பயத்தை எதிர்கொள்வதற்கு பயத்தால் ஏற்படும் உடலியல் மற்றும் நரம்பியல் பற்றிய ஆழமான புரிதல் அவசியம், அதற்கான அறிவியல் பின்னணியை இப்போது பார்க்கலாம்.
* தாக்கு அல்லது ஓடு (fight or flight ): இந்த அணுகுமுறை நம் முன்னோர்களை உடனடி ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியது. மனிதன் வேட்டையாடும் காலத்தில் இதுதான் முக்கிய பாதுகாப்பு அம்சம்.
இதுதான் எதிரிகளிடமிருந்து அல்லது விலங்குகளிடம் இருந்து முடிவுகளை எடுக்க உதவியாக இருந்தது.
உதாரணமாக அந்தக் காலத்தில் ஈட்டியோடு ஒருவன் வேட்டைக்கு கிளம்புகிறான். ஒரு மான் கண்ணில் தென்படுகிறது. அதை துரத்திக் கொண்டு ஓடுகிறான். அப்போது அச்சப்படுவதில்லை. இறை அகப்படும் என்று நம்புகிறான்.
அப்படி துரத்தி ஓடும்போது, ஒரு புலி எதிரே வருகிறது. இப்போது அவன் நின்று நிதானிக்கிறான். மானைத் துரத்தியது போல புலியைத் துரத்த மாட்டான்.
முதலில் தாக்கு என்ற முடிவை எடுத்தவன் இப்போது ஓடு என்னும் முடிவை எடுக்கிறான்.
இதையே திருக்குறள் இப்படி சொல்கிறது.
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.
அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும்.
இது வேட்டைக்கும் பொருந்தும். போருக்கும் பொருந்தும். நம் பிரச்சனைகளுக்கும் பொருந்தும்.
* உடலியல் மாற்றங்கள்: நாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, நம் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
இதயத் துடிப்பு அதிகமாகிறது. சுவாசம் வேகம் எடுக்கிறது. வியர்வை அதிகமாக சுரக்கிறது. தசைகள் இறுக்கமடைகின்றன.
இந்த மாற்றங்கள் நாம், ஆபத்தை எதிர்கொள்ளவோ அல்லது ஓடிவிடவோ நம் உடலை தயார்படுத்துகின்றன.
* நாள்தோறும் ஏற்படும் மன அழுத்தங்கள்: இன்றைய உலகில், மேடைப்பேச்சு, போட்டி த் தேர்வுகள்,நேர்காணல், உறவுச் சிக்கல்கள் அல்லது பணப் பிரச்சனைகள் போன்றவை மன அழுத்தத்தை உண்டாக்குகின்றன.
இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் குறைவாக இருந்தாலும், அடிக்கடி இவற்றை எதிர்கொள்ளும் சூழல் நிலவுவதால் பிரச்சனை சிக்கலாகிறது.
* தொடர் பாதிப்பு: தொடர்ச்சியான மன அழுத்தத்தால் "தாக்கு அல்லது ஓடு" என்னும் செயல்முறை அடிக்கடி நிகழ்கிறது.
இது பலகாலம் நீடிக்குமென்றால்,
ஆழ்ந்த மன அழுத்தக் கோளாறுகள், உயர் இரத்த அழுத்தம் மற்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
பிரச்சனைகளை எதிர்கொள்வதில் மூளைக்குள் என்னென்ன நடக்கிறது என்று பார்க்கலாமா!
மூளை செயல்பாடுகள்
அமிக்டாலா : இது மூளையின் உணர்வு பகுதியின் (temporal lobe) நடுவில் உள்ள ஒரு சிறிய, பாதாம் வடிவ கட்டமைப்பு.
அமிக்டாலா என்றால் கிரேக்க மொழியில் பாதாம் என்றுதான் அர்த்தம்.இதை உணர்ச்சி கட்டுப்பாட்டு மையம் என்று சொல்லலாம்.
இது பயம், கோபம் உள்ளிட்ட பல எதிர்மறை உணர்ச்சிகளை செயலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
* அச்சுறுத்தலை அறிதல்: அமிக்டாலா ஒரு அச்சுறுத்தலைக் கண்டறிந்தால், அது "தாக்கு அல்லது ஓடு" என்னும் முடிவை எடுக்க மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல்களை அனுப்புகிறது. பிறகு மூளை அனுப்பும் செய்திகளின்படி நாம் செயல்படுகிறோம்.
* பகுத்தறிவு சிந்தனை:
மூளையின் உணர்வுப் பகுதிதான், முடிவெடுத்தல், திட்டமிடல் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை போன்ற உயர்நிலை அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும்.
மூளையின் இந்தப் பகுதி அச்சுறுத்தல்களை மிகவும் தர்க்கரீதியாகவும் அமைதியாகவும் மதிப்பிட வைக்கிறது.
இது பயத்தின் போது நம் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் சரிசெய்யவும் உதவுகிறது.
* நினைவகம் மற்றும் சூழல் உணர்தல்: நமது மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி, ஞாபகம் வைத்தல் மற்றும் அவற்றை அவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருதல் ஆகிய செயல்பாடுகளை நிகழ்த்துகிறது.
மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி ஏற்கனவே நடந்த பயங்கரமான நிகழ்வுகளின் நினைவுகளை சேமிக்க முடியும்.
இது பழைய அனுபவங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து இப்போதைய
பயங்கரமான சூழ்நிலையை புரிந்துகொள்ள உதவுகிறது.
எதிர்காலத்தில் இதே போன்ற ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.
உதாரணமாக ஒரு சிறு குழந்தை எரிந்து கொண்டிருக்கும் விளக்கு சுடரை நோக்கி செல்கிறது. அதற்கு அது சுடும் என்று தெரியாது. ஆர்வம் காரணமாக அந்த சுடரை தொட்டுப் பார்க்கிறது. சுட்டதும் கையை உடனடியாக விலக்கிக் கொள்கிறது.
இந்த அனுபவம் நினைவில் பதிந்து விடுகிறது. மீண்டும் சில நாள் கழித்து வேறு இடத்தில் அதே மாதிரி விளக்கைப் பார்த்தாலும் அக்குழந்தை அதைத் தொடாது.
இந்த எச்சரிக்கை உணர்வை ஹிப்போகேம்பஸ் கொடுக்கிறது.
பயத்திற்கான உடல் அறிகுறிகள்
* அட்ரினலின் ஓட்டம்: பயம் ஏற்படும்போது அட்ரீனல் சுரப்பி அதிகமாக வேலை செய்கிறது.
இது இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்கிறது.
வியர்வை: உடல் சூடாவதைக் குறைக்க அதிக வியர்வையை உற்பத்தி செய்கிறது, பயத்தின் போது உள்ளங்கைகள் மற்றும் உள்ளங் கால்கள் அதிகமாக வியர்க்கும்.
"நான் அந்த டர்னிங்ல திருப்பறப்போ, திடீர்னு ஒரு லாரிக்காரன் எதிரில் வந்துட்டான். எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. குப்புன்னு வேர்த்துப் போச்சு ".
இந்த மாதிரி சூழ்நிலைகளை நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா!
* தசை இறுக்கம்: பிரச்சினைகளை சமாளிக்க வேகமாக செயல்பட வேண்டி வரலாம். அதற்கு ஏதுவாக தசைகள் இறுக்கமடைகின்றன.
ஒரு வெறிநாய் உங்களை துரத்துகிறது. அப்போது எப்படி ஓடுவீர்கள்? நீங்கள் வழியைப் பற்றி யோசிக்க மாட்டீர்கள். மேடு பள்ளம், கல் முள் எதையும் கண்டு கொள்ள மாட்டீர்கள். தப்பித்தால் போதும் என்று ஓட்டம் எடுப்பீர்கள்.
உங்கள் தசைகள் இருக்கமடைந்தால்தான் இத்தனையும் நடக்கும்.
நீண்ட கால விளைவுகள்
* நாள்பட்ட பதற்றம்: எப்போதும் பதட்டத்திலேயே அல்லது பயத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தால் மனஅழுத்தம் ஒரு தொடர்கதையாகிவிடும். மற்ற மனநலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.
இதை நினைத்துப் பாருங்கள். உங்கள் அலுவலகம் வெகு தூரத்தில் இருக்கிறது.
நீங்கள் நடந்து சென்று ரயிலை பிடித்து இன்னொரு ரயில் நிலையத்தில் இறங்கி, வேறொரு பஸ் பிடித்து
நின்று கொண்டே பயணம் செய்து மீண்டும் பத்து நிமிடம் நடந்து தான் அலுவலகத்தை அடைய வேண்டும்.
நீங்கள் அடிக்கடி தாமதமாகவும் செல்ல முடியாது. உங்கள் மேலதிகாரி கண்டிப்பானவர். தாமதமானால் திட்டு வாங்க வேண்டும் அல்லது சம்பளம் பிடிக்கப்படும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளை தவிர்க்க முடியாவிட்டால் பிரச்சனைதானே!
* உடல் ஆரோக்கியம்: நாள்பட்ட மனஅழுத்தம், இதய நோய், செரிமான பிரச்சினைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி செயலிழப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.
பயம் பதற்றத்தை குறைப்பது எப்படி?
பிரச்சனைகள் எங்கு வரும் எப்படி வரும் என்று முன்கூட்டியே தெரிந்தால் அதை சமாளிக்கும் வழிமுறைகளை முன்னதாகவே யோசித்து வைத்து விடுங்கள். அப்போது பதற்றம் ஏற்படாது.
ஒரு பிரச்சனைக்கான தீர்வை முடிவு செய்து வைத்திருந்தாலும் செயல்படுத்தும் போது அது முடியாமல் போகலாம். அப்படியெனில் அதற்கான மாற்றுத்திட்டத்தையும் முன்பே யோசியுங்கள்.
திடீர் பிரச்சனைகளால் வரும் பயத்தை சமாளிக்க வேண்டும் என்றால் உங்கள் உடலையும் மனதையும் அதற்கு தயார்படுத்த வேண்டும்.
*சுவாசப் பயிற்சிகள்:
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த ஆழமான சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, முடிந்தவரை வெளிவிடாமல் நிறுத்தி வைத்து,வாயின் வழியாக மெதுவாக வெளியே விடுங்கள்.
மேலோட்டமாக சுவாசிப்பதற்கு பதிலாக உங்கள் உங்கள் அடிவயிறு சுருங்கி விரியும்படி ஆழமாக சுவாசிப்பதில் கவனம் செலுத்துங்கள்.
இது இதயத் துடிப்பை குறைத்து பதற்றத்தை குறைக்க உதவும்.
தசை தளர்வு பயிற்சிகள்
* செய்முறை: உங்கள் கால் விரல்களிலிருந்து தொடங்கி தலையை நோக்கி உங்கள் உடலின் வெவ்வேறு தசைகளை படிப்படியாக இறுக்கி தளர்த்தவும்.
இது உடல் பதற்றத்தை வெளியிடவும் அமைதியான உணர்வை ஊக்குவிக்கவும் உதவும்.
உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகள் : உடற்பயிற்சிகள் நம்மை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்துக் கொள்ளும். திடீர் பதற்றத்தை, பயத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு நம்மை தயார் செய்யும்.
உடற்பயிற்சிகளை செய்ய இயலாதவர்கள், யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தகுந்த யோகப் பயிற்சி ஆசிரியரின் மூலம் இதை செய்யலாம்.
காட்சிப்படுத்தல்
* நேர்மறையான கற்பனை: நீங்கள் அமைதியான, பாதுகாப்பான சூழலில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
எல்லாம் நல்ல விதமாக நடந்தால் எப்படி இருக்குமோ அந்த சூழ்நிலையை மனதில் கொண்டு வாருங்கள்.
இந்த கற்பனை உடனடி பதற்றத்தை குறைப்பதோடு, அமைதியாக பிரச்சனைகளை எதிர்கொள்ள வழிவகுக்கும்.
* பயத்தை வெற்றிகரமாக சமாளிக்கும் கற்பனை.
எந்தப் பிரச்சனையையும் சமாளிக்க வேண்டும் என்றால் அதற்கு மனம் முதலில் தயாராக வேண்டும்.
பிரச்சனைகளைத் தீர்க்க மனம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முன்னமே தயார் செய்து கொள்கிறது. அதன் ஒவ்வொரு படிநிலைகளையும் கற்பனை செய்கிறது. பிறகு தான் நாம் செயல்பட ஆரம்பிக்கிறோம்.
எனவே பயத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையை மனதுக்குள் உருவாக்கி விட்டால் நிஜத்தில் அதை எதிர்கொள்ளும்போது பதற்றத்தை குறைக்க உதவும்.
இந்த வழிமுறைகளை பின்பற்றினால், நமது பெரும்பாலான பயங்களை எதிர்கொள்ளும் வலிமை கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!