Saturday, 26 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- மதிபாலன் அத்தியாயம்-5 அவன்...அவள்... அது..!

அறிவியல் எதையும் படைக்கவில்லை. ஏற்கனவே இருப்பதை அறிந்து கொள்கிறது  அல்லது பயன்படுத்திக் கொள்கிறது.

அறிவியல் என்பது இரு கிளை உள்ள ஒரு மரம். ஒரு கிளை, மறைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது(Discovery). இன்னொரு கிளை இருக்கின்ற பொருள்களை இணைத்து நம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது(Invention).

முதலாவது, ஏற்கனவே இருக்கும் ஒன்றின் அமைப்பு மற்றும் தன்மைகளை அனைவரும் அறிய  ஆவணங்களுடன் தெரிவிப்பது.

இரண்டாவது, இப்படி ஏற்கனவே அறிந்த பொருள்களை வெவ்வேறு வகையில் இணைத்து நமக்கு பயன்படும் பொருள்களாக மாற்றிக் கொள்வது.

நீராவி எந்திரம், ரயில் பாதை, மின்சாரம் ஜெனரேட்டர், மோட்டார், போக்குவரத்து வாகனங்கள், பிற எந்திரங்கள் இவையெல்லாம் உலகில் இல்லவே இல்லை என்றால் எப்படி இருக்கும்?

உலகமே குறைந்த பட்சம் நூறு வருடம் பின்னால் போயிருக்கும்.

ஆம்.இரும்பு என்ற ஒன்று,நூறு வருடம் முன்பு தீர்ந்து போய் இருந்தால் இதுதான் நடந்திருக்கும்.

முதலிலிருந்தே இல்லாமல் போயிருந்தால் நாம் கற்காலத்திலேயே கால்நடை மேய்த்திருப்போம்.

இரும்பை நாம் படைக்கவில்லை. அது இருக்கிறது என்று கண்டறிந்தோம். 

நெருப்பை நாம் படைக்கவில்லை. அதை வெளிப்படுத்தக் கண்டறிந்தோம். 

நெருப்பை வைத்து இரும்பை உருக்க கற்றுக் கொண்டோம். அவ்வளவுதான். அதனை வைத்தே இத்தனையும் வந்தன.

கருவிகளை செய்தது நம் அறிவு தானே என்று தோன்றும். அந்த அறிவு தரும் கருவிகளை நாம் செய்யவில்லையே!

உடம்பையும் ஐம்புலனையும் மூளையையும் நாம் செய்தோமா? அப்போது நம் அறிவு என்பது நமதுதானா?
இரும்பும் நமதல்ல அறிவும் நமதல்ல.

எல்லாம் கடவுள் தந்தது என்பான்அந்த நம்பிக்கை உள்ளவன். எல்லாம் இயற்கை தந்தது என்பான் இந்த நம்பிக்கை உள்ளவன்.

உண்மை உணர்ந்தவனுக்கு தெரியும் கடவுளும் இயற்கையும் வேறல்ல என்று.

கடவுள் என்பது முழுமை. இயற்கை என்பது அதன் பகுதிகள்.

முழுமை பகுதிகளாய் வெளிப்படுகிறது. பகுதிகள் எல்லாம் சேர்ந்து முழுமையாகிறது.

ஒன்றிலிருந்து தொடங்கிய எல்லாம் மீண்டும் ஒன்றாகும். அந்த ஒன்றே விரிந்து பிரிந்து வெவ்வேறாய்  தோற்றம் கொள்ளும்.

அதனை கடவுள் என்று சொல்லுங்கள். இயற்கை என்று சொல்லுங்கள். அதற்குக் கவலை இல்லை.

அவன், அவள், அது எல்லாம் ஒன்றேதான்.
அந்த ஒன்றுக்கு பெயர் இல்லை. உருவம் இல்லை.

 அதுவும் பிரபஞ்சமும் வேறு வேறில்லை!







Friday, 25 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-4 அறிவுக்குத் தெரிந்தது மிகவும் சொற்பம்!


பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய புத்தகம். அதில் மனிதன் படித்தது ஐந்து சதவீதம் கூட இல்லை. மீதியைப் பற்றி தெரிந்து கொள்ளும் வரை மனிதன் இருப்பானா என்றே தெரியவில்லை.

கண்ணுக்கு தெரிவதைப்பற்றி மட்டும் தான் மனிதன் இதுவரை கண்டுபிடித்திருக்கிறான். 

சூரியன், அதைச் சுற்றும் கோள்கள், நிலா மற்றும் நட்சத்திரங்கள் இவற்றைப் பற்றி மேலோட்ட அறிவே மனிதனின் அறிவு. 

 இத்தனை அறிவியல் ஆய்வுக்குப் பிறகும் மனிதன் அறிந்தது ஐந்தே சதவீதம் என்றால் மீதி உள்ளவை மர்மத்திலும் மர்மம். அவற்றை இருட்பொருள் என்றும் இருளாற்றல் என்று மட்டும் தான் சொல்ல முடிகிறது. என்னவென்று அறியும் அறிவை மனிதன் இன்னும் எட்டவில்லை.

தாத்தா பாட்டியை பெரும்பாலும் தெரியும். கொள்ளுத் தாத்தாவை பார்த்தவர் மிகச் சிலர். எள்ளுத் தாத்தாவை எவருக்கும் தெரியாது.

 நான்காம் தலைமுறையே தெரியாத மனிதன்தான் "நான்தான்" எல்லாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறான்.

தாவரங்களும் மனிதனும் ஒரே இனம்தான். ஏனெனில் இருவருக்கும் மூதாதையர் ஒருவரேதான். அது ஒரு செல் உயிரி. இது கூட மனிதனின் அனுமானம்தான். உறுதியாய் சொல்ல ஒரு ஆதாரமும் இல்லை.

உயிருள்ளவை எல்லாம் இயங்குகின்றன. உயிரற்றவை எதுவும் இயங்குவதில்லை என்று பெரும்பாலோர் நினைக்கிறோம்.

பிரபஞ்சத்தில் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியில் மட்டுமல்ல, உள்ளுக்குள்ளும்தான். 

எப்படி?
கல், மண், மரம், மனிதன் எல்லாம் அணுக்களால் ஆனவை என்று தெரியும். எல்லாமே எலக்ட்ரான் புரோட்டான்  நியூட்ரான் தொகுப்பு. இதில் எலக்ட்ரான்கள் எல்லாம் இயக்கத்தில் உள்ளன. மனிதனில் மட்டுமல்ல மற்றவற்றிலும்தான். இப்போது சொல்லுங்கள் இயக்கம் என்பது வெளியில் மட்டுமா? இல்லை. உள்ளுக்குள்ளும் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன.

 தெரிந்தவை மட்டும்தான் முடிவா என்றால் இல்லை.இயற்கை அனுமதித்ததை மட்டுமே மனிதன் அறிந்து கொண்டிருக்கிறான்.

அறிவியலால் அனைத்தும் படைத்தேன் என்பவன், எந்த ஓர் அணுவையாவது படைத்தானா? அணுவின் உட்பொருளை ஆற்றலை இயக்கத்தை மனிதன் படைத்ததாய் மார்தட்ட முடியுமா?

 இயற்கை...

கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டம். இவன் கண்ணுக்கும் தெரியாத உயிர்ப் பிண்டம்!

Thursday, 24 October 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-3 இயற்கையிலிருந்து எழுந்த உயிர்கள்!


 ஒரு துளியிலிருந்து  பிரபஞ்சம் மட்டும் தோன்றவில்லை.

 ஒரு துகள் மகரந்த சூலில்தானே உலகத்து தாவரங்களின் உற்பத்தி நடக்கிறது!

 ஒரு துளி விந்தின் ஊடுருவல் தானே உயிர்களின் பயணத்தை தொடங்கி வைக்கிறது!

ஆணாய்,பெண்ணாய், ஆணும் பெண்ணுமாய் பிறக்கும் உயிரெல்லாம் ஒரு துகள் அல்லது ஒரு துளியின் படைப்பு.

குட்டியாய் குஞ்சாய் பிறக்கும் உயிர்கள் ஒரு துளி மூலமே உண்டாகின்றன. உட்புறம் வெளிப்புறம் இருவகை கருவுறுதலில் உயிர்களின் ரகசியத்தை இயற்கை வைத்துள்ளது.

மூலம் எதுவென சற்றே யோசித்தால், நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றின் கலவை தான் இத்தனை உயிர்களும்.

கண்ணுக்குத் தெரியாமல் இருந்த ஒரு துளிதான் எல்லையற்ற பிரபஞ்சமாய் பரிணாமம் கொண்டது.

ஒரு துகள்  மகரந்தம் தாவர இ னங்களைத் தருகின்றது.
ஒரு துளி விந்து புழு,பூச்சி விலங்குடன் மனிதனையும் படைக்கின்றது.

நாம் காணும் உயிர்ப்பொருளும் ஜடப்பொருளும் ஒரு துளியில் உருவானவை.

ஜடப்பொருள்  உயிர்களுக்கு முன்பே வந்தது. உயிரினம் தோன்றிட அடிப்படைப் பொருள்களை ஆய்ந்து தெளிந்து அமைத்தது.

அடிப்படை ஐம்பொருளில்  இருந்து தாவரம் வந்தது. தாவரத்தை உணவாய் உண்டு பிற உயிர்கள் கிளைத்தன.

சில உயிர்களுக்கு தாவரங்கள் உணவு. சில உயிர்களுக்கு பிற உயிர்கள் உணவு.

 மனிதனின் உணவு, தாவரங்கள் பிற உயிர்கள் மட்டுமல்ல, இன்னொரு மனிதனும் தான்.

           ஆம்...
மனிதனுக்கு ஆறாம் அறிவும் இருக்கிறது!