காதல் வீரம் என்னும் இரண்டையும் இரு கண்களாக பார்ப்பது தமிழ் மரபு. இதில் வீரத்தின் அடிப்படை பயம் இல்லாமல் இருப்பது.
கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில்,
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா...!
என்று எழுதியிருப்பார்.
அதில் தேசத்தை காப்பதற்கும் மானத்தை காப்பதற்கும் அச்சத்தை விட்டுப் போராடு என்று சொல்லி இருப்பார்.
அஞ்சாமல் வாழ்வது திராவிடர் உரிமை மட்டுமல்ல. மனித குலத்தின் உரிமை என்பதை மறக்கக் கூடாது.
அச்சமில்லை!அச்சமில்லை!
பாரதியார் ஒரு பாடலில் எதற்கெல்லாம் அச்சமில்லை என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்.
அந்தப் பாடல் இப்படித் தொடங்கும் .
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
இதில், வானம் இடிந்து தலை மேல் விழுந்தாலும், நண்பர்கள் விஷத்தை கொண்டு வந்து நம் வாயிலே ஊற்றினாலும், மிகவும் அழகு வாய்ந்த இளம் பெண்கள் நம் அருகில் வந்து மயக்க முயற்சித்தாலும் , இந்த பூமியில் உள்ள அனைவரும் ஒன்றாய் சேர்ந்து வந்து நம்மை எதிர்த்தாலும் நமக்கு அச்சமில்லை என்று கூறி இருப்பார்.
வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அச்சம் இல்லாமல் இரு என்னும் உத்வேகம் இப்பாடலில் கிடைக்கும்.
பயமின்மை நல்லதா?
எதைக்கண்டும் பயப்படாமலேயே இருப்பது நல்லதா? அது அறிவார்ந்த செயலா? என்று கேட்டால் அதற்கு திருவள்ளுவர் பதில் சொல்கிறார்.
அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
என்கிறார்.
இதன் பொருளைப் பார்ப்போம்.
அறிவுடையவர்கள் ,பயப்பட வேண்டிய விஷயத்திற்கு பயப்படுவார்கள். அப்படி பயப்பட வேண்டிய விஷயத்திற்கும் பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் என்கிறார்.
அவரே எதற்கு பயப்பட வேண்டும் என்றால், தீய செயல்களை செய்வதற்கு பயப்பட வேண்டும். அதேபோல பிறரிடம் யாசகம் கேட்பதற்கு பயப்பட வேண்டும் என்று கூறுகிறார்.
ஏன் இந்த பயம்?
தீய செயல்களை செய்யும் போது நமது மனசாட்சி உறுத்தும். அப்போது பயம் ஏற்படும்.
அப்படி ஒரு உறுத்தலே இல்லாமல் அல்லது அந்த உறுத்தலுக்கும் பயப்படாமல் ஒரு தீமையை செய்து விட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
அதனால் எதிரிகள் உருவாகலாம். அவர்கள் தாக்க வரும்போது பயம் வரும்.
அதேபோல பிறரிடம் கையேந்தும் போது தன் நிலையை எண்ணி பயம் வரும். சரி. ஏன் அப்படி ஒரு நிலை ஏற்படுகிறது?
தன்னிடம் வாழ்க்கை நடத்த பொருள் இல்லை வசதியில்லை. தான் அதை சம்பாதிக்கவும் முடியாது என்னும் நிலை வரும் போது யாசகம் கேட்பது நடக்கிறது. அப்படி யாசகம் கேட்பவர்கள் கூனிக் குறுகி அச்சப்படுவார்கள்.
இந்த பயங்களை எப்படிப் போக்குவது?
வாழ்வில் நேர்மையான வழிகளை கடைப்பிடித்து நன்மையை செய்யும் ஒருவனுக்கு பயம் இருக்காது. தைரியம் மேலோங்கி இருக்கும்.
எனவே நல்லதை நினைத்து நல்லதையே செய்வது அச்சம் இல்லாமல் வாழும் ஒரு வழியாகும்.
தன்னுடைய உழைப்பில் வாழும் ஒருவன் யாசகம் கேட்கும் நிலை ஏற்படாது. அவன் சமூகத்தில் அச்சம் இல்லாமல் வாழலாம்!
சரி. நல்லவர்கள் மற்றும் உழைப்பவர்கள் அனைவரும் பயமின்றி வாழ முடியுமா?
வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் வரும் இன்னும் சில பயங்களைப் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்!
முற்றிலும் உண்மை, நேர்மையும் உழைப்பும் பயத்தை நீக்கும்.👌💐
ReplyDeleteமகிழ்ச்சி!நன்றி 💐
ReplyDelete