Sunday, 1 December 2024

மாயப் புத்தகம் - மதிபாலன்

சென்னையின் பழைய தெருக்களில் ஒன்றில், பௌர்ணமி அன்று  மட்டும் தோன்றும் ஒரு ரகசியச் சந்தை இருக்கிறது. அந்தச் சந்தைக்குப் பெயர் பர்மா பஜார். 

அது மற்ற சந்தைகளைப் போல இல்லை. இங்கே எல்லாமே மாயாஜாலம் நிறைந்தது!

ரவி என்ற ஒரு சிறுவன், ஒரு குளிர்கால இரவில் இந்தச் சந்தையைக் கண்டான். அந்தச் சந்தைக்குள் போனதும், அவன் ஒரு வித்தியாசமான உலகில் இருப்பது போல உணர்ந்தான்.

 பறக்கும் கம்பளங்கள், சிறிய புயல் அடைத்த  பாட்டில்கள்,எண்ணங்களுக்கு ஏற்ப நிறம் மாறும் ஓவியங்கள்  என்று எல்லாமே மிகவும் வித்தியாசமாக இருந்தது.
ஆனால் ரவியின் கவனத்தை ஈர்த்தது ஒரு பெரிய புத்தகம்.

 அந்தப் புத்தகம் ஒரு முதிய பாட்டியிடம் இருந்தது. பாட்டியின் வயது நூறுக்கும்  மேல் இருக்கும். அவள்  மிகவும்   அமைதியாக இருந்தாள். அவளது கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.

ரவி, "பாட்டி, அது என்ன  புத்தகம் ?" என்று கேட்டான்.
பாட்டி புன்னகைத்து, "இது ஒரு மாயாஜால புத்தகம். இதைப் படித்தால், நீ பல அற்புதமான இடங்களுக்குப் போகலாம்" என்றாள்.

ரவிக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் உடனே, "பாட்டி, இந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுக்க முடியுமா?" என்று கேட்டான்.

பாட்டி தலையாட்டினாள். "ஆனால், இந்தப் புத்தகத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்றாள்.

ரவி மகிழ்ச்சியுடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டான். அந்தப் புத்தகம் மிகவும் பழமையாகவும், அதன் பக்கங்கள் மஞ்சள் நிறமாகவும் இருந்தன.

ந்த இரவே, ரவி தன் படுக்கையில் படுத்துக் கொண்டு அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தான்.

 முதல் பக்கத்தைத் திறந்தவுடன், அவன் ஒரு கற்பனை உலகிற்குள் இழுத்துச் செல்லப்பட்டான். 

அவன் ஒரு பறவை மீது சவாரி செய்தான், கடலில் நீந்தினான், ராட்சதப் பல்லிகளுடன் பேசினான். ஒவ்வொரு கதையும் ரவியை மிகவும் உற்சாகப்படுத்தியது.

நேரம் எப்படிப் போனது என்று தெரியவில்லை. சூரியன் உதிக்க ஆரம்பித்ததும், ரவி தன் படுக்கையில் இருந்து எழுந்தான். அந்தப் புத்தகம் அவன் கையில் இருந்தது. ஆனால், அந்தப் புத்தகம் இனி ஒரு புத்தகம் அல்ல. அது ரவியின் நண்பன் போல இருந்தது.

ஒவ்வொரு இரவும், ரவி அந்தப் புத்தகத்தைப் படித்து புதிய உலகங்களை கண்டுபிடிப்பான். அவன் பல நாடுகளுக்குப் போனான், பல மொழிகளை கற்றுக் கொண்டான், பல புதிய நண்பர்களை சந்தித்தான்.

ருநாள், ரவி   பாட்டியைப் பார்த்து, "பாட்டி, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்ட எல்லா இடங்களுக்கும் போக முடியுமா?" என்று கேட்டான்.

பாட்டி சிரித்தாள், "இந்தப் புத்தகம் உன்னை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும். ஆனால், நீ எப்போதும் உன் வீடு திரும்ப வேண்டும் என்பதை மறந்துவிடாதே" என்றாள்.
ரவி தலையாட்டினான்.  
    
ரவி தன் மாயாஜால புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு, சொர்க்கம் எப்படி இருக்கும் என்று ஆவலுடன் படிக்க ஆரம்பித்தான்.

 புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பியதும், அவன் ஒரு பிரகாசமான ஒளியில் சூழப்பட்டான். சிறிது நேரத்தில், அவன் ஒரு அழகான பூங்காவில் நின்றான். 

மரங்கள் பச்சை நிற இலைகளால் நிறைந்திருந்தன. பூக்கள் பல வண்ணங்களில் பூத்திருந்தன. ஒரு தெளிந்த நீரோடை பூங்காவின் நடுவே ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு அழகான தேவதை அவனிடம் வந்து, “நீ சொர்க்கத்திற்கு வந்துவிட்டாய்” என்றாள்.

ரவி மிகவும் ஆச்சரியப்பட்டான். “இது சொர்க்கமா? இது மிகவும் அழகாக இருக்கிறது!” என்றான்.
தேவதை புன்னகைத்து, “இங்கே எல்லாம் மகிழ்ச்சியும் அமைதியும்தான். நீ எதை வேண்டுமானாலும் செய்யலாம்” என்றாள்.

ரவி பறவைகளுடன் விளையாடினான், மீன்களுடன் நீந்தினான், மரங்களில் ஏறினான். அவன் எங்கும் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தான்.

சிறிது நேரத்தில், ஒரு பெரிய மரத்தின் கீழ் ஒரு வயதான ஞானி அமர்ந்திருப்பதை ரவி பார்த்தான். ரவி அவனிடம் போய், “நீங்கள் யார்?” என்று கேட்டான்.

ஞானி புன்னகைத்து, “நான் இந்த சொர்க்கத்தின் காப்பாளன். உனக்கு எது வேண்டுமானாலும் கேட்கலாம்” என்றார்.

ரவி யோசித்துவிட்டு, “நான் உலகில் உள்ள எல்லா மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான்.

ஞானி தலையாட்டினார். “உன் விருப்பம் நிறைவேறும்” என்றார்.
அடுத்த கணம், ரவி தன்னை மீண்டும் தன் படுக்கையில் இருப்பதை கண்டான். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, அவன் கண்களை மூடிக்கொண்டான்.

 அவன் மனதில், சொர்க்கத்தின் அழகான காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தன!
 

Saturday, 30 November 2024

இளைஞர்களுக்கு என்னதான் பிரச்சனை?- மதிபாலன்

 இன்றைய இளைஞர்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்றாங்க. படிப்பு, வேலை, காதல், குடும்பம், சமூகம்னு எல்லாத்திலும் சரியா இருக்கணும்னு  அழுத்தம். இதனால பலருக்கும் மனசுல ரொம்ப பாரம்.

என்னென்ன பிரச்சனை?

  • மனசுல ஒரு பாரம்: படிப்புல நல்ல மார்க் வாங்கணும், வேலையில சிறப்பா செய்யணும் , சமூக வலைதளத்துல பல லைக்ஸ் வாங்கணும்னு எல்லாத்தையும் சேர்த்து பண்ணனும்னு நினைக்கிறாங்க. இதனால கவலை, மன அழுத்தம், தூக்கமின்மைனு பல பிரச்சனை வந்துடுது.

  • தனிமையா உணர்வு: சமூக வலைதளத்துல பார்க்கிற அழகான புகைப்படங்கள், செய்யும் சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் தன்னை விட நல்லா இருக்கானு நினைச்சு தனிமையா உணருறாங்க.

  • எதிர்காலம் பத்தி பயம்: வேலை கிடைக்குமா, நல்ல சம்பளம் கிடைக்குமா, திருமணம் பண்ணி குடும்பம் நடத்துவோமா, எல்லாத்தையும் நினைச்சு பயப்படுறாங்க.

  • தன்னைத்தானே புரிஞ்சிக்க  முடியாமல் போராடுவது: தன்னோட உண்மையான ஆசைகள், திறமைகள் என்னன்னு தெரியாமல் தவிக்கிறாங்க.

  • சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கி இருப்பது: மொபைல் போன், சமூக வலைதளங்கள் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதுன்னு ஒரு நிலை. அதிக நேரம் மொபைல் பார்த்து கண் பார்வை, தலைவலி, முதுகுவலினு பல பிரச்சனைகளும் வந்துடுது.

  • உடல் நலப் பிரச்சனைகள்: தவறான உணவு பழக்கவழக்கங்கள், போதுமான தூக்கம் இல்லாதது, அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்றது, மன அழுத்தம்னு எல்லாத்தாலும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

  • பாலினம் மற்றும் பாலியல் தொடர்பான குழப்பங்கள்: தங்களது பாலினம், பாலியல் நோக்குநிலை பற்றிய குழப்பங்கள். இது நிறைய கேள்விகள், தயக்கங்களை உருவாக்கும்.

  • பொருளாதாரப் பிரச்சனைகள்: குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாக கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் சிரமப்படுகிறாங்க. கல்லூரி படிக்க முடியாமல் போறது, போன்ற பிரச்சனைகள் வரும்.

  • சமூக அநீதிகள்: சாதி, மதம், பாலினம், இனம் போன்ற காரணங்களால் சமூகத்தில் பாகுபாடு உள்ளதாக உணர்கிறாங்க. இது தாழ்வு மனப்பான்மை, கோபம், வன்முறை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

  • சுற்றுச்சூழல் பிரச்சனைகள்: காலநிலை மாற்றம், மாசுபாடு போன்ற பிரச்சனைகள் அவர்களை கவலைப்படுத்துது. இதனால எதிர்காலம் பத்தி பயம், மன அழுத்தம்னு எல்லாம் வரும்.

நம்மளால என்ன பண்ண முடியும்?

  • அவங்களைக் கேளுங்க: அவங்க என்ன நினைக்கிறாங்க, என்ன உணருகிறாங்க என்பதை கேட்டு அவங்களோட பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுங்க.

  • ஆதரவா இருங்க: அவங்க தனிமையா உணராதபடி அவங்களோடு நேரத்தை செலவிடுங்க.

  • அவங்களோட திறமைகளை ஊக்குவிங்க: அவங்க என்ன செய்ய விரும்புகிறாங்க என்பதை கண்டுபிடித்து அதற்கு ஆதரவு கொடுங்க.

  • சமூக வலைதளங்களை சரியா பயன்படுத்த கத்துக்கொடுங்க: சமூக வலைதளங்களை எப்படி பாதுகாப்பா பயன்படுத்துவது என்பதை கத்துக்கொடுங்க. அதில் உள்ள சாதக பாதகங்களை விரிவா புரியும்படி எடுத்துச் சொல்லுங்க.

  • உடல் நலம் பத்தி விழிப்புணர்வு: ஏற்படுத்துங்க: சரியான உணவு பழக்கவழக்கங்கள், தூக்கம், உடற்பயிற்சி போன்றவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லுங்க.

  • பாலினம் மற்றும் பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க: அவங்களுக்கு எதிர் பாலினத்தோடு  எப்படி பேசுறது பழகுறது அப்படின்னு நிறைய சந்தேகங்கள் இருக்கும். அதை தீர்த்து வையுங்க.அவங்களுக்கு தெளிவான தகவல்களை வழங்குங்க.

  • சமூக அநீதிகளுக்கு எதிராக போராட கத்துக்கொடுங்க: யாருக்கோ எதிரா ஒரு அநீதி நடக்குது. நமக்கு நடக்காத வரைக்கும் பிரச்சனை இல்ல அப்படின்னு நினைக்கறத மாத்துங்க. சமூகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க ஊக்குவிக்கவும்.

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க: நம்மால முடிஞ்ச அளவு  சுற்றுச்சூழலை சுத்தமா பாத்துக்குறது முக்கியம்னு உணர்த்துங்க. சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்பதை எடுத்துச் சொல்லுங்க .

இளைஞர்கள் நம் நாட்டின் எதிர்காலம். அவங்க மனசு நல்லா இருந்தாத்தான் நம் நாடு நல்லா இருக்கும். நம்மளால முடிஞ்ச அளவு அவங்களுக்கு உதவணும். அது நம்ம எல்லோருடைய பொறுப்பு. கடமை!

Friday, 29 November 2024

கனா காணும் காலங்கள்!- மதிபாலன்

அனிதாவின் கண்கள் பழைய புகைப்படத்தில் உருகின. புகைப்படத்தில் கார்த்திக்கின் சிரித்த முகம் அவளுக்கு ஒரு கனவுலகத்தை நினைவுபடுத்தியது. 

அவள் இதயம் வேகமாக துடித்தது. தன் உணர்வுகளை கார்த்திக்கிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசை அவள் மனதில் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனால், தயக்கம், பயம் என்று பல எண்ணங்கள் அவளை கட்டுப்படுத்தின.

ஒரு நாள், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கார்த்திக்கிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்தினாள். கார்த்திக்கும் அனிதாவைப் பிடித்திருப்பதாகச் சொன்னான்.

 ஆனால், சமூக வேறுபாடு, குடும்பத்தின் எதிர்ப்பு போன்ற பிரச்சினைகள் இருப்பதாகவும் சொன்னான். அனிதா கார்த்திக் மீது கொண்ட காதல் எல்லா தடைகளையும் தாண்டி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

இருவரும் சேர்ந்து அனிதாவின் தந்தையை சந்தித்து தங்கள் உறவைப் பற்றி சொன்னார்கள்.

 அனிதாவின் தந்தை முதலில் கோபப்பட்டாலும், பின்னர் அவர்களின் உண்மையான காதலை உணர்ந்து ஒப்புக்கொள்வார் என்று தான் எதிர்பார்த்தார்கள். 
ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஒரு வாரத்துக்குப்பின், அவர் கார்த்திக்கிடம் கூறினார், “இது ஒத்து வராது. " என்று சாதி பிரச்சனையை காரணம் காட்டினார் .

  அனிதா ,கார்த்திக்கிடம், “நம்ம இருவரும் சேர்ந்து வாழ முடியாது.   அப்பாவின் வார்த்தையை நான் மீற முடியாது  ” என்றாள்.

 கார்த்திக்கின் முகம் வெளுத்துப் போனது. அவளின் எதிர்பாராத இந்த முடிவு அவனை நொறுக்கியது.

கார்த்திக் அனிதாவின் வீட்டை விட்டு வெளியே வந்தான். அவன் மனதில் ஏற்பட்ட வலி சொல்ல முடியாதது. அவன் மனதில் ஒரு கேள்வி எழுந்தது, “அனிதா என்னை உண்மையாகவே விரும்பினாளா?” என்று!

 அவர்களின் பிரிவுக்கு சாதி   ஒரு காரணமில்லை   அனிதாவின் தந்தை ஒரு வசதியான மாப்பிள்ளையை பார்த்திருப்பதும்  அவனை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று அனிதாவை மிரட்டியதும் அவனுக்குத் தெரியாது.

அனிதா தனது முடிவை எடுத்த பிறகு, அவளது மனதில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டது.  
 
 அனிதா தன் தந்தை முடிவு செய்தவனையே திருமணம் செய்து கொண்டாள். ஆனால், அவள் மனதில் கார்த்திக்கின் நினைவு எப்போதும் இருந்தது.

 அவள் கண்களில் எப்போதும்  தீராத ஒரு சோகத்தின்  நிழல் இருந்தது!
   

புயலுக்கு பெயர் வைக்க வேண்டுமா?- மதிபாலன்

புயல்கள் இயற்கையின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகளில் ஒன்றாகும். இவை அடிக்கடி பெரும் அழிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை.

 இந்தப் புயல்களுக்கு பெயர் சூட்டுவதன் பின்னணி மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப்  பார்க்கலாம்.

ஏன் புயல்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது?

 * பொது விழிப்புணர்வு: புயல்களுக்கு பெயர் சூட்டுவதன் மூலம், பொது மக்கள் ஒரு குறிப்பிட்ட புயலை எளிதாக அடையாளம் கண்டு, அதன் தொடர்பான எச்சரிக்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். இது மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது.

 * குழப்பத்தைத் தவிர்த்தல்: ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாகும் போது, அவற்றுக்கு தனித்தனி பெயர்கள் இருப்பது, எந்தப் புயல் பற்றி பேசப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தி குழப்பத்தைத் தவிர்க்கிறது.

 * வரலாற்று பதிவு: பெயரிடப்பட்ட புயல்களின் தகவல்களை வரலாற்று பதிவுகளில் எளிதாக பதிவு செய்ய முடியும். இது புயல்களின் நடத்தை, தாக்கங்கள் மற்றும் போக்குகள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவுகிறது.

புயல்களுக்கு எப்படி பெயர் சூட்டப்படுகிறது?

 * பிராந்தியக் குழுக்கள்: உலக வானிலை அமைப்பு (WMO) போன்ற சர்வதேச அமைப்புகள், ஒவ்வொரு பிராந்தியத்திலும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதற்கான பொறுப்பை குறிப்பிட்ட குழுக்களுக்கு ஒப்படைத்துள்ளன.

 * முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பட்டியல்கள்: ஒவ்வொரு பிராந்தியத்திலும், ஆண் மற்றும் பெண் பெயர்கள் அடங்கிய பட்டியல்கள் முன்கூட்டியே தயாரிக்கப்படும். இந்தப் பட்டியலில் இருந்துதான் புயல்களுக்கு பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

 * எழுத்துக்களின் வரிசையில் பெயர்கள் :   பொதுவாக ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி பயன்படுத்தப்படும். ஒரு பெயர் பயன்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த புயலுக்கு அடுத்த பெயர் பயன்படுத்தப்படும்.

 * பெயர்களுக்கு ஓய்வளித்தல் :     ஒரு புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தினால், அந்தப் பெயர் மீண்டும் பயன்படுத்தப்படாமல் ஓய்வு பெறச் செய்யப்படும்.

இந்தியப் பெருங்கடலில் புயல்களுக்கு பெயரிடுதல்:
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து போன்ற நாடுகள் இணைந்து பெயர்களை வழங்குகின்றன. 

ஒவ்வொரு நாடு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெயர்களை பட்டியலில் சேர்க்கும்.
உதாரணமாக, 'அம்பான்' என்ற பெயர் தாய்லாந்து நாட்டால் வழங்கப்பட்ட பெயர்.
 
புயல்களுக்கு பெயர் சூட்டுவது வெறும் வழக்கமாக இல்லாமல், மனித உயிர்களைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 இது பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதையும், புயல்களின் தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதையும் எளிதாக்குகிறது. 

மேலும், வரலாற்று ஆய்வுகளுக்கும் இது பெரிதும் உதவுகிறது.
 

முடியும் என்றால் முடியும்!- மதிபாலன்

வாழ்க்கை என்பது எதிர்பாராத திருப்பங்களும் சவால்களும் நிறைந்த பயணம். 

நாம் அனைவரும் சிறிய தடைகளிலிருந்து பெரிய தடைக ள்வரை பல சவால்களை எதிர்கொள்கிறோம்.

"தடைகள் என்பது நம் இலக்கை மறந்துவிட்டால் தோன்றும் பயங்கரமான விஷயங்கள்" என்றார்  ஹென்றி ஃபோர்டு.

 அது போல, நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது,   மிகவும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த சவால்கள் நம் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

"ஒரு தடையின் அளவு அதை வென்ற பிறகு கிடைக்கும் வெற்றியின் அளவை தீர்மானிக்கிறது" என்ற பழமொழி போல, சவால்களை வெற்றிகொள்வதில் மகத்துவம் உள்ளது.

இந்த சவால்களை எப்படி சமாளிக்கலாம்?

 * சவால்களை ஏற்றுக்கொள்: சவால்களிலிருந்து விலகி இருக்காதீர்கள். அவற்றை கற்றுக்கொண்டு வளரும் வாய்ப்புகளாக ஏற்றுக்கொள்ளுங்கள். 

"நாம் வெல்ல வேண்டியது உலகை அல்ல, நம்மைத்தான்" என்று எலனோர் ரூஸ்வெல்ட் சொன்னது போல, உங்களை வெல்லுங்கள்.

 * சிறிய இலக்குகளாக பிரித்துக்கொள்ளுங்கள்: பெரிய இலக்கை சிறிய இலக்குகளாகப் பிரித்து, ஒவ்வொன்றை அடைந்ததும் உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். இது பெரிய இலக்கை எட்டும் பாதையை எளிதாக்கும்.

 * தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்: தோல்விகள் தடைகளல்ல, வெற்றியை நோக்கிய படிகளாகும். 

"நான் தோல்வி அடையவில்லை, வெற்றிபெறாத 10,000 வழிகளை கண்டுபிடித்தேன்" என்று தாமஸ் எடிசன் சொன்னது போல, தோல்விகளைப் படிப்பினைகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.

 * நேர்மறையாக இருங்கள்: நேர்மறையான மனநிலை பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். பிரச்சனைகளுக்கு பதிலாக தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள்.

 * ஆதரவை நாடுங்கள்: நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஆலோசகர்களிடம் ஆதரவு மற்றும் ஆலோசனை கேட்பதில் தயங்குவதை விட்டுவிடுங்கள்.

எப்போதும் நினைவில்  கொள்ளுங்கள்: ஒவ்வொரு சவாலும் கற்றுக்கொள்ள, வளர மற்றும் நம்மை வலுவாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பு.

 "அது நடக்கும் வரை அது எப்போதும் சாத்தியமில்லை என்று தோன்றும்" என்று நெல்சன் மண்டேலா சொன்னது போல, நம்பிக்கையுடன் முன்னேறுங்கள்.

 தடைகள் தாண்டுவதற்கே.
 வாழ்க்கை வாழ்வதற்கே!

Thursday, 28 November 2024

கும்பகர்ணனை எழுப்ப சூப்பர் ஐடியாக்கள் - மதிபாலன்

கும்பகர்ணன்! தூக்கத்தின் மன்னன்! இவரை எழுப்பறது எவ்வளவு கஷ்டம்னு நமக்கு தெரியும். 

ஆனா, இப்போ நம்மகிட்ட நிறைய தொழில்நுட்பம் இருக்குல்ல. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கும்பகர்ணனை எழுப்ப முடியுமா? ஒரு முறை பாக்கலாம்.

1. வி ஆர் ஹெட்செட்:  
கும்பகர்ணனின் தலையில ஒரு வி ஆர் ஹெட்செட் போட்டு   அவருக்கு ஒரு பயங்கரமான கனவு காட்டலாம். 

ஒருவேளை ஒரு ராட்சதப் பூச்சி அவரைத் துரத்துகிறது . அப்படி ஒரு கனவு காட்டினா, நிச்சயம் பயந்து எழுந்துடுவார்! கற்பனை செய்து பாருங்கள், தூக்கத்தில் இருக்கும் கும்பகர்ணன் திடீரென்று ஒரு ராட்சத பூச்சியைப் பார்த்து கதறி அழுகிறார்! அப்படி ஒரு காட்சி எவ்வளவு வேடிக்கையாக இருக்கும்!

2. நகைச்சுவை நடிகரின் காமெடி ஷோ :  
ஒரு நகைச்சுவை நடிகரை கும்பகர்ணன் தூங்கும் அறைக்குள்ள அனுப்பி, சத்தமாக நகைச்சுவை சொல்லச் சொல்லலாம். 

அவர் சொல்லும் ஜோக் கேட்டு கும்பகர்ணன் சிரிச்சு எழுந்துடுவார். கும்பகர்ணன் மாதிரி ஒரு தூக்கப் பிள்ளையை எழுப்ப, நகைச்சுவை தான் சிறந்த ஆயுதம். 

ஒருவேளை அவர் ஒரு கன்னட காமெடி ஷோவை போட்டு பாத்தா  நிச்சயம்  விழித்தெழுவார்.

3. குழந்தையின் அழுகுரல்:  
ஒரு குழந்தையை அழைச்சுட்டு வந்து, கும்பகர்ணன் காதுக்கு பக்கத்துல உட்கார வைத்து அழச் சொல்லலாம்.

 குழந்தையின் அழுகுரல் கேட்டு கும்பகர்ணன் எரிச்சலாகி எழுந்துடுவார். கும்பகர்ணன் எவ்வளவு பெரியவர் என்றாலும், குழந்தையின் அழுகுரல் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

அப்படியும் எழுந்திருக்கவில்லை என்றால் ஒரு நான்கைந்து  குழந்தைகளை வைத்து அழ வைத்தால்  அந்த சத்தம் தாங்காமல் நிச்சயம் எழுந்து விடுவார்.

4. பேய்ப் படத்தை ஓட விடலாம் :
கும்பகர்ணன் தூங்கும் அறையில ஒரு பெரிய திரையை வைத்து, பயங்கரமான பேய்ப் படம் ஒன்றை போட்டு விடலாம். 

அந்த படத்துல வர்ற காட்சிகளை பார்த்து பயந்து கும்பகர்ணன் எழுந்துடுவார். கும்பகர்ணன் மாதிரி ஒரு அரக்கனுக்கு கூட பேய் படம் பயத்தை ஏற்படுத்தும்.   நிச்சயம் பயத்தில் விழித்தெழுவார்.

5. ஸ்மார்ட் ஹோம்:  
கும்பகர்ணன் தூங்கும் அறை முழுக்க ஸ்மார்ட் டிவைஸ்களை வைத்து, திடீரென்று எல்லா விளக்குகளையும் எரிய வைத்து, சத்தமாக இசை போட்டு, அதிர்வுகளை உருவாக்கலாம்.  

இந்த அனைத்து முயற்சிகளையும் ஒன்றிணைத்து கும்பகர்ணனை எழுப்ப முயற்சி செய்தால் என்னவாகும்?

 நிச்சயமாக அவர் தனது ஆழமான தூக்கத்தை விட்டு எழுந்து, என்ன நடக்கிறது என்று பேய்முழி முழிப்பார்  என்பதில் சந்தேகம் இல்லை!

Tuesday, 26 November 2024

கருத்து கேட்கும் கலை-மதிபாலன்

 

நம்மளுடைய வேலையை நல்லா செய்யணும்னா, நல்ல கருத்துகளை  கேட்டுக்கணும் . இதை எப்படி செய்யலாம்னு  பார்ப்போம்..

  1. நேரடியா கேளுங்க: என்ன விஷயத்துல கருத்து வேணுமோ, அதை நேராக சொல்லுங்க. உதாரணமா, "இந்த ப்ரெசண்டேஷன் எப்படி இருக்குனு சொல்லுங்க?" அப்படின்னு கேட்கலாம்.

  2. அவங்க கருத்து முக்கியம்னு சொல்லுங்க: நாம பல வகையில யோசிச்சு நல்லா பண்ணி இருந்தாலும்  அவங்க கருத்து நமக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லுங்க. "உங்க கருத்து ரொம்ப உதவும். இந்த டிசைன் எப்படி இருக்குனு சொல்லுங்க?" அப்படின்னு கேட்கலாம்.

  3. நல்லா யோசிச்சு சொல்லுங்கன்னு கேளுங்க:  இந்த ரிப்போர்ட் நல்லா வரணும். அது ரொம்ப முக்கியம். அதனால நல்லா யோசிச்சு சொல்லுங்கன்னு கேளுங்க. "இந்த ரிப்போர்ட்ல என்னென்ன மாத்தலாம்னு சொல்லுங்க?" அப்படின்னு கேட்கலாம்.

  4. விஷயத்தை விளக்குங்க: ஏற்கனவே நடந்தது, அதுக்கப்புறம் நாம செஞ்சது, இப்போ எதுவரைக்கும் முடிஞ்சிருக்குது அப்படின்றத தெளிவா சொல்லுங்க.  அவங்களுக்கு   விஷயத்தை புரியிற மாதிரி  சொல்லுங்க. "கடைசி மீட்டிங்கை நினைச்சு பாருங்க. என்னென்ன பண்ணலாம்னு  சொல்லுங்க?" அப்படின்னு சொல்லலாம். 

  5.  நல்ல கருத்துகளை வரவேற்குறேன்னு சொல்லுங்க: நம்மளை விமர்சிக்க சொல்லுங்க. "என்னென்ன விஷயத்துல நான் இன்னும் நல்லா பண்ணலாம்னு சொல்லுங்க?" அப்படின்னு கேட்கலாம்.

  6. நன்றி சொல்லுங்க: அவங்க நேரம் கொடுத்ததுக்கு நன்றி சொல்லுங்க. "நேரம் கொடுத்து கருத்து சொன்னதுக்கு நன்றி. இது ரொம்ப உதவும்" அப்படின்னு சொல்லுங்க.

அழகின் புதிய பார்வை: இயக்கவியல் ஓவியம்- மதிபாலன்

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய இயக்கவியல் ஓவியம் (Impressionism) கலை உலகில் புரட்சியை ஏற்படுத்தியது.

 பிரான்சில் உருவான இந்த பாணி, ஒளி, நிறம் மற்றும் அன்றாட வாழ்க்கையை மையமாகக் கொண்டு, காலத்தின் கடுமையான கலைக் கட்டுப்பாடுகளை உடைத்தது.

"இயக்கவியல்" என்ற பெயர், கிளாட் மோனெட்டின் "இம்பிரஷன், சன்ரைஸ்" (1872) என்ற ஓவியத்திலிருந்து பெறப்பட்டது. 

ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், இந்த ஓவியம் இயக்கத்தின் ஒரு வரையறை ஓவியமாக மாறியது. மோனெட், எட்ஜார் டெகாஸ், பியர்-ஆகஸ்ட் ரெனாயர் மற்றும் கமில் பிசாரோ உள்ளிட்ட இயக்கவியல் ஓவியர்கள், தங்கள் படைப்புகளில் ஒளியின் தற்காலிக தன்மையையும் சூழ்நிலையையும் சித்தரிக்க  முயன்றனர். 

இயற்கையான ஒளியின் மாறும் தன்மையை நேரடியாகக் காண, அவர்கள் பெரும்பாலும் வெளியில் ஓவியம் வரைந்தனர்.

இயக்கவியல் ஓவியர்கள் பயன்படுத்திய முக்கிய நுட்பங்களில் ஒன்று, கலந்த மற்றும் கலக்காத வண்ணங்களின் சிறிய, மெல்லிய பூச்சுகளைப் பயன்படுத்தி பிரதிபலித்த ஒளியைப் பின்பற்றும் வகையில் பயன்படுத்துவதாகும். 

இந்த நுட்பம், பிரகாசமான, தூய வண்ணங்களின் பயன்பாட்டுடன் சேர்ந்து, அவர்களின் ஓவியங்களில் ஒரு துடிப்பான மற்றும் உஜ்ரோட்டமான  உணர்வை உருவாக்கியது. 

பாரம்பரிய கலை போலல்லாமல், மென்மையான, பளபளப்பான மேற்பரப்புகளைப் பயன்படுத்தியது, இயக்கவியல் படைப்புகள் அதிக நெருக்கமான மற்றும் இயக்கமானவை,

 நுட்பமான விவரங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தொலைவில் இருந்து ஒட்டுமொத்த விளைவை காட்சிப்படுத்த முனைகின்றன.

இயக்கவியல் கருப்பொருள்கள்   பல்வேறு தன்மையானவை மற்றும் பெரும்பாலும் நகர்ப்புற வாழ்க்கை, நிலப்பரப்புகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளின் சாதாரண காட்சிகளை சித்தரிக்கின்றன.

 இந்த அணுகுமுறை, கலைப் பள்ளியின் ஆதிக்கம் செலுத்திய வரலாற்று மற்றும் புராண கருப்பொருட்களிலிருந்து விலகியது. 

இயக்கம், அன்றாட வாழ்க்கையின் அழகை கொண்டாடும் ஒவ்வொரு கலைஞரின் தனிப்பட்ட வெளிப்பாடு மற்றும் தனிப்பட்ட உணர்வை வலியுறுத்தியது.

பாரம்பரிய கலை நிறுவனங்களால் கடுமையான விமர்சனம் மற்றும் நிராகரிப்புக்கு உள்ளான போதிலும், இயக்கவியல் ஓவியர்கள் தொடர்ந்து தங்கள் படைப்புகளை சுயாதீனமாக காட்சிப்படுத்தி, ஒரு அர்ப்பணிப்புமிக்க பின்தொடர்பைப் பெற்றனர்.

 காலப்போக்கில், அவர்களின் புதுமையான அணுகுமுறை நவீன கலையின் திசையை ஆழமாக பாதித்து, பின்னாளில் இயக்கவியல் பிந்தைய இயக்கம், ஃபாவிசம் மற்றும் சுருள் கலை போன்ற இயக்கங்களுக்கு வழிவகுத்தது.

இயக்கவியல் ஓவியம், பாரம்பரியத்திலிருந்து அதன் தீவிரமான விலகல் மற்றும் கலை உலகில் அதன் நீடித்த தாக்கத்திற்காக இன்றும் கொண்டாடப்படுகிறது. 

அதன் பாரம்பரியம் ஏராளமான நவீன கலைப் படைப்புகளின் துடிப்பான, வெளிப்படையான குணங்களில் காணப்படுகிறது.

Monday, 25 November 2024

புதிய விடியல்!- மதிபாலன்

 சென்னையின் நெரிசலான தெருக்களில், ஒரு சிறிய குடிசையில் குமரன் வாழ்ந்தான். அவன் உலகம், வண்ணங்களின் உலகம். பழைய கேன்வாஸில், நகரின் சலசலப்பை மறந்து, தன் கனவுகளை வரைந்தான். 

அந்த நகரின் மையத்தில், ஒரு கலைக்கூடத்தில் அனு பணிபுரிந்தாள். கலை உலகின் பிரகாசம் அவளைச் சுற்றி இருந்தது. ஆனால் அவளுக்குத் தெரியாமல், குமரனின் ஓவியங்கள் அவள் மனதில் ஒரு அழகிய உலகை வரைந்து கொண்டிருந்தன.

ஒரு நாள், கலைக்கூடத்தில் அவசரம். முக்கியமான ஒரு கண்காட்சிக்கு ஓவியம் தேவைப்பட்டது. அனு கவலையில் ஆழ்ந்தாள். அப்போதுதான் குமரன் அவள் கண்முன்  தோன்றினான்.

 அவன் வரைந்த ஓவியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. நகரத்தின் நவீனத்தன்மையும், பாரம்பரியமும் ஒன்றாக கலந்த அந்த ஓவியம், ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டது. அனுவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன.

"இதை எப்படி இவ்வளவு அழகாக வரைந்தீர்கள்?" என்று அனு கேட்டாள்.

"இந்த நகரம் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கிறது. அதன் நிறங்கள், அதன் மக்கள், அதன் கதைகள்... இதையெல்லாம் என் ஓவியத்தில் கொண்டு வர முயற்சித்தேன்," என்றான் குமரன்.

அந்த கண்காட்சியில் பல ஓவியங்கள் இருந்தன. ஆனால், குமரனின் ஓவியம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 ஒரு பத்திரிகையாளர், குமரனின் கதையை கேட்டு மிகவும்  கவரப்பட்டு அவனைப் பற்றி விரிவான ஒரு கவர் ஸ்டோரி எழுதினார். அது குமுதத்தில் வெளியானது.

அந்த கட்டுரை வெளியான பிறகு, குமரன் பிரபலமானான் . பல கலைக்கூடங்கள் அவனுடைய ஓவியங்களை வாங்க விரும்பின. 

  ஆனாலும் குமரன் ஏனோ தயங்கினான்.  தன் சிறிய குடிசையில் இருந்தே ஓவியம் வரைய விரும்பினான்.

ஒரு நாள், அனு குமரனை சந்திக்க வந்தாள். "உங்கள் ஓவியங்கள் மிகவும் அழகானவை. நான் ஒரு கலைக்கூடம் தொடங்க விரும்புகிறேன். அந்த கலைக்கூடத்தில் உங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்த விரும்புகிறேன்," என்றாள்.

குமரன் ஆச்சரியப்பட்டான். "நீங்கள் இதை செய்ய வேண்டிய அவசியமில்லை," என்றான்.

"இது எனக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் கலை உலகிற்கு தெரிய வேண்டும்," என்றாள் அனு.

அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கலைக்கூடத்தைத் தொடங்கினர். அந்த கலைக்கூடம், குமரனின் ஓவியங்களால் மட்டுமல்லாமல், பிற புதிய கலைஞர்களின் ஓவியங்களாலும் நிரம்பியது. குமரன் ஒரு சிறிய குடிசையில் இருந்து வெளிவந்து, உலகின் மிகப்பெரிய கலைஞர்களில் ஒருவரானான் .

கலைக்கூடத்தின் திறப்பு விழாவில், அனைவரும் குமரனைப் பாராட்டினர்.

 அனுவும் குமரனும் மேடையில் நின்று பேசினர். பேசும் போது, அனுவின் கண்கள் குமரனை நோக்கி இருந்தன. அவளுக்குத் தெரிந்தது, அவளுடைய எதிர்காலம் குமரனுடன் இணைந்திருக்கிறது என்பது. அவள் ஒரு கலைஞனாக மட்டுமல்ல, ஒரு மனிதனாகவும் குமரனை நேசிக்கிறாள் என்பதை உணர்ந்தாள்.

அந்த இரவு, விண்மீன்கள் மின்னியது. கலைக்கூடத்தின் கூரையில் இருந்து வானத்தைப் பார்த்து, குமரனும் அனுவும் சிரித்தனர். அவர்களின் வாழ்க்கை இப்போது புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருந்தது.

 

அதிசயக் காடு - மதிபாலன்

ஒரு காலத்தில், பச்சைப் பசேலென்று  இருந்த ஒரு காட்டின் நடுவே, அழகூர் என்ற ஒரு கிராமம் இருந்தது. 

இந்த கிராமத்தில் இரவில் மட்டும் ஒளிரும் அழகான பூக்கள் நிறைய இருந்தன. இந்த பூக்களின் ஒளியில் தான் கிராமமே ஒளிரும். கிராமத்து மக்கள் இந்த பூக்களை ரொம்பவும் விரும்புவார்கள்.

அந்த கிராமத்தில் யாழினி என்ற ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு ஒரு வித்தியாசமான திறமை இருந்தது. பூக்கள் என்ன பேசுகின்றன என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியும். பூக்கள் அவளிடம் பல ரகசியங்களைச் சொல்லும். 

ஒரு நாள் பூக்கள் அவளிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னது. அந்த காட்டிற்குள் யாரும் பார்க்க முடியாத ஒரு ரகசிய உலகம் இருப்பதாகச் சொன்னது. அந்த உலகில் கனவுகள் உண்மையாகும்.

யாழினிக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அந்த ரகசிய உலகத்தை பார்க்க ஆசைப்பட்டாள். பூக்கள் சொன்ன வழியில் யாழினி அந்த காட்டுக்குள் சென்றாள்.

 வழியில் அவளுக்கு பல வித்தியாசமான உயிரினங்கள் கிடைத்தன. ஞானம் மிகுந்த ஒரு ஆந்தை, தன் உருவத்தை மாற்றிக்கொள்ளும் ஒரு நரி, கொடிகளால் ஆன பாலத்தை காக்கும் ஒரு ராட்சசன் ஆகியோரை பார்த்தாள்.

நிறைய நாள் நடந்த பிறகு யாழினி ஒரு மிகப்பெரிய மரத்தின் முன்னால் நின்றாள். அந்த மரம் மிகவும் அழகாக இருந்தது. மரத்தின் பட்டை பல வண்ணங்களில் மின்னிக் கொண்டிருந்தது. அந்த மரத்தின் உள்ளே தான் ரகசிய உலகம் இருந்தது.

யாழினி மரத்திற்குள் சென்றாள். அவள் பார்த்தது எல்லாம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

வானம் பல வண்ணங்களில் இருந்தது. தரையில் பல வண்ண பூக்கள் பாடிக் கொண்டிருந்தன. இங்கே எல்லா கனவுகளும் உண்மையாகும்.

அந்த உலகில் யாழினி நிறைய நாட்கள் இருந்தாள். அங்கு இருந்த மக்கள் கனவுகளை உண்மையாக மாற்றுவார்கள். யாழினியும் அவர்களிடம் கனவுகளை உண்மையாக மாற்றும் ரகசியத்தை கற்றுக் கொண்டாள்.

 யாழினி மீண்டும் தன் கிராமத்துக்கு திரும்பினாள். தான் கற்றுக்கொண்ட ரகசியத்தை  தன்  கிராமத்து மக்களுடன் பகிர்ந்து கொண்டாள். அந்த கிராமம் முன்னதை விட மிகவும் அழகாக மாறியது.

யாழினியின் கதை பல வருடங்களுக்கு பிறகும் அந்த கிராமத்தில் சொல்லப்பட்டு வந்தது.