Thursday, 7 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- அத்தியாயம் 14- முழுமையை உணர்தல்!

எல்லையில்லா ஆனந்தம் என்பதை மனிதன் தான் பெற்றுள்ள பொருட்கள் மற்றும் வசதிகளை வைத்து அடைய முடியாது.

 வெளிப்புறப் பொருட்களால் கிடைக்கும் இந்த வசதி அல்லது இன்பம் நிலையானது அல்ல. அவை இருக்கும் வரை தரும் மகிழ்ச்சி அதை விட்டு விலகும் போது இல்லாமல் போய்விடுகிறது. அல்லது ஒரு வெறுப்பு ஏமாற்றம் வந்து விடுகிறது.

 எல்லையில்லா ஆனந்தம் என்பது ஐம்புலன் உணர்ச்சி நுகர்வுகளால் கிடைக்கக்கூடியது அல்ல. பின் எப்படி உருவாகும்?

 எல்லையற்ற இறைவன் நம்மோடு இருக்கிறார்.தான் இறைவனின் ஓர் அம்சம் இன்று மனிதன் உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் ஏற்படுகிறது.

 இறைவனோடு இணைப்பு  ஏற்படும் போது தானும் இயற்கையும் இறைவனும் வேறல்ல என்று முழுமையாக உணர்ந்து கொள்ளும் போது அந்த பேரானந்தத்தின் கதவுகள் திறக்கின்றன.

   உடலுக்குள் அடைபட்டுள்ள   இந்த உயிர் வாழ்க்கை முடிந்தாலும் தனக்கு முடிவில்லை. தான்  முடிவற்ற  ஓர் ஆன்மா என்பதை உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் சூழ்ந்து பரவுகிறது.

 தான்  என்பது ஒரு தனித்த அடையாளம் என்பதை மறந்து உருவமற்ற இயற்கை சக்தியில் கலக்கும் போது அதே சமயம் தான் இருக்கிறோம் என்பதை உணரும் போது எல்லையில்லா ஆனந்தம் அதுதான் என்பது உணரமுடியும்.

 வரம்புகள் இல்லாத பிரபஞ்ச வெளியின் எல்லையிலும் நாம் இருக்கிறோம் என்று உணரும் போது பேரானந்தம் முகிழ்க்கிறது.

  ஆனால் இந்த நிரந்தர ஆனந்தம் கிடைப்பதற்கு எது தடையாக இருக்கிறது ?

   மனிதன் தனது ஆசைகள் பிரச்சனைகள் கவலைகள் இவற்றுக்குள்ளேயே உழன்று கொண்டிருப்பதால்தான் இந்த பேரானந்தத்தை  உணர முடியாமல் இருக்கிறது.

 மனிதன் தன் அறிவால்   எல்லாவற்றையும் சாதித்து விடலாம்  என்று நினைக்கும் அறியாமையை விடவேண்டும்.

 எல்லையற்ற பேரறிவின் மூலமே இந்தப் பிரபஞ்சமும் தானும் இயக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்படி உணர்ந்து கொள்ளும் போது எல்லையில்லா ஆனந்தம் வளர்கிறது.

 தான் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும் போது தன்னால் எல்லாம் முடியும் என்று நினைக்கும் போது தன் அறிவை விட மேலானது ஒன்றும் இல்லை இன்னும் அறியாமையில் இருக்கும் போது இந்தப் பேரானந்தம் கிடைப்பதில்லை.

 பிரபஞ்ச சக்தியில் அல்லது இறைசக்தியின் முன்பு நாம் அணுவுக்கும் சிறிதானவர்கள் என்னும் புரிதல் விளையும்போது   இறை சக்தியின் முன்பு ஒரு முழு சமர்ப்பித்தல் மனிதனுக்கு ஏற்படுகிறது.

  அப்போது தான் அடையும் உலகியல் துன்பங்களுக்கு ஒரு முடிவு தன்னால் கிடைக்கக்கூடியது அல்ல என்னும் நிதர்சனம் புரிந்து விடுகிறது.

 தன் அறிவால்  எட்டமுடியாத பிரச்சனைகளுக்கான தீர்வை இறைவன் வழங்க முடியும் என்னும் தெளிவு பிறக்கும் போது  எல்லையில்லா ஆனந்தம் ஆரம்பமாகிறது.

 உலகம் எல்லாம் ஓர் அணியில் திரண்டு நின்றாலும் இறைவன் யாருடன் இருக்கிறாரோ அவருக்கு அச்சம் ஏற்படுவதில்லை. இயற்கையின் பாதுகாப்பு தன்னைச் சுற்றி இருக்கிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணரும்போது கவலைகள் எதுவும் இல்லாமல் போகின்றது.

 இவ்வுலகில் ஒவ்வொரு நிகழ்வும் காரணம் இல்லாமல் நடக்கவில்லை. இந்த மனித குலத்தை நல்வழிப்படுத்தவும் துன்பங்களிலிருந்து விடுபடவும்  துன்பங்கள் இருந்தாலும் சோர்ந்து விடாமல் தொடர்ந்து வாழ்க்கை நடத்தவும் இறைவன் அல்லது இயற்கை சில பாதைகளை காட்டுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 அந்தப் புரிதல் எளிதில் கிடைத்துவிடாது. பிரச்சனை மற்றும் துன்பங்களுக்கு தனது அறிவால் உழைப்பால் முயற்சியால் தீர்வு கிடைக்காத போது மனிதன் இறைவனை நாடுகிறான்.

 தனக்கு மேலான எல்லையற்ற இறையாற்றலின்  பேரறிவு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்துவிடும்   என்பதை ஒரு மனிதன் காணும்போது பேரானந்தம்  உள்ளுக்குள் நிறைகிறது.

 உலகப் போராட்டங்களால் இருந்த உள்ளத்தின் கொந்தளிப்பு மறைந்து போகிறது. இறப்பைப் பற்றிய கவலையும் பயமும் இல்லாமல் போகிறது. இதைத்தான் விடுதலை அல்லது முக்தி என்கிறோம். இந்த உலகில் உயிருடன் இருக்கும்போதே  இந்நிலையை அடைவது மிகவும் சிறப்பு.

 நான் நிரந்தரமானவன் என்பதை உணர நிரந்தரமான எல்லையற்ற  பிரபஞ்ச சக்தி உதவுகிறது.

அதுதான் கடவுள் என்று எனக்குப் புரிகிறது!
உங்களுக்கு?







Wednesday, 6 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- அத்தியாயம்-13 - உள்ளத்தில் உள்ளது உயர்வு!

உள்ளம் தான் நம்மை யார் என்று வரையறை செய்கிறது. அடையாளம் காட்டுகிறது. 

நாம் என்ன நினைக்கிறோம் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பதெல்லாம் உள்ளத்தைப் பொறுத்தே அமைகின்றன. 

 கோபம்,பயம்,அன்பு,வெறுப்பு கருணை,பொறாமை,உற்சாகம், சோர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் நம் உள்ளத்திலிருந்தே புறப்படுகின்றன.

 உடல் தூய்மையோடு
 நமது உள்ளமும் தூய்மையாக இருந்தால் பிரபஞ்ச சக்தியை பெருமளவு ஈர்ப்பது சத்தியமாகும்.

 உள்ளத்தை எப்படி தூய்மை செய்வது?

அறம், தீங்கின்மை  இந்த இரண்டையும்   பின்பற்ற வேண்டும்.
 
சமுதாய நியதிகளுக்கு ஏற்ப நேர்மையாக வாழ்வதே அறம். அறத்துடன் எண்ணம், சொல், செயல் இவற்றால் யாருக்கும்  தீங்கில்லாமல் வாழ வேண்டும். 

 எண்ணத்தின் விதைதான் சொல்லாகவும் செயலாகவும் முளைக்கிறது. சொல்லும் செயலும் முதலில் எண்ணமாகத்தான் உருவாக்கின்றன. எனவே எண்ணத்தை சரியாக வைத்துக் கொண்டால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும்.

 நாம் எப்போதும் பொய்யை தவிர்த்து உண்மையை பேச வேண்டும். பொய் எப்போதும் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும்.

 மேலே சொன்னபடி நேர்மையாகவும் தீங்கின்றியும் உண்மையோடும் வாழ்ந்தால் உள்ளம் தூய்மையடையும்.

 இப்படி உடல் உள்ளம் இரண்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் போது பிரபஞ்ச சக்தியை பெருமளவு ஈர்ப்பது எளிதாகும்.

பிரபஞ்ச சக்தியை உள்வாங்கும் ஆண்ட்டனா  (Antenna) போல நமது உச்சந்தலைப்பகுதி செயல்படுகிறது. அதனால்தான் முதுகுத்தண்டை  நேராக வைத்து தியானம் செய்ய வேண்டும்.

 தியானத்தின் போது உச்சந்தலை வழியாக ஈர்க்கப்படும் பிரபஞ்ச சக்தியை 
 முழுவதும் உள்வாங்க வேண்டும் என்றால் நம் உடல் சுத்தமாக இருக்க வேண்டும்.
அதே சமயம் நம் உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

 இவை இரண்டும் தூய்மையாய் ஒத்திசைவில் இயங்கும்போது பிரபஞ்ச சக்தியோடு நமக்கு நேரடிப் பிணைப்பு ஏற்படும். இதை நிரந்தரமாக தக்க வைத்துக் கொண்டால்  தெய்வீகத்தில் திளைக்கலாம்.

 உடல் தூய்மை குறைந்தால் பிரபஞ்ச சக்தியை தேக்கி வைக்கும் திறன் குறையும். உள்ளத் தூய்மை குறைந்தால் தேக்கி வைத்த சக்தி வெகு விரைவாக வெளியேறிவிடும்.

 தியானத்தோடு யோகப் பயிற்சியும் சேரும் போது பிரபஞ்ச சக்தியின் தொடர்பு வெகு விரைவில் ஏற்படும். அதன் காரணமாக  அன்பு,நன்றி, கருணை போன்றவை  நமக்குள் பொங்கிப் பெருகும். 

   பிரபஞ்ச சக்தியின் நிரந்தர    இணைப்புக்கு குண்டலினி யோகம் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. 

பல்வேறு வகையான ஆசனங்கள், பிராணாயாமம், மந்திரங்கள் மற்றும் தியானத்தின் மூலம் உயிர் சக்தியை முதுகுத்தண்டின் வழியாக உச்சந்தலைக்கு ஏற்றுவது குண்டலினி யோகத்தின் சிறப்பு.

 இதனை தகுந்த பயிற்சி உள்ள குருவின் மூலம் கற்பது முக்கியம். முறையான வழிமுறைகள் தெரியாமல்  உயிர் சக்தியை உச்சந்தலைக்கு ஏற்றினாலும்  பிரபஞ்ச சக்தி அதிக அளவில் உள்ளிறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 ஆனால் உச்சந்தலைக்கு ஏறிய குண்டலினியை கட்டுப்பாட்டில் வைக்கவும் அல்லது கீழிறக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இல்லையெனில்  மனக்குழப்பம், மனநல பாதிப்பு  போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படக்கூடும்  என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இவற்றை சரி செய்ய வேண்டுமென்றால் பயிற்சி பெற்ற குருவின் துணை தேவைப்படும். 

 சில நேரங்களில் இறைவனே குருவாக இருந்து வழி காட்டுவார். அப்போது நமக்கு எந்த கவலையும் இல்லை. சுமையெல்லாம் இறக்கிவிட்டு சுகமாக வாழலாம்!

  




Monday, 4 November 2024

காதல் என்பது பொழுது போக்கா?- மதிபாலன்


இன்றைய வேகமான உலகில், காதல் என்பது ஒரு தற்காலிக விருப்பமாகிவிட்டது. நாம் மின்னல் வேகத்தில் சுயவிவரங்களை ஸ்க்ரோல் செய்து, உடனடி திருப்தியைத் தேடுகிறோம். 

ஆனால், உண்மையான காதல் காலத்தையும் தூரத்தையும் கடக்கும் ஒரு உண்மையான பிணைப்பாகும். அது புரிந்து கொள்ளுதல், அக்கறை  மற்றும் தளராத ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

நாம் காதலை ஒரு பொருளாகப் பார்க்கிறோம், அதை வாங்கலாம், திருப்பி அனுப்பலாம் அல்லது உடைக்கலாம். ஆனால், காதல் என்பது ஒரு உணர்வு, ஒரு அனுபவம். அது வளர்கிறது, மாறுகிறது, ஆனால் அது ஒருபோதும் இறக்காது.

நாம் காதலை ஒரு விளையாட்டாகவும் பார்க்கிறோம். யார் அதிகமாக காதலிக்கிறார்கள், யார் குறைவாக காதலிக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். ஆனால், காதல் என்பது ஒரு போட்டி அல்ல. அது ஒரு ஒத்துழைப்பு. அது இரண்டு பேரும் ஒன்றாக வளரும் ஒரு பயணம்.

நாம் காதலை ஒரு பொருளாக, ஒரு விளையாட்டாக பார்க்கும்போது, நாம் அதன் உண்மையான அர்த்தத்தை இழக்கிறோம். காதல் என்பது ஒரு அழகான, ஆழமான, மற்றும் நிறைவு தரும் அனுபவம். அது நம் வாழ்வில் மிகவும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

நாம் காதலை உண்மையாகப் பார்க்கத் தொடங்கும்போது, நாம் அதை நன்கு புரிந்துகொள்ள முடியும். நாம் அதை மதிக்கவும், கொண்டாடவும் முடியும். நாம் அதை நம் வாழ்வில் முக்கியமான ஒன்றாக ஆக்குகிறோம்.

இனி, காதலை ஒரு பொருளாகவோ, விளையாட்டாகவோ பார்க்க வேண்டாம். அதை ஒரு அழகான, ஆழமான, மற்றும் நிறைவு தரும் அனுபவமாகப் பாருங்கள். அதை உங்கள் வாழ்வில் முக்கியமான ஒன்றாக ஆக்குங்கள்.

Sunday, 3 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)- அத்தியாயம்-12 - பிரபஞ்ச சக்தியை பெறுவது எப்படி?

எங்கிருந்து வருகிறது என்று அறிவியலால் சரியாக சொல்ல முடியாத பெரும் சக்திதான் பிரபஞ்ச சக்தி (cosmic energy) ஆகும்.

இது சூரிய மண்டலத்துக்கு வெளியிலிருந்து வருவது. 
ஆயுள் முடிந்த சக்தி வாய்ந்த தூரத்து நட்சத்திர வெடிப்பிலிருந்து இது வரலாம்.
மாபெரும் கருந்துளை இதை வெளியிடக்கூடும்.இப்படி அறிவியல் சொல்கிறது.

 ஆனால் ஆன்மிகம் என்ன சொல்கிறது என்றால்,இதுதான் கடவுளிடமிருந்து வரும்  உயிர்சக்தி. 
கரு உருவாகும்போது இந்த பிரபஞ்ச சக்திதான் உயிரை உள்செலுத்துகிறது. புதிய உயிர் உருவாகிறது. கரு வளரத் தொடங்குகிறது.
 
 சரி இந்த பிரபஞ்ச சக்தியை எப்படி பெற்றுக்கொள்வது என்னும் கேள்வி எழும்.
தியானத்தின் மூலம்  இச்சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்ந்த முறைப்படியான தியானம்  அதிக பயனைத் தரும்.

ஒரே மாதிரி தியானப் பயிற்சிகளில் எல்லாரும் ஈடுபட்டாலும் அனைவருக்கும் ஒரே அளவு பிரபஞ்ச சக்தி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அது அவர்களின் உடல் மற்றும் மனப்பக்குவத்தை பொறுத்து அமையும்.

 உடலும் உள்ளமும் எந்த அளவு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவு அதிகமான பிரபஞ்ச சக்தியை உடல் ஈர்த்துக் கொள்ளும். எனவே பிரபஞ்ச சக்தியை பெற வேண்டுமானால் உடலையும் உள்ளத்தையும் மிக தூய்மையாக பேணிக் காக்க வேண்டும்.

 உடல் தூய்மை என்பது உள்ளும் புறமும் அனைத்து உறுப்புகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வது. குளிப்பதால் உடலின் வெளிப்புற தூய்மையைப் பெறலாம்.

 உள்ளுறுப்புகளை தூய்மையாக வைத்துக் கொள்ள சிறிது கடின முயற்சி தேவைப்படும். அதில் முக்கியமானது கழிவுகளை வெளியேற்றுதல்.

 இதில் மூன்று கழிவுகள் மிக முக்கியமானது. அவை சிறுநீர் மலம் மற்றும் வியர்வை. இவை மூன்றும் சரியாக வெளியேற வேண்டுமென்றால் தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.

 உணவு செரிமானத்துக்கு தண்ணீர் அவசியம். தேவையான தண்ணீர் இருந்தால் மட்டுமே இரைப்பை உணவை நன்றாக அரைத்துக் கூழாக மாற்றும். இந்த சத்துப் பொருளே ரத்தமாக மாற்றம் பெறுகிறது. 

  தேவையற்ற உப்பு,,யூரியா போன்ற பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்ற தண்ணீர் தேவைப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் செல்களில் இருந்து நேரடியாக கழிவை வியர்வையாக வெளியேற்ற தண்ணீர் அவசியம்.

 சரியாக செரிமானம் நடக்க உடலுக்கு போதிய வெப்பம் வேண்டும். அது உடற்பயிற்சியின் மூலமோ  அல்லது வேலையின் மூலமோ கிடைக்கும்.

 எனவே வேலை செய்து, நன்றாக உணவு உண்டு,தேவையான தண்ணீரும் அருந்தினால் இம்மூன்று  கழிவுகளும் தங்காமல் வெளியேறும். உண்ட உணவு முழுமையாக செரிமானம் ஆகி ரத்தத்தில் கலக்கும்.  ரத்தம் சுத்தமாகும்.  

 இதைத் தவிர கண்,காது, மூக்கு தொண்டை வழியாகவும் கழிவுகள் வெளியேறும் என்று நமக்குத் தெரியும்.

 இப்படி உள் மற்றும் வெளியுறுப்பு தூய்மையில் தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் நுரையீரல் பலம் மற்றும் தூய்மையில் காற்று முக்கிய வேலை செய்கிறது.

 உடற்பயிற்சி செய்யும் போது தேவையான ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு சென்று வர வேண்டும். உறங்கும் போதும் காற்றோட்டமான இடத்தில் உறங்க வேண்டும்

உடற்பயிற்சி செய்யாதவர்கள் எனில் முறையாக யோகப் பயிற்சி மற்றும் மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் நுரையீரல் சுத்தமாகும், பலம் பெறும். தேவையான ஆக்சிஜன் ரத்தத்தில் கலக்கும். அதன் மூலம்தான்  ரத்தத்தில் உள்ள சத்துப் பொருள் தலை முதல் கால் வரை சீராக சென்று சேர்கிறது.
 
இப்போது உடலுக்கு தேவையான ஐம்பொருள்களில் நான்கு பொருள்களை தந்து விட்டோம். அவை உணவு  (நிலம்),    தண்ணீர், பால், பழரசம் போன்றவை ( நீர் ), உழைப்பு அல்லது உடற்பயிற்சி (நெருப்பு, காற்று ).

 ஐம்பொருளில் இன்னும் ஒன்று மிச்சம்  இருக்கிறது. அதுதான் ஆகாய சக்தி . அது ஆழ்ந்த உறக்கத்தின் போது கிடைக்கிறது.
 
பிரபஞ்ச சக்தி (cosmic energy)என்று ஆரம்பத்தில் சொன்னோமே, அது
இந்த ஆகாய சக்திதான். 

உடல் செல்களை புதுப்பிப்பதும், காயங்களை ஆற்றுவதும், தெளிவான சிந்தனை தருவதும் இந்த பிரபஞ்ச சக்திதான்.

 இது உறக்கத்தின் போது ஓரளவு கிடைத்தாலும் தியானத்தின் போது பெருமளவு கிடைக்கிறது. இந்த சக்திதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கிறது.

 இரண்டு நாள் தூங்காமல் இருந்தால் சோர்ந்து விழுந்து விடுவது அதனால் தான். நான்கு  நாள் தூங்காமல் இருந்தால் சிந்தனை குழப்பம் வரும். இருபது நாட்களுக்குமேல் தூங்காமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும்!

 சரி. இதுவரை ஐம்பொருளையும்  உடலுக்கு கொடுத்து பலமாகவும்  சுத்தமாகவும் வைத்து விட்டோம் . இது பிரபஞ்ச சக்தியை பெறுவதற்கு தேவையான  பாதி வேலைதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

 மீதி  வேலைதான் மிகவும் கடினமானது மற்றும் சிக்கலானது. அதுதான் உள்ளத்தை சுத்தம் செய்வது!
 

Saturday, 2 November 2024

எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம் -11- பேராற்றலின் பிணைப்பு!

மனிதன் வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான்.போட்டி பொறாமை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 
உலகத்தின் மக்கள் தொகை
820 கோடியை எட்டிவிட்டது.

 மக்கள் தொகை வளரும் அளவுக்கு பூமியின் வளங்கள் உயர்ந்து கொண்டே போகிறதா என்றால் இல்லை.
 
நாகரீக வளர்ச்சியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டோம். குடிக்கத் தண்ணீர் இல்லை.   நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.
பாலைவனப் பரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

 புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. 

அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டிருக்கிறோம். காலநிலை மாற்றங்கள் கவலை கொள்ள வைக்கிறது.

 இத்தகைய சூழலில் எல்லையில்லா ஆனந்தம் சாத்தியமா? 
ஆம்...சாத்தியமே!

 அதற்கு நம் மனம் விரிவடைய வேண்டும். ஒருவரே எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளும் பேராசையை விடவேண்டும்.  பேராசையால்  யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் மனநிலை மாற வேண்டும்.
 
 நமது தேவை எவ்வளவு  என்று நினைக்கிறீர்கள்?

 வயிறு நிறையும்  ஒருவேளை உணவுக்கு மூன்று கைப்பிடி அரிசி போதும். முழுக்க மறைக்கும் ஓர் உடைக்கு மூன்று மீட்டர் துணி போதும். ஒரு மனிதர் வாழ்வதற்கு மூன்று சதுர மீட்டர் அறை போதும்.

 இத்தனை குறைவான தேவைகளுக்கு எத்தனை போராட்டங்கள் நடக்கின்றன.
 பல கோடி பேர், ஒருவேளை உணவுக்கே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அன்றாட தேவைகளுக்காக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

 சில கோடி பேர் மட்டும் செழிப்பில் திளைக்கிறார்கள். எங்கெல்லாம் சுரண்ட முடியுமோ அங்கெல்லாம் சுரண்டி பதுக்கி வைக்கிறார்கள்.

 போட்டிகளில் தான் உலகம் போய்க்கொண்டிருக்கிறது. யார் என்னவாளால் எனக்கென்ன, நான் வாழ்ந்தால் போதும் என்னும் சுயநலம் சொக்கட்டான் ஆடிக் கொண்டிருக்கிறது.

 இந்தச் சூழலில் எல்லையில்லா ஆனந்தம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

 எல்லையில்லா ஆனந்தம் நம் இதயத்தில் இருக்கிறது. எல்லோரையும் மனித நேயத்தோடு பார்க்கும் எண்ணத்தில் இருக்கிறது.

 போதும் என்ற மனதோடு பகிர்ந்து கொள்ள முன்வந்தால் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். ஆனந்தம் எல்லோரையும் அரவணைக்கும்.
  
ஒவ்வொரு நாடும் பாதுகாப்புக்காக தம் நாட்டின் வருமானத்தில் பெரும் பகுதியை செலவிடுகிறது. பல நாடுகளுக்கு போர்க்கருவிகள் வாங்கிக் குவிப்பதற்கே பொழுது சரியாக இருக்கிறது.
  
 உண்மையில், நாடுகளின் எல்லைக் கோடுகள் எல்லாம் கற்பனையானவை . இது எனது எல்லை,அது உனது எல்லை என்பது கூட மாபெரும் கற்பனைதான்.

 உலக வரலாற்றில் பல நாடுகள் உடைந்திருக்கின்றன. பல நாடுகள் இணைந்திருக்கின்றன. ஏன் வரம்புகள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன.

 எல்லோரும் நம் உறவு என்கின்ற பார்வை பெறும்போது ,உலகம் என்பது ஒரு நாடாய் தெரியும். நாடு மட்டுமல்ல. பிரபஞ்சத்தில் எங்கெங்கோ வாழ்கின்ற எல்லா உயிர்களும் நம்மோடு பிறந்தவர்கள் என்னும் நிதர்சனம் புரியும்.

 நாம் உள்ளத்தை விரிவாக்கி வளர்ந்து கொண்டே போகும்போது பிரபஞ்சத்தின் எல்லை கூட நமதென்றே தோன்றும். அத்தகைய விரிவாக்கத்தை தியானம் வழங்கும்.  

 தியானம் நம்மை அமைதிக்குள்  அழைத்துச் செல்லும். தெய்வீகத்தின் கதவுகளை திறந்து விடும் ஆற்றல் தியானத்துக்கு இருக்கிறது.

 நம் வீட்டு நீர்த்தொட்டியோடு பிரபஞ்சப் பெருங்கடலை இணைத்து விட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

 நமது அறிவாற்றல் என்பது நீர்த்தொட்டி என்றால், கடவுள் என்பது பிரபஞ்சப் பெருங்கடல். அதனோடு நம்மை இணைக்கும் குழாய்தான்  தியானம்.

 தியானத்தின் வழியே தெய்வீக நிலையை அடைய முடியும்.

 உள்ளத் தூய்மையும்  நன்னெறிகள் நிறைந்த வாழ்க்கை முறையையும் கைக்கொள்ளும்போது இறைப் பேராற்றலோடு நம் இணைப்பு மேம்படும். அப்போது எல்லையில்லா ஆனந்தம் நம் இயல்பாக மாறிவிடும்.

சடங்குகள் மற்றும் வழக்கங்களை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், எல்லா மதங்களும் இதைத்தான் போதிக்கின்றன.

 கடவுளை அடைவதுதான் மதங்களின் நோக்கம். உலக வாழ்க்கையை உன்னத நெறிகளோடு வாழ்ந்தால் உலகம் நம்மையும் கடவுளாய் பார்க்கும்! 



எல்லையில்லா ஆனந்தம் (Bliss Beyond Boundaries)-அத்தியாயம்-10- வளர்வது மகிழ்ச்சி! வழங்குவது ஆனந்தம்!


வியர்வை சிந்தி பயிர் வளர்த்து விளைச்சல்  காண்பது மகிழ்ச்சி. பசித்தவர்க்கு ஒரு பிடி சோறு வழங்கினால் வருவது ஆனந்தம்.

 உண்மையாய் உழைத்து உயரம் எட்டுவது மகிழ்ச்சி. உடன் இருப்பவர்றக்கு உதவி செய்து உயர வைப்பது ஆனந்தம்.

 வசதி வந்தால் வளமாய் வாழ்வது  மகிழ்ச்சி. வறுமை வந்தாலும் நேர்மை மாறாமல் வாழ்ந்து காட்டுவது ஆனந்தம்.

 ஆனந்தம் என்பது இருளின் நடுவே ஒளியாய் இருப்பது. பாலைவனத்தையும்    சோலை வனமாக்கும்  மழையை போன்றது.

 எங்கெல்லாம் நீங்கள் பயன்படுகிறீர்களோ , அங்கெல்லாம் நீங்கள் தேயவில்லை, வளர்கிறீர்கள்.

 ஆம்.உதவி என்பது உன்னத குணம். அதுதான் உங்களை உயரத்தில் ஏற்றி விடும் ஏணிப்படி. சிலர் உயரத்தில் உள்ளவர்களை கீழே இழுப்பார்கள். ஏன் இப்படி?

 நண்டுகள் இருக்கும்  பானையை மூடத் தேவையில்லை. அதில் எதுவும் மேலேறி தப்பித்ததாய் சரித்திரம் இல்லை. ஏனெனில் மேலே ஏறுவதை கீழே இருப்பது இழுத்துத் தள்ளும். தானும் மேலேறாது. மற்றதையும் ஏற விடாது.

 நாம் நண்டுகள் அல்ல, மனிதர்கள். 

அடுத்தவர் மரத்தை வெட்டி தள்ளுவதால், நம் வீட்டு மரம் வளர்ந்து விடாது. நம் வீட்டு மரம் வளர வேண்டுமானால் நீர் ஊற்ற வேண்டும். நீர் என்பது உழைப்பு.

 உச்சம் அடைந்தவர் அடுத்தவர் உயர உற்சாகம் கொடுப்பது ஆனந்தம். பள்ளத்தில் இருப்பவர் மேலே ஏறி வர படிகள் செதுக்குவது ஆனந்தம்.

 சேர்த்துக்கொண்டே போவதால் ஆனந்தம் வருவதில்லை. சேர்த்து வைத்ததை  மன மகிழ்வோடு பகிர்ந்து கொள்வது ஆனந்தம்.

 பூமி நமக்கு திருப்பித் தரும் என்று நினைத்துக் கொண்டா மேகம் பொழிகிறது? கிளிகள் நமக்கு திருப்பித் தரும் என்றா மரங்கள் கனிகளை தருகிறது?

இல்லை.வழங்குவது அவற்றின் இயல்பு. வழங்குவது அவற்றின் வள்ளண்மை. 

இயற்கை வழங்குவதால் ஆனந்தம் அடைகிறது. நாமும் வழங்குவதால் ஆனந்தத்தை நமதாக்கிக் கொள்ள முடியும்.

 பொருள்களை தருவது மட்டும் வழங்குவது அல்ல. பொருள் இல்லாவிட்டாலும் புன்சிரிப்பை தருவதும் வழங்குவதுதான். 

 அறுசுவை உணவை தருவது மட்டும் வழங்குவது அல்ல. அன்பான வார்த்தையை  பேசுவதும்  வழங்குவதுதான்.

 வழங்குவதற்கு வசதிதான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வழங்க வேண்டும் என்னும் உள்ளம்  இருந்தால் போதும்.  

 வழங்க வேண்டும் என்னும் உள்ளம் இருந்தால், வசதிகளை இயற்கை வாரிக் கொடுக்கும். இயற்கை தராததை நாம் எப்படி மற்றவருக்கு தர முடியும்.

 இந்த வாழ்க்கை இயற்கை தந்தது. இந்த வசதி இயற்கை தந்தது. இந்த உயரம் இயற்கை தந்தது.

 இப்படி, எல்லாம் இயற்கை தந்தது என்னும் நினைவோடு இருப்பவர்க்கு தலைக்கனம் வருவதில்லை. தலைக்கனம் இல்லாத செல்வந்தர்க்கு புகழ் மணம் குறைவதில்லை. அதிலும் அவர் வழங்குபவராய் இருந்து விட்டால், ஆனந்தத்திற்கு எல்லை இல்லை.

 ஒளியை வழங்குவது கதிருக்கு ஆனந்தம். உயிர் மூச்சை வழங்குவது காற்றுக்கு ஆனந்தம்.

 தாகத்தை தணிப்பது தண்ணீரின் ஆனந்தம். தூக்கிச் சுமப்பது பூமிக்கு ஆனந்தம். அனைத்துக்கும் இடம் தருவது ஆகாயத்துக்கு  ஆனந்தம்.

 இயற்கை எல்லாவற்றையும் வழங்குவதில் ஆனந்தம் கொள்கிறது. அது தனக்கென்று எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. தந்து கொண்டே இருக்கிறது. 

  வழங்குவதற்கு  தன்னிடம் பொருள் இல்லாதவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. எப்போதும் குறையாத செல்வம் ஒன்று எல்லாரிடமும் இருக்கிறது.

 அந்த செல்வம் வழங்குவதால் இரட்டிப்பாகும். பெறுபவருக்கு பூரிப்பைத் தரும். உலகம் முழுக்க தந்த பிறகும் ஊற்றுப்போல சுரந்து கொண்டே இருக்கும். அதுதான் கடவுள் என்று அனைவரும் சொல்கிறார்கள்.

 நாத்திகரும் கூட அதை ஒப்புக் கொள்வார்கள். அதன் பெயர் அன்பு!