Thursday, 26 December 2024

உள்ளிருக்கும் உன்னை கண்டுபிடி- மதிபாலன்

உள்முகப் பயணம்: 

நாம் அன்றாட வாழ்வில் பல விஷயங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நல்ல வேலை, பணம், பெரிய வீடு, சமூகத்தில் நல்ல பெயர் இப்படி பலவற்றை நாம் அடைய வேண்டும் என்று நினைக்கிறோம். 

ஆனால் இந்த ஓட்டத்தில் நாம் நம்மை மறந்து விடுகிறோம். நம் உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சி, அமைதி எங்கே என்று தெரியாமல் தவிக்கிறோம்.

 மனக்காட்டில் ஒரு தனிப்பயணம் 

உள்ளுக்குள் செல்லும் பயணம் அடர்ந்த காட்டிற்குள் செல்வது போல. வழி தெரியாது, எங்கே போகிறோம் என்று தெரியாது. முதலில் பயமாக இருக்கும். நம் மனதில் பல எண்ணங்கள், பயங்கள், சமூகம் சொல்லும் விஷயங்கள் நம்மை குழப்பும். நம் வாழ்க்கையில் நடந்த நல்லது கெட்டது எல்லாம் நினைவுக்கு வந்து தொந்தரவு செய்யும். 

ஆனால், தொடர்ந்து உள்ளுக்குள் செல்லும்போது, நம் முன்னோர்கள் சொன்ன வழிகள், நம் முந்தைய அனுபவங்கள் நம்மை வழிநடத்தும். ஒவ்வொரு அடியும்  நம்மைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வைக்கும். இலைகளின் சலசலப்பு இனிமையான இசையாக மாறும். இந்த பயணம்தான் இலக்கு.

 உணர்ச்சிகள் பொங்கும் உள்ளக்கடல் 

நம் மனதை ஒரு பெரிய கடல் என்று வைத்துக்கொள்வோம். மேற்பரப்பில் அலைகள் எப்படி அடிக்கின்றதோ, அதுபோல நம் மனதிலும் எண்ணங்கள், உணர்ச்சிகள் அலைமோதும்.

 நம் விருப்பங்கள், பயங்கள், மற்றவர்களுடன் நடக்கும் விஷயங்கள் எல்லாம் நம் மனதை குழப்பும். ஆனால், ஆழமாக செல்லும்போது அமைதியான ஒரு இடம் தெரியும். அங்கே அலைகள் இல்லை. அதுதான் நம் உண்மையான நான் இருக்கும் இடம். அந்த அமைதியான இடத்தை அடையவே நாம் உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

உள்முகப் பயணத்தின் சாராம்சம்

உன் முகப் பயணம் நம்மை நம்மைப் பற்றி சிந்திக்க வைக்கிறது. வெளியே நடக்கும் விஷயங்களை விட்டுவிட்டு நாம் உள்ளுக்குள் செல்ல வேண்டும்.

 உள்ளே செல்லும்போது, நாம் உணரும் எண்ணங்களை, விதிவிலக்கு இல்லாமல் முழுமையாக கவனிக்க வேண்டும். அந்த எண்ணங்களில் நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும்.

 பொறுமையாக அவற்றை அலசி ஆராயும் போது எவை தேவையானவை, எவை தேவையற்றவை என்பது தெளிவாக விளங்கும்.

 மனம் அவற்றை வகைப்படுத்தி எதை பயன்படுத்த வேண்டும், எதைப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து அதற்கு ஏற்ப நம்மை இயங்க வைக்கும்.

 இத்தகைய விழிப்புணர்வுப் பயிற்சிகள் நமக்குள் ஒளிந்திருக்கும் நம்மைப் பற்றி தெரிந்துகொள்ள உதவும்.

 வழிநடத்தலில்  விழிப்புணர்வின் பங்கு

தியானம், விழிப்புணர்வு போன்ற பயிற்சிகள் நம் மனதில் அமைதியை ஏற்படுத்தும். நம் எண்ணங்கள் அடங்கும். நம்மை நாமே புரிந்துகொள்ள உதவும்.

 விழிப்புணர்வு நாம் இப்போது இருக்கும் தருணத்தில் கவனம் செலுத்த உதவும். நம் உணர்ச்சிகளை விருப்பு வெறுப்பின்றி  கவனிக்கலாம். இதனால் நம்மை நாமே நன்கு புரிந்துகொள்ள முடியும்.

உள்முகப் பயணத்தின் நன்மைகள்

உள்ளுக்குள் செல்லும் பயணம் பல நன்மைகளை தரும். நாம் நம்மைப் பற்றி தெரிந்துகொண்டால், மற்றவர்களுடன் நன்றாக பழக முடியும். சரியான முடிவுகளை எடுக்க முடியும். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும்.

 நாம் எதை விரும்புகிறோம், எது நமக்குப் பிடிக்காது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனால் சரியான முடிவுகளை எடுக்க முடியும். 

நம் உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள முடியும். இதனால் மற்றவர்களுடன் நன்றாகப் பழக முடியும். 

உள்ளுக்குள் செல்லும்போது புதிய யோசனைகள் வரும். படைப்பாற்றல் அதிகரிக்கும். 

நம்மை நாமே புரிந்துகொண்டால், வாழ்க்கையில் ஏற்படும் தடைகளை எதிர்கொள்ளும் தைரியம் வரும். மீண்டும் எழுந்து நிற்கும் வலிமை கிடைக்கும்.

உள்ளுக்குள் சென்று நம்மை நாமே கண்டுபிடித்தால் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் தெரியும்.

உள்ளுக்குள் செல்லும் பயணம் எளிதானது அல்ல. சில சமயங்களில் சிரமங்கள் வரலாம். அப்போது உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

உன் முகப் பயணம் என்பது நம்மை நம்மை நாமே கண்டுபிடிக்கும் ஒரு அற்புதமான பயணம். 

இந்தப் பயணத்தில் நாம் பல புதிய விஷயங்களை கற்றுக்கொள்வோம். நம்மை நாமே நேசிக்கக் கற்றுக்கொள்வோம். வாழ்க்கையை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்வோம்!

Tuesday, 17 December 2024

துரோகம்- மதிபாலன்

 மேற்கு மலைத்தொடரை ஒட்டி அமைந்த பசுமை கொஞ்சும்  ஒரு கிராமம்தான் குன்றம்பாரம். 

 வயல், நதி, மலை, காடு என்று எல்லா  இயற்கை வளங்களையும்  தன்னகத்தே  கொண்டது அது. இயற்கையின் பொக்கிஷமாய் அமைந்த ஊர்.

அந்த கிராமத்தில் இரண்டு நண்பர்கள், கார்த்திக் மற்றும் சரவணன். பள்ளி நாட்களிலிருந்தே  எங்கே பார்த்தாலும் சேர்ந்து ஒன்றாக சுற்றியவர்கள். 

 ஒருபுறம் கார்த்திக் தன் பேச்சுத் திறமையால் கிராமத்து மக்களிடம் பிரபலமாக இருந்தான் ; மற்றொரு பக்கம் சரவணன் தனது புத்திக் கூர்மையால்  கிராம மக்களுக்கு நல்ல தீர்வுகளை தேடிக்கொண்டிருந்தான்.

கார்த்திக் கிராமத்தில் பிரபலமாக இருந்தாலும், அவனது கனவு அரசியல். பொதுக் கூட்டங்களில் அவன் பேசும் பேச்சு எல்லாரையும் ஈர்க்கும்.

 அன்று கிராம சபை கூட்டம் 
கார்த்திக் பேசத் தொடங்கினான். " எல்லாருக்கும் வணக்கம். நம்ம கிராமத்துக்கு மாற்றம் வரணும்னு நாம எல்லோரும் நினைக்கிறோம். நம்ம கிராமம் எல்லோருக்கும் ஒரு ரோல் மாடல் ஆகணும்  

நான் வர்ற பஞ்சாயத்து தேர்தல்ல தலைவருக்கு நிக்கலாம்னு நினைக்கிறேன்.நீங்க என்னை ஆதரிப்பீங்கன்னு  நம்பிக்கையோட இருக்கேன். ."

கூட்டத்தில்  இருந்த பழனியப்பன் எழுந்து "அதெல்லாம் சரிப்பா. நம்ம ஊர்லபாதுக்காக்கப்பட்ட குடிநீர் வேணும்னு ரொம்ப நாளா ஒரு கோரிக்கை இருக்குது.அதுக்கு என்ன தீர்வு? நீ என்ன பண்ணப் போற?"

கார்த்திக்: "அதுக்கெல்லாம் சமயம் வரும் பழனியப்பா. நீங்க எல்லாரும் சேர்ந்து என்ன தலைவரா ஆக்குங்க.நானே எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் ."

" அப்போ சரிப்பா! நாங்க உனக்கு ஓட்டு போடுறோம் " . கூட்டத்தில் பெரும்பாலோரின் குரல் இப்படி ஒலித்தது.

அந்தக் கூட்டத்தில் இருந்த சரவணன் , கார்த்திக்கின் பேச்சு வெறும் வாக்குறுதியாக இருக்கிறது என்பதைக்   கண்டுகொண்டான். அவன் மனம் மிகவும் குழம்பியது.

கூட்டத்தில் பேசாமல் இருந்த சரவணன், தன் திட்டம் பற்றிய சிந்தனையில் மூழ்கி இருந்தான்.

 கிராமத்தினர் அடுத்து வந்த தேர்தலில் கார்த்திக்கை அமோக  வெற்றி பெற வைத்து தலைவர் ஆக்கினர்.

குடிதண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க பாசன நிலங்கள், மழையின் அளவு, காலநிலை மாற்றம் எல்லாவற்றையும் ஆய்வு செய்து, ஒரு சிறந்த திட்டத்தை உருவாக்கினான் சரவணன்.

ஒரு நாள் மாமரத்தடியில் கார்த்திக்கிடம் திட்டத்தை எடுத்துச் சொன்னான்.

 சரவணன்: "கார்த்திக், இதப் பாரு. நம்ம கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வர இதுதான் சரியான வழி. நீ கிராமத்து தலைவரா இருக்க, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இது ஒரு நல்ல வாய்ப்பு. நீ என்ன சொல்ற?"

கார்த்திக்: "சரவா, நீ சொல்ற திட்டம் ரொம்ப நல்லா இருக்கு. இதை நான் கவனிச்சிக்கிறேன்.

 ஆனா, இதுக்கு பெரிய அளவுல நிதி தேவைப்படுது. இதை நிறைவேற்றனும்னா  நமக்கு உதவக்கூடிய தொழிலதிபர்கள், அரசியல் அரசியல் ரீதியான சப்போர்ட் தேவையா இருக்கு.  நான் எனக்கு தெரிஞ்ச தொழிலதிபர்கள் கிட்ட பேசிப் பார்க்கிறேன் ."


சரவணனுக்கு ஏதோ ஒரு நெருடல் தோன்றினாலும், தன்  நண்பனிடம் நம்பிக்கை வைத்தான்.

சில நாட்களிலேயே, கார்த்திக் ஒரு தொழிலதிபரை சந்தித்தான். அவர் பக்கத்து நகரத்தில் சிமெண்ட் கூரை தயாரிக்கும் தொழிற்சாலையின் சொந்தக்காரர் .

 அவர் அந்த கிராமத்தின் அபிவிருத்திக்கான திட்டங்களில் உதவி செய்ய விரும்பினார். 

அப்போது கார்த்திக், சரவணனின் திட்டத்தை எடுத்துக் கூறினான், ஆனால் சரவணன் திட்டம் என்று கூறவில்லை. தானே உருவாக்கியது போலவே அவரிடம் விளக்கினான்  

 கார்த்திக்: "இந்த திட்டம் நான் பல நாள் யோசிச்சு பிறகு கிடைச்ச  ஐடியா. நம் கிராமத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்ல இந்த மாதிரி பெரிய திட்டங்கள் தான் தேவை. நீங்க கண்டிப்பா உதவனும் "

தொழிலதிபர் திட்டத்துக்கு நிதி தர சம்மதித்தார். விரைவிலயே பணிகள் தொடங்கி நடைபெற்றன. ஓராண்டு காலத்தில் நிறைவும் பெற்றது.

ஆனால் திட்டத்தின் முழுப்பயனும் தொழிலதிபரின் நிறுவனத்துக்கும், கார்த்திக்கின் அரசியல் வட்டாரங்களுக்கும் மட்டுமே சென்றது. சரவணனின் பெயர் முழுவதும் இருட்டடிக்கப்பட்டது.

சரவணன் இந்த விஷயத்தை அறிந்ததும் கார்த்திகை  நேரில் சென்று பார்த்தான்.

 சரவணன்: "கார்த்திக், இது என்னடா? நான் உருவாக்கின  ப்ரொஜெக்ட்ட நீ உன்னோடதுன்னு சொல்லி வேலைய முடிச்ச. அதுல பெரும்பகுதிய  நீயும் உன் கூட்டாளிகளும் சேர்ந்து கொள்ளையடிச்சு இருக்கீங்க. நீ எனக்கும் உண்மையா இல்ல. மக்களுக்கும் உண்மையா இல்ல.  இது துரோகம் இல்லையா?"

கார்த்திக்: "  சரவா, இது அரசியல். இப்போ யாரு யாரை முந்திக்கிறாங்க  அப்படிங்கறதுதான் முக்கியம். உன் திட்டம் வெற்றியடைஞ்சா போதும் இல்லையா? அதை நீ செஞ்சா என்ன?நான் செஞ்சா என்ன?"

கார்த்திக்கின் பதில் சரவணனை உலுக்கியது.
சரவணன்: "நம்ம நட்புல நீ விஷத்த  கலந்துட்ட ."

 கார்த்திக் ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்தான்.

 வாழ்க்கையில்  மக்களுக்காக உழைத்த ஒருவன், தன் நண்பனின் துரோகத்தால் சின்னாபின்னமானான். 

அந்த இரவு, மாமரத்தடியில் அமர்ந்தபடி, தன் நண்பன் துரோகி ஆகிவிட்டதை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான் சரவணன்.

அடுத்த சில நாட்களில், கார்த்திக் தனது திட்டத்தால் பெரிதும் பாராட்டப்பட்டான்.    மக்கள் கார்த்திக்கை தலைமையில் வைத்துக் கொண்டாடினர்.
 
சரவணன் ஏமாற்றத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தான் . கார்த்திக்கின் வெற்றி புகைப்படம் பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் இடம் பெற்றது. அவன் அந்தத் தொகுதியின் எம்எல்ஏ ஆக வேண்டும் என்றும் பலர் பேசத் தொடங்கினர். 
  
 அப்போது  சரவணனுக்கு  ஒரு கசப்பான நிஜம் விளங்கியது

"வெற்றிக்கு பலர் தேவைப்படலாம் ; ஆனா துரோகத்துக்கு ஒருவன் போதும்."





Saturday, 14 December 2024

ஆண்களை நம்பாதே! - மதிபாலன்

 

 அது சென்னையின் ஒரு பரபரப்பான  தெருவில் அமைந்த,  பழமை வாய்ந்த மனநல மருத்துவமனை. அங்கு, தினமும் பல வாழ்க்கைக் கதைகள் பதிவாகி வந்தன.

 அப்படி ஒரு நாள், பிரியா என்ற இளம் பெண், தன் அப்பா அம்மாவுடன்  டாக்டர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தாள்.

பிரியா, வெளியில் பார்க்க நன்றாக இருந்தாலும்  உள்ளுக்குள் எப்போதும் பயந்து கொண்டே இருந்தாள்.  அவளால் யாரையும் நம்ப முடியவில்லை. கல்யாணம் பற்றி யோசிக்கவே பயந்தாள்.

 பிரியாவின் அப்பா அம்மா இருவரும் டாக்டரின் அறைக்குள் நுழைந்தனர்.

 "டாக்டர், எங்களுக்கு ஒண்ணும் புரியல. எவ்வளோ முயற்சி செய்தாலும், பிரியா எந்தப் பையனையும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டேங்கிறா," என்று கவலையோடு சொன்னார்  பிரியாவின் அப்பா கணேசன்.

டாக்டர் கிருஷ்ணன், அவர் சொன்னதை அமைதியாக கேட்டுக் கொண்டார். "கவலைப்படாதீங்க. பிரியாவுடன் பேசிப் பார்க்கிறேன். நிச்சயமா ஒரு தீர்வு கிடைக்கும்,"  என்றார்.

பிறகு, டாக்டர் கிருஷ்ணன்  " நீங்க ரெண்டு பேரும் வெளியே போய் பிரியாவை  உள்ள அனுப்புங்க" என்றார்.

 சில வினாடிகளில் மெலிதாய் கதவைத் தட்டி அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தாள் பிரியா.

   டாக்டர் கிருஷ்ணன்  தனது கண்ணாடியை சரி செய்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தார்.

"பிரியா, உனக்கு என்ன பிரச்சனைன்னு சொல்லு, நான் உன்னை புரிஞ்சுக்கிறேன்,"  என்றார்.

பிரியா கொஞ்சம் தயங்கிட்டு, "டாக்டர், எனக்கு யாரையும் நம்ப முடியல. எப்பவும் தனியா இருக்கணும்  மாதிரியே தோணுது.

 நான் டென்த் படிக்கிறப்ப  ஒருத்தன் என்னை கிண்டல் பண்ணான். நான் கோபத்துல அவனை கன்னத்துல அறைஞ்சிட்டேன். அது பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.

அதுக்கு அப்புறம் எல்லாரும் என்னை தப்பாவே  நினைச்சு என்னை விட்டு ஒதுங்கிட்டாங்க. அந்த நாளிலிருந்து என்னால யாரையும் நம்ப முடியல " என்றாள். 

டாக்டர் கிருஷ்ணன், பிரியாவோட கண்ணைப் பார்த்து , "பிரியா, அந்த சம்பவம் உன்னோட மனசுல ரொம்ப காயத்தை ஏற்படுத்திருக்குன்னு எனக்குத் தெரியுது. 

 அந்த ஒரு  சம்பவம் உன்னோட மனசுல பயத்தை விதைச்சு, ஒரு பெரிய மரமா வளர்ந்துருச்சு. ஆனா, அந்த மரத்தை வேரோட பிடுங்கி எறியலாம். அதற்கு நாம் சிறிது முயற்சி எடுக்கணும்"  என்றார் .

பிறகு, டாக்டர் கிருஷ்ணன் பிரியாவுக்கு ஒரு கதையை சொன்னார். "ஒரு நாள் ஒரு விதை தரையில விழுந்தது. அது மெல்ல வளர்ந்து ஒரு மரமா மாறியது.

 அந்த மரத்தின் கிளைகளில் ஒரு பூ பூத்தது. அந்த பூவை ஒரு சிறுமி பறித்துக்கொண்டாள். பூ பறிக்கப்பட்டதால மரம் ரொம்ப வருத்தப்பட்டது. ஆனா, சிறிது நேரத்தில் மரம் புதிய பூக்களை பூத்தது. 

அதேபோல, உன்னோட மனசுல பூத்திருக்கும் பயம் என்ற பூவை நீயே பறித்து எறிய வேண்டும். உன்னோட மனசுல புதிய நம்பிக்கை என்ற பூவை பூக்க வைக்க வேண்டும்," 

டாக்டர் கிருஷ்ணனின்  வார்த்தைகள் பிரியாவின் மனதில் ஒரு புதிய ஒளியை  ஏற்றின. 

அவள் தன் கடந்த காலத்தை மறக்க முடியாது என்று  உணர்ந்தாள் . ஆனாலும் அதை மீறி முன்னேற வேண்டும் என்ற உறுதியும் அவளுக்கு ஏற்பட்டது.

பிறகு, டாக்டர் கிருஷ்ணன் பிரியாவின் பெற்றோரை மீண்டும் கூப்பிட்டு, பிரியாவின் நிலை பற்றி விளக்கினார்..

 "பிரியாவுக்கு மனதளவில் சில பிரச்சினைகள் இருக்கு. அதை நாங்க PTSD (Post-Traumatic Stress Disorder) அப்படின்னு சொல்லுவோம். 

 அதாவது எப்பவோ நடந்த ஒரு கசப்பான சம்பவத்தால ஏற்படும் ஒரு மன அழுத்தக் கோளாறு   .அப்படி பிரியாவுக்கும் நடந்திருக்கு.  

ஸ்கூல் டேஸ்ல ஒரு பையன் கிண்டல் பண்ணதனால ஏற்பட்ட பிரச்சனை அவ மனச பாதிச்சிருக்கு. அந்தக் கசப்பான சம்பவத்துக்கு அப்புறம்  அவளால எந்த ஆணையும் நம்ப முடியாமல் போயிருக்கு. 

அவளுக்கு சரியான சிகிச்சை கொடுத்தா நிச்சயமாக குணமாயிடுவா ," என்றார் .

 அவர்கள் டாக்டரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார்கள். பிரியாவுக்கு எல்லா உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார்கள்.

 "அவ, சரியானால்  போதும் டாக்டர் " என்று கண் கலங்கினாள்  பிரியாவின் அம்மா சாந்தி.

பல அமர்வுகளுக்குப் பிறகு, பிரியா தன் கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்தாள். டாக்டர் கிருஷணன் அவளுக்கு நிறைய பயிற்சிகளை கொடுத்தார். அவள் தன் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க உதவினார்.

ஒரு நாள், பிரியா மிகவும் மகிழ்ச்சியுடன் டாக்டர் கிருஷ்ணனைப் பார்க்க வந்தாள். 

"டாக்டர், நான் இப்போது நிறைய மாறிவிட்டேன். எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிருக்கு. தேங்க்ஸ்  டாக்டர்  ,"என்று நெகிழ்வுடன் சொன்னாள்.

டாக்டர் கிருஷ்ணன் புன்னகைத்து, "இது உன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி பிரியா. இனிமே எல்லாம் நல்லதாகவே நடக்கும் ," என்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பிரியாவின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின் வெளிச்சம் பரவத் தொடங்கியது!

Friday, 13 December 2024

பயத்தை வெல்வது எப்படி?- [பகுதி -5] -மதிபாலன்

 

நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது 

 உணர்ச்சி நெகிழ்வுத்தன்மை

 முதலில் நாம் நமது உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  • வரையறை: உணர்ச்சி நெகிழ்வுத்தன்மை என்பது மன அழுத்தமான சூழ்நிலைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ளும் திறன் ஆகும்.

  •  ஒரு தோல்வி வந்தால் அதைக் கண்டு துவண்டு போய் மூலையில் முடங்கி விடாமல், மீண்டும் எழுந்து செயல்பட வேண்டும்.

  •  இதுவே நம் நல்வாழ்வை பேணுவதற்கும்  தடைகளிலிருந்து மீண்டு  வருவதற்கும் வழியாகும்.

  • முக்கியத்துவம்: உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையை வளர்த்துக்கொள்வது சவால்களைச் சமாளிக்க உதவுகிறது, மன அழுத்தத்தின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் உங்கள் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உணர்ச்சி நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது

  1. நேர்மறையான தன்னுரையாடல்

  • வழிமுறை: எதிர்மறையான எண்ணங்களை நேர்மறையான உறுதிமொழிகளால் மாற்றுங்கள் . சவாலான காலங்களில் உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்

  • பயிற்சி: "நான் திறமையானவன்," "நான் இதைச் சமாளிக்க முடியும்," அல்லது "நான் வலிமையானவன்" போன்ற உறுதிமொழிகளின் பட்டியலை உருவாக்கவும்.

  •  உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்? இப்போது முடியாவிட்டால் எப்போது முடியும்? - என்பது புகழ்பெற்ற ஜப்பானிய வாசகம்.

  • பயம் தோன்றும்போது  குறிப்பாக இவற்றை தினமும் உங்களுக்கு நீங்களே மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.

  1. நன்றியுணர்வு பயிற்சி

  • வழிமுறை: நீங்கள் நன்றியுள்ள விஷயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவது உங்கள் மனநிலையை எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு மாற்றும்.

  •  "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு "- என்பது திருக்குறள்.

  • பயிற்சி: நீங்கள் எதற்கெல்லாம் யாருக்கெல்லாம்  நன்றியோடு இருக்கிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள்.

  • ஒவ்வொரு நாளும் நீங்கள் நன்றியுள்ள மூன்று விஷயங்களை எழுதுங்கள். இந்தப் பயிற்சி உங்கள் வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை எடுத்துக்காட்டுவதன் மூலம் பயம் மற்றும் கவலையை எதிர்த்துப் போராட உதவும்.

  1. உணர்ச்சி ஒழுங்கமைப்பு 

  • வழிமுறை: உங்கள் உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் நிர்வகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

  • பயிற்சி: பயத்தால் நிறைந்திருக்கும் போது, ​​நிறுத்தி சில முறை ஆழமாக சுவாசியுங்கள். 

  • நீங்கள் உணரும் உணர்ச்சியை அடையாளம் கண்டு, அதைத் தூண்டியது எது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

  •  எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக எவ்வாறு நம் மன அமைப்பை பலப்படுத்தலாம்  என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

 உடல் நெகிழ்வுத் தன்மை 

 பயத்தை நிர்வகிப்பதில் உடல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • இணைப்பு: உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் இவை இரண்டும் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடலைக் கட்டமைக்கிறது.

  •  ஆரோக்கியமான உடல் இருந்தால்  மன அழுத்தம் மற்றும் பயத்தை சிறப்பாக சமாளிக்க முடியும்.

  • பலன்கள்: வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் பயம் மற்றும் மன அழுத்தத்தை கையாளும் உங்கள் திறனை மேம்படுத்துகின்றன.

உடல் நெகிழ்வுத்தன்மையை வளர்ப்பது

1.தொடர்ச்சியான உடற்பயிற்சி

  • வழிமுறை:  உடற்பயிற்சி செய்வது   எண்டோர்பின் என்னும் ஹார்மோனை  வெளியிடுகிறது, இது மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கிறது.

  • பயிற்சி: உங்கள் தினசரி வழக்கத்தில் நடப்பது, ஓடுவது, யோகா அல்லது பளு தூக்குவது  போன்ற செயல்பாடுகளை இணைக்கவும்.

  •  வாரத்தில் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள்.

  1. ஆரோக்கியமான உணவு

  • வழிமுறை: உங்கள் உடலை சீரான,சரிவிகித உணவோடு வளர்ப்பது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

  • பயிற்சி: பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளுவதில் கவனம் செலுத்துங்கள்.

  •  அதிகப்படியான காபி, தேநீர்  மற்றும் சர்க்கரையைத் தவிர்க்கவும். இவை செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு உடல் எடையையும் அதிகரிக்கும்.

  1. போதுமான தூக்கம்

  • வழிமுறை: உங்கள் உடலும் மனதும் ஓய்வெடுத்து மீளுவதற்கு தூக்கத்துக்கு  முன்னுரிமை கொடுங்கள்.

  •  தூக்கத்தின்போதுதான் இழந்த  சக்தி மீட்கப்பட்டு  வலிகள் குறைகின்றன.

  •  உடலின் பாதிக்கப்பட்ட பகுதிகளின்  பராமரிப்பு நடைபெற்று காயங்கள் ஆறுகின்றன மற்றும் நோய்கள் குணமாகின்றன.

  • பயிற்சி: ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழுந்திருப்பதன் மூலம் வழக்கமான தூங்கும் பழக்கத்தை  ஏற்படுத்துங்கள். 

  • புத்தகம் படிப்பது அல்லது மனம் மற்றும் உடலை தளர்வாக வைத்திருக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.   

 முன்னேற்ற மனப்பாங்கை  வளர்ப்பது


வளர்ச்சி மனப்போக்கு

  • நிலையான மனப்போக்கு: நமது திறமைகள் மற்றும் புத்திசாலித்தனம் இவை நிலையானவை மற்றும் மாறாதவை என்று உணருங்கள்.

  • வளர்ச்சி மனப்போக்கு:   விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் உங்கள் திறன்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியும் என்று நம்புங்கள்.

வளர்ச்சி மனப்போக்கை ஊக்குவித்தல்  

  1. சவால்களை ஏற்றுக்கொள்ளுங்கள் 

  • வழிமுறை: சவால்களை அச்சுறுத்தல் என்று நினைக்காமல் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதுங்கள்.

  • பயிற்சி: சவால்களை எதிர்கொள்ளும்போது, ​​ அவை நாம் புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு, நம்மை  மேம்படுத்துவதற்கான வாய்ப்பு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  •  வாழ நினைத்தால் வாழலாம்!                    வழியா இல்லை பூமியில்?  - என்னும் திரைப்படப் பாடலை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா!

  •  நீங்கள் சிரமங்களை சமாளித்து வலுவாக வளர்ந்த கடந்த கால அனுபவங்களைப் பற்றி சிந்தியுங்கள். இதனால் மனதில் நம்பிக்கை ஏற்படும்.

  1. விமர்சனத்திலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

  • வழிமுறை: விமர்சனங்கள் எல்லாம் உங்களை தகர்க்க வந்தவை அல்ல என்பதை உணருங்கள். 

  • உங்கள் திறன்களையும் அறிவையும் மேம்படுத்தி மேலும் பலம் உள்ளவராக மாற்ற வந்தவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் 

  • பயிற்சி: நம்மை ஒருவர் விமர்சித்தால், ​​அதை தனிப்பட்ட முறையில் அவமானமாக எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய    நுண்ணறிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

  •  நீங்கள் வளரும்போது விமர்சனங்கள் தானே உதிர்ந்து விடும். 

  • மேலே சொன்ன வழிமுறைகளையும் பயிற்சி முறைகளையும்   பின்பற்றி பயங்களை அகற்றுங்கள். வெற்றியை நோக்கி வீர நடை போடுங்கள்!

Thursday, 12 December 2024

ஹைட்ரஜன் வாகனம்- மதிபாலன்

 தற்போது தயாரிப்பில் இருக்கும் ஹைட்ரஜன் வாகனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் செல் (Hydrogen fuel cell) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

 ஹைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதுதான் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பம். இது எப்படி வேலை செய்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

எரிபொருள் செல்   வேலை செய்யும் விதம்


ஒரு எரிபொருள் செல்லில் இரண்டு முக்கிய பாகங்கள் இருக்கும்: அனோடு மற்றும் கேதோடு.

  • அனோடு: இதில் ஹைட்ரஜன் வாயு செலுத்தப்படும்.

  • கேதோடு: இதில் காற்றிலிருந்து ஆக்ஸிஜன் எடுத்துக்கொள்ளப்படும்.

      *எலக்ட்ரோலைட்: இந்த           இரண்டு பாகங்களுக்கும் இடையில் ஒரு சவ்வு( Polimer electrolyte membrane)இருக்கும். இந்த சவ்வு ஹைட்ரஜனைப் பிரித்து, அதிலிருந்து எலக்ட்ரான்களை எடுத்துக்கொள்ளும். 

இந்த எலக்ட்ரான்கள் ஒரு மின்சுற்று வழியாக சென்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் இறுதியில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இணைந்து தண்ணீர் உருவாகிறது.

ஹைட்ரஜன் எரிபொருள் செல்லின் நன்மைகள்:

  • சுத்தமான ஆற்றல்: இந்த முறையில் மின்சாரம் தயாரிக்கும்போது எந்தவித மாசுக்களும் வெளியாகாது.

  • அதிக திறன்: பாரம்பரிய எரிபொருள் வாகனங்களை விட அதிக தூரம் செல்ல முடியும்.

  • வேகமாக நிரப்பலாம்: பெட்ரோல் நிரப்புவது போலவே, ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்களையும் வேகமாக நிரப்பலாம்.

தற்போதைய சவால்கள்:

  • ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்கள் குறைவு: இன்னும் ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்கள் போதுமான அளவு இல்லை.

  • விலை அதிகம்: ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.

  • ஹைட்ரஜன் தயாரிப்பு: பெரும்பாலான ஹைட்ரஜன் இன்னும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி அதிக அளவு ஹைட்ரஜன் தயாரிப்பது கடினம்.

எதிர்காலம்:

பல கார் நிறுவனங்கள் ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

 எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடைந்து, விலை குறைந்து, ஹைட்ரஜன் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.