிறது!







 

Wednesday, 30 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-9 - மகிழ்ச்சி ஆனந்தமாய் மாற வேண்டுமா?

 
        மகிழ்ச்சியை விரும்பாத மனிதர் இல்லை. வருத்தத்தை வேண்டும் என்னும் உயிர்கள் இல்லை.
 
துன்பத்தை விலக்கிவிட்டு இன்பத்தை தொட்டிடவே அனைத்து உயிர்களும் முயற்சி செய்கின்றன.
 
மகிழ்ச்சி என்னும் மந்திரத்தை உச்சரிக்கத்தான் மனிதரெல்லாம் ஓடோடி உழைக்கின்றார்கள். கஷ்டத்தை நஷ்டத்தை தவிர்த்திடவே காலமெல்லாம் பாடுபட நினைக்கின்றார்கள்.

 ஆனால் மகிழ்ச்சி எப்போதும் நிரந்தரமாய் இருப்பதில்லை. கொஞ்சம் இன்பம் நிறைய துன்பம் என்று மனித வாழ்க்கை ஒரு ராட்டினச் சுற்றலாய் மாறிக்கொண்டே இருக்கிறது.

 மகிழ்ச்சி ஏன் நிலைப்பதில்லை தெரியுமா? அது வெளியில் இருந்து நமக்குள் நுழைவது.

 அழகான மலரின் வண்ணம் நம் அகத்தை நிறைத்து மகிழ்ச்சி அளிக்கிறது. அதன் வாசனையை நுகர்கிறோம். மனதுக்குள் இதமாய் மகிழ்ச்சி பரவுகிறது.

 அறுசுவை உணவை ரசித்துச் சுவைக்கிறோம். மகிழ்ச்சி உள்ளே மத்தளம் கொட்டுகிறது.

 இனிய இசையை கேட்கும் போது இதயம் மகிழ்ச்சியில் துள்ளி ஆடுகிறது.  பஞ்சு மெத்தையில் படுக்கும்போது கிடைக்கும் சுகத்தில் தேகம் திளைக்கும்.
   
ஆனால் இவையெல்லாம் வெளியில் இருந்து நமக்குள் நுழைப்பவை. இருக்கும் வரைக்கும் இன்பம் தருபவை. அவை போய்விட்டால் மகிழ்ச்சியும் தொலைந்து போய்விடும்.

  எப்படி நிலையான ஆனந்தத்தை அடைவது? அதற்கும் சில அற்புத வழிகள் இருக்கின்றன.

 தியானம் செய்யுங்கள்.  உள்ளுக்குள் ஆனந்தம் உற்பத்தியாகும்.
அன்பு செய்யுங்கள்.ஆனந்த அருவிகள் அகத்தில் ஆர்ப்பரிக்கும்.

 உதவி செய்யுங்கள் உற்சாகம் உள்ளுக்குள் ஊற்றாய் பிரவகிக்கும். 

சேவைகள் செய்வதற்கு சித்தம் கொள்ளுங்கள். சொர்க்கம் உங்களை சொந்தம் கொண்டாடும்.
 
 இயற்கையோடு இணைந்து இதயம் தொலைத்தால்  எல்லையற்ற ஆனந்தம்  எழும்புவதை உணரலாம். 

 துன்பப்படும் உயிர்களை கருணைக் கண்களால் அணை த்துக் கொள்ளுங்கள். தொலையாத ஆனந்தம்  உங்களுக்கு சொந்தம் என்று தெரிந்து கொள்வீர்கள்.

உள்நோக்கி உங்களுக்குள் பயணம் செய்யுங்கள்.உங்களை நீங்கள்  யார் என்று உணர்ந்து கொள்ளுங்கள். அப்போது, ஆனந்தம் பொங்கிவரும் அழகை பாருங்கள்.

 இப்போது சொன்னவை எல்லாம் நம்மை விட்டு எப்போதும் நீங்காது. காரணம்  இவை வெளியில் இருந்து  நமக்குள் நுழையவில்லை. நம் உள்ளிருந்து புறப்பட்டு நறுமணமாய் பரவுகிறது. அதனால் தான் அவை எப்போதும் நிரந்தரமாய்  நிலைக்கிறது.

 நாம் பொருள்களால் அடையும் மகிழ்ச்சிகள் எல்லாம் குறைந்த நேரமே நமக்குள் குடியிருந்து போகும். ஆனால் நம்மை நாமே கரைத்துக் கொள்ளும் உன்னத உணர்வுகளால் உருவாகும் ஆனந்தம்  எப்போதும் நிலைக்கும்.
 
ஆம். நாம் மகிழ்ச்சியோடு நின்று போகும் மானிடர்கள் அல்ல. ஆனந்த அலைபரப்பும் ஆழியின் புத்திரர்கள்!

 ஆனந்தம் ஒர் அற்புத முடிவிலி.
 அந்த தெய்வீக அனுபவத்தை அடைந்தால் நிம்மதி!


Tuesday, 29 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-8 கடவுளின் துளிகள்!

 

கடவுள் என்பது ஒன்றா இரண்டா? 
காண்பவரை பொறுத்து பல கடவுள்கள் உண்டா? 

இந்தக் கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கின்றன.

கடவுள் ஒருவரே. அவருக்கு உருவம் இல்லை என்பது ஒரு கருத்து.

தந்தை,மகன்,பரிசுத்த ஆவி என்று மூன்று நிலைகளை சொல்வது இன்னொரு கருத்து.

பரம்பொருள் ஒன்று. ஆனால் தெய்வங்களின் வடிவங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது மூன்றாவது கருத்து.

இவை மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையா என்றால், இல்லை!

இந்த எல்லா நிலைகளிலும் இருக்கக்கூடியதே கடவுள்.

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால் ஆற்றல் வடிவில் இருந்த கடவுளுக்கு உருவம் இல்லை. அந்த ஆற்றலில் இருந்து பிரபஞ்சம் தோன்றும் போதே பல்வேறு வடிவங்கள் கிடைத்து விடுகின்றன.

அண்டங்கள் நட்சத்திரங்கள் கோள்கள் எல்லாம் கடவுளின் வெவ்வேறு வடிவங்களே.

தந்தை மகன் பரிசுத்த ஆவி என்பதும் கடவுளின் வெவ்வேறு நிலைகளே.

மகனுக்கு ஒரு தந்தை இருக்கிறார். அந்த தந்தைக்கு ஒரு தந்தை இருக்கிறார். அவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார். இப்படி பிறவிகளில் பின்னோக்கி போய்க்கொண்டே இருந்தால், அது ஐம்பொருள் தத்துவத்தில் போய் முடியும். அந்த ஐம்பொருளும் எங்கிருந்து வந்தன என்றால் அது கடவுளில் போய் முடியும். 

ஐம்பொருள் வடிவம் கிடைக்குமுன் அது ஆற்றலாய் இருந்தது. அதற்கு உருவம் இல்லை. ஆனால் அதிலிருந்துதான் உருவமும் உயிரும் கிடைத்தன. அந்த உயிர் ஆற்றலை பரிசுத்த ஆவி என்று சொல்வதில்  தவறில்லை.

சரி...
உண்மையில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? அவர் மதத்துக்கு மதம் மாறுபடுகிறாரா, என்னும் கேள்வி எழுகிறதல்லவா!

எத்தனை மதங்கள் வந்தாலும், எத்தனை ஞானியர் உதித்தாலும் ஆதிக் கடவுள் என்பது ஒன்றே ஒன்றுதான். அதில் ஐயமில்லை.

ஒரு தூதருக்கு காட்சியளித்த போது அவர் உருவமற்ற ஒளியாக இருந்தார். அதனால் அவருக்கு கடவுள் உருவமற்றவர். அது ஆற்றல் வடிவம்.

ஒரு மகன் தன் தந்தை கடவுள் என்றார். கடவுளின் மகன் கடவுளாகத்தானே இருக்க முடியும்? அது அடுத்த வடிவம். ஒவ்வொரு பிறவிக்கும் உயிரை அளிக்கும் அந்தப் பேராற்றலை பரிசுத்த ஆவி என்பதும் சரிதானே!

உருவமற்று ஆற்றலாக இருக்கும் கடவுளை பரம்பொருள் என்றனர். பரம்பொருள் வெவ்வேறு வடிவம் கொண்டபோது பல்வேறு பொருள்கள் பரிணமித்தன.

வாழ்வளிக்கும் மண்ணை, மழையை,சூரியனை வழிபட்ட போது இயற்கை வழிபாடானது.

இயற்கை வடிவங்கள் நம் பார்வையில் மிகப் பெரியவையாக  இருந்தபடியால் மனதில் நிறுத்துவது கடினமாக இருந்தது. 

எனவே இயற்கைக்கு மனிதன் தன்னைப் போலவே வடிவம் கொடுத்து வணங்கத் தொடங்கினான். அதுமுதல் கடவுளுக்கு பல்வேறு வடிவங்கள் எழும்பத் தொடங்கின.

பிரபஞ்சத்தில் ஆக்கல்,காத்தல், அழித்தல் என்னும் மூன்று முக்கிய செயல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை கடவுளால்தான் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒவ்வொரு செயலுக்கும் ஒரு கடவுள் வடிவம் வந்தது. அவ் வடிவங்கள் மனதிலிருத்தவும் வழிபடவும் எளிதாக இருந்தன. 

இப்படி ஒரே ஆற்றலின் பல்வேறு வடிவங்களை தெய்வங்களாக வழிபடுவதிலும் முரண்பாடு எதுவும் இல்லை.

கடவுளை எப்படி வழிபட்டாலும் தவறில்லை. வழிபடுவது நல்லதே. ஆனால், இப்படித்தான் வழிபட வேண்டும் என்று ஒருவரை கட்டாயப்படுத்துவது தவறாகிறது.


நீர்,நீலு,நீரு,வெள்ளம்,பானி,வாட்டர்...எப்படி அழைத்தால் என்ன, தண்ணீர் கோபித்துக் கொள்ளவா போகிறது?

எனவே கடவுளை எப்படியும் வழிபடலாம். தவறில்லை. வழிபடாமல் போனாலும் அவர் கோபித்துக் கொள்ளப்போவதில்லை. 

துளியை கடல் வெறுக்குமா என்ன? 
புரிந்து கொள்ள வேண்டும்...

நாமெல்லாம் *கடவுளின் துளிகள்!*


Monday, 28 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-மதிபாலன் அத்தியாயம்-7 பஞ்சபூதங்களின் பொம்மலாட்டம் !

கடவுளின் எண்ணத்தை ஐம்பூதங்கள் செயல்படுத்துவது எப்படி?

தண்ணீர் ஒருவனை காப்பாற்றுவதும் ஒருவனை கொல்வதும் 
எல்லாம் மந்திரம் மாயம் போல் அல்லவா இருக்கிறது என்று தோன்றும்.

அந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று பார்ப்போம்.

தாகத்தால் மயங்கி விழுந்தவனுக்கு மேகம் தண்ணீர் பொழிந்து  உயிரை மீட்பது  எப்படி?

 அவன் மயங்கி விழுந்தது பொட்டல் வெளி. இப்போது மேகம் எதுவும் அங்கில்லை. அதை உருவாக்க வேண்டும். அதற்கு அந்த குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட உயரத்தில் வெப்பநிலை குறைய வேண்டும். எனவே வளிமண்டலத்தில் உள்ள  காற்று என்னும் பூதம் அங்குள்ள வெப்பத்தை வேகமாக வெளியேற்றி ஈரப்பதத்தை அதிகரிக்க வேண்டும். அப்போது குளிர்ந்த நீர்த்துளிகள் ஒன்றுசேர்ந்து மேகமாக உருவெடுக்க வேண்டும். 

அதே நேரத்தில் சூரியன் என்கின்ற நெருப்பு பூதம் தனது தாக்கத்தை சட்டென்று குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் அங்கு மழை மேகம் உருவாகும்.

 மேகம் உருவானால் மட்டும் போதாது அது சீக்கிரமாக மயங்கி கிடப்பவன் மீது பொழிய வேண்டும். அதற்கு அந்த இடத்தில் புவியீர்ப்பு சக்தி அதிகமாகப்பட வேண்டும். அதை நிலம் என்கிற பூதம் செய்யும்.

 இப்படி நீர் நிலம் நெருப்பு என்னும் மூன்று பூதங்கள் ஒருங்கிணைந்து மழையை உருவாக்கி அவன் உயிரை மீட்கின்றன.

 அப்படியே அதை நவீன அறிவியல் அம்சங்களில் சொன்னால்,காற்றழுத்தம்  (pressure), வெப்பநிலை  (temperature), ஈரப்பதம்  (humidity), புவியீர்ப்பு விசை  (gravitational force) ஆகிய முக்கிய காரணிகளின் வேறுபாட்டால் மழை வருகிறது.

 ஆனால் மழை எங்கு பொழிய வேண்டும் என்று தெரிய வேண்டும் அல்லவா?
அதற்கு சூரியன் GPS கருவி போன்று செயல்படுகிறது. 

அதுதான் பூமியோடு ஒருங்கிணைந்து மழை எங்கு பொழிய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப்படித்தான்  ஒவ்வொரு பூதமும் செய்திகளைப் பெற்று பணிகளை நிறைவேற்றுகிறது.

இவற்றுக்குள் இந்த தகவல் பரிமாற்றமும் நிலை மாற்றமும் எப்படி நிகழ்த்தப்படுகின்றன?

 ஒளி (light), ஒலி (sound)மற்றும் மின்காந்த அலைகளை (Electromagnetic waves) பயன்படுத்தி இது நிகழ்த்தப்படுகிறது.

இப்படி  இயற்பியல் அம்சங்களை (physical parameters) மாற்றுவதன் மூலம் பஞ்சபூதங்கள் ஒவ்வொரு செயலையும் செய்கின்றன.

இதற்கான புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள் (data) ஆகாய குறியீடுகளாக பதிவு செய்யப்பட்டு வெட்ட வெளியில் உலவிக்கொண்டிருக்கும். அவற்றை பஞ்சபூதங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் அல்லது புதிய தரவுகளை சேர்க்கலாம்.

இதன் மூலம் காலம்,தூரம் இவற்றை கணக்கிட்டு எங்கு எந்த செயலை யாருக்கு செய்ய வேண்டும் என்பதை பஞ்சபூதங்கள் முடிவு செய்யும். இதற்கான பொதுவான விதிமுறைகளை பரம்பொருள் அல்லது கடவுள் வழங்கி இருக்கும்.

இது ஒரு தானியங்கி  செயல்பாடாக அனைத்து உயிர்களுக்கும் நடந்து கொண்டே இருக்கும்

இது ஒரே ஒரு செயல் மட்டுமே. இப்படி ஆயிரக்கணக்கான செயல்பாடுகளை கோடிக்கணக்கான உயிர்களுக்கு பஞ்சபூதங்கள் செய்து கொண்டே இருக்கும்.

அவற்றின் நெறிமுறைகள், அளவீடுகள்,செயல் நடைபெறும் வேகம் அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு நடத்தப்படும்.

பஞ்சபூதங்களின் இச்செயல்கள், அந்தந்த உயிர்களின் செயல்களைப் பொறுத்தும் கால இடங்களைப் பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும்.

இவற்றில் இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் எல்லாம் அடங்கி இருக்கும்.

நுட்பமான தரவுகள், கணக்குகள், செயல்பாடுகள் இவற்றை உள்ளடக்கிய மாபெரும் சிக்கலான கட்டுப்பாட்டு முறைமை (control system) தான் பஞ்சபூதத்துவம் என்று கூறலாம்.

இதுவரை கண்டுபிடித்திருக்கும் கணினிகள் தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் எந்திரங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டாலும் இயற்கையின் செயல்பாடுகளில் 0.00000000001 சதவீதத்தைக் கூட எட்ட முடியாது என்பது நிதர்சனம்!